இதுபற்றி மேலும் தெரியவருவதாவது; கடந்த 2ஆம் திகதி வியாழன் மாலை 3 மணியளவில் பேசாலையைச் சேர்ந்த மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்ல தயாரான நிலையில் வழமைபோல் அவர்களின் மீன்பிடி படகுகள், பேசாலையில் நிலைகொண்டுள்ள இலங்கை கடற்படையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது பேசாலை மீனவர்கள் சிலருக்கும், பேசாலையில் உள்ள இலங்கை கடற்படையினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு, அது கடும் வாய்த்தர்க்கமாக மாறியது.
இந்தநிலையில் கடற்படையினரால் பேசாலை மீனவர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில், அவர் பேசாலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து இரண்டு தரப்பினர்களுக்கும் இடையில் சமரசம் ஏற்பட்ட நிலையில் அன்றைய தினம் பேசாலை மீனவர்கள் வழமைபோல் கடற்றொழிலுக்கு சென்றனர்.
இந்த நிலையில் பேசாலையைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் சம்பவதினம் வியாழன் மாலை 5.30 க்கு தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் அவர்களைப் படகு மூலம் பின் தொடர்ந்து, அவ்விடத்திற்கு வருகை தந்த இலங்கை கடற்படையினர், குறித்த பேசாலை மீனவர்களையும் அவர்களின் படகினையும் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தியதுடன் தலைமன்னார் கடற்பரப்பில் உள்ள மணல் தீடைக்கு மீனவர்களை செல்லுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
எனினும் கடற்படையின் உத்தரவினை ஆட்சேபித்த பேசாலை மீனவர்கள், தம்மை மேலும் விசாரணை செய்யவேண்டும் எனில், கடற்படை முகாமிற்கு அழைத்து செல்ல முடியும் எனவும், இவ்வாறான நிலையில் ஆள் அரவமற்ற மணல் தீடைக்கு அழைத்து செல்லவேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து இலங்கை கடற்படையினரிடம் கேள்வி எழுப்பினர்.
எனினும் அதனைப் பொருட்படுத்தாத கடற்படையினர், பேசாலை மீனவர்களை தீடைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் இலங்கை கடல் எல்லைக்குள் அமைந்துள்ள மணல் தீடையொன்றில் தரையிறக்கப்பட்ட பேசாலை மீனவர்கள், அங்கு கடற்படையினரால் தீவிர உடல் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அவர்களின் மீன்பிடி படகுகள் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து இதற்கு முன்னதாக பேசாலை மீனவர்கள் கடற்படையினருடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டவேளை அதனை திறன்பேசி மூலம் பதிவு செய்த கடற்படையினர் குறித்த வீடியோ காட்சியை மணல் தீடைக்கு எடுத்து வந்தநிலையில் அவ்வீடியோ காட்சியைப் பார்வையிட்டு, தீடையில் உள்ள மீனவர்கள் மத்தியில் கடற்படையினருடன் தர்க்கம் செய்த தம்மை அடையாளம் கண்டு தம் மீது கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவதினம் கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள், தமது மீன்பிடியை இடைநடுவே கைவிட்டு, சக மீனவர்களின் உதவியுடன் கரைதிரும்பி பேசாலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பேசாலை பங்குத் தந்தை மற்றும் மீனவர் சங்கம் ஊடாக கடற்படை உயர் அதிகாரிகளுக்கு முறையிடப்பட்டும் தாக்குதல் நடத்திய கடற்படையினருக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பேசாலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழர் தாயகமான வட மாகாண கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் அப்பாவி தமிழ் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொள்ளும் சம்பவங்கள், அண்மைக் காலங்களாக அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களினால், பல தடவைகள், இதுதொடர்பில் முறையிடப்பட்டும், இன்று வரை தமிழ் மீனவர்கள் மீதான கடற்படையினரின் தாக்குதல் நிறுத்தப்படவில்லை என பாதிக்கப்பட்ட மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.