விவாதத்தில் அரசதரப்பு, எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் உரையாற்றினர். விவாதம் முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற வாக்கெடுப்பில் அவசரகாலச் சட்டம் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் பெறப்பட்டன. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி ஆகிய கட்சிகள் எதிராக வாக்களித்தன. முஸ்லீம் கட்சிகள் ஆதரவாக வாக்களித்தன.
இதேவேளை, காலி முகத்திடல் போராட்டத்தில் முன்னிலையாகச் செயற்பட்ட அமில ஜீவந்த பீரிஸ் என்ற அருட் தந்தையைக் கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
அருட் தந்தையைக் கைது செய்யுமாறு அரச உயர் மட்டத்தில் இருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து பொலிஸ் குழுக்கள் இரத்தினபுரியில் அருட்தந்தை தங்கியிருந்த தேவாலயத்தில் புதன்கிழமை மாலை திடீர் சோதனை நடத்தியுள்ளனர். ஆனால் அருட்தந்தை அங்கு இருக்கவில்லை.
இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் டுபாய் செல்வதற்காக ஸ்ரீலங்கன் ஏயார் லைனஸ் விமானத்தில் ஏறிய நிலையில் இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த இளைஞன், காலிமுகத்திடல் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டதுடன், கொழும்பு -07 இல் அரச தொலைக்காட்சியான ரூபவாகினி அலுவலகத்துக்குள் யூலை ஒன்பதாம் திகதி பிரவேசித்துச் சேவையை இடைநிறுத்தியிருந்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டதாக நீர்கொழும்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் புதன்கிழமை முற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், வீடு திரும்பிக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளரும், ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவருமான அந்தோனி வெரங்க புஷ்பிகா பலாத்காரமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தோணி வெரங்க பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் என்றும் நண்பர்கள் கூறுகின்றனர். குறித்த இளைஞன் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டமைக்கு நேரில் கண்ட சாட்சியங்கள் இருப்பதாகவும் அவருடைய நண்பர்கள் கூறுகின்றனர்.
ஆனாலும் பிந்திக் கிடைத்த தகவல்களின் படி குறித்த இளைஞன் கொழும்பு பொலிஸ் தலைமையகத்துக்கு அருகில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கோட்டைப் பொலிஸார் புதன்கிழமை இரவு தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை இடம்பெற்ற கைது செய்யப்பட்ட இளைஞன் பங்குபற்றிய ஆர்ப்பாட்டத்தில், அமெரிக்காவுக்கு வழங்கிய மின்சக்தித் திட்டம், இந்தியாவுக்கு வழங்கப்பட்ட எண்ணெய் குதங்கள் ஆகியவற்றை மீளப் பெறுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டது.