நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி தொகுதியை சீரமைக்க குறைந்தது 14 முதல் 16 நாட்கள் வரை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மின் உற்பத்திக்கான நிலக்கரிக்குப் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாலும் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்குப் பெருமளவு நிதி தேவைப்படுவதாலும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் பன்னிரெண்டு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் மின்சார சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, இலங்கையின் பொது கடனின் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நூற்று நான்கு தசம் ஆறு வீதமாக உயர்வடைந்துள்ளது.
2018-2022 ஆம் ஆண்டுக்கான நிதி முகாமைத்துவம் மற்றும் பொது கடன் கட்டுப்பாடு தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையின் விசாரணைகளில் இந்த விபரம் தெரியவந்துள்ளது.
டிசம்பர் 31, 2019 ஆம் திகதி வரை காணப்பட்ட மொத்த 86.8 வீத பொது கடன், கடந்த இரண்டு ஆண்டுகளில் பதினேழு தசம் எட்டு வீத வலுவான வளர்ச்சியைக் காண்பிப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கைத்தீவின் தனிநபர் கடனின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டில் 257 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்களைக் கண்காணித்துக் குறைக்கும் நடைவடிக்கைகளில் இலங்கை மத்திய வங்கி 2019 ஆம் ஆண்டு இறுதியில் இருந்து மத்திய வங்கி அல்லது நிதி அமைச்சு போதுமான அக்கறை எடுக்கவில்லை அல்லது போதுமான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.