பிரதமர் தினேஷ் குணவர்தன இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயுடன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார உறவுகள், ஒத்துழைப்புக் குறித்து விரிவாக எடுத்துக் கூறியதாகப் பிரதமர் இல்லம் தெரிவித்துள்ளது.
சந்திப்பின்போது, கடன் மறுசீரமைப்பு வசதிகளை விரிவுபடுத்தல், நிவாரணப் பொருட்கள், உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு வழங்குவது தொடர்பாக இந்தியத் தூதுவர் விளக்கமளித்துள்ளார்.
ஏற்கனவே இந்தியா வழங்கிய உதவிகளுக்கும் ஒத்துழைப்புக்கும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன நன்றி தெரிவித்தார்.
சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம், திருகோணமலை எண்ணெய் சேமிப்பு தொட்டிகள், துறைமுகங்கள், புகையிரதங்களின் கூட்டுத் திட்டங்கள், விவசாயம் மற்றும் மீன்பிடி அபிவிருத்திக்கான உதவிகள் உட்பட எரிசக்தி துறையில் அதிக இந்திய முதலீடுகளின் சாத்தியக்கூறுகள் குறித்துச் சந்திப்பில் இருவரும் விவாதித்ததாகவும் அலரிமாளிகைத் தகவல்கள் கூறுகின்றன.
அவசியமான சர்வதேச நாணய நிதியத் திட்டத்தை இலங்கை பெறுவதற்குரிய வசதிகளை இந்தியா வழங்கியமைக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.