ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை, அமைச்சர் தினேஸ் குணர்த்தன முன்மொழிந்தர். மனுஷ நாணயக்கார வழிமொழிந்தார். டலஸ் அழகப்பெருமவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிய, ஜீ.எல்.பீரிஸ் வழிமொழிந்தார்.
அனுரகுமார திசாநாயக்கவின் பெயரை விஜித ஹேரத் எம்.பி முன்மொழிந்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்றம் கூடியபோது, இந்த வேட்புமனுத் தாக்கல்கள் இடம்பெற்றன.
ஜனாதிபதியாக டளஸ் அழகபெருமா தெரிவானால், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவைப் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக அதன் தவிசாளர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதித் தெரிவுக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க சிறிலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகப் பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் அறிவித்துள்ளனர்.
ஆனால் பெரமுனக் கட்சியின் தலைவர் பேராசரியர் பீரிஸ், டளஸ் அழகபெருமாவை ஆதரிக்கவுள்ளார். இதனால் ராஜபக்ச குடும்பம் உருவாக்கிய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சிக்கள் பிளவுகள் ஏற்பட்டுள்ளன.
அதேவேளை, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் ஐம்பது உறுப்பினர்களில் சுமார் இருபது உறுப்பினர்கள், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
சஜித் அணியில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உப்பினர்கள். இதனால் ரணில் விக்கிரமசிங்க அவர்களை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளர்.
கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னரான சூழலில், தென்னிலங்கைப் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளுக்குள் பல முரண்பாடுகள் ஏற்பட்டுச் சிதறுண்டு வருவதைப் பகிரங்கமாகவே அவதானிக்க முடிகின்றது.