தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க முடியாதென சஜித் பிரேமதாச கூறி வந்த நிலையில், அவருடைய கட்சியில் இருந்து இருபதுக்கும் அதிகமான உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகக் கூறியுள்ளனர்.
கட்சிகளாக அல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக இணைந்து கொள்ள விரும்பம் வெளியிட்டுள்ளதால் சாதாரண 113 பெரும்பான்மைப் பலத்தைப் பெற்று தேசிய அரசாங்கத்தை அமைக்க முடியுமென ரணில் விக்கிரமசிங்க மூத்த அமைச்சர்கள் சிலரிடம் கூறியுள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தில் கட்சிகளாக இணைவதை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக அரசாங்கத்தில் இணைந்து கொள்வதால் தேசிய அரசாங்கத்தை அமைப்பதே பொருத்தமானது என அரசியல் கட்சிகளும் ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துக்கூறியுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பத்தொன்பதாவது அரசியலமைப்புத் திருத்தத்தில் அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கையை முப்பதிலிருந்து நாற்பத்தி இரண்டாக அதிகரிக்கக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்து வரும் புதிய அமைச்சரவை பதவியேற்கும் எனவும் கூறப்படுகின்றது.