பிரித்தானிய உயர்ஸ்தானிகர், அமெரிக்க தூதுவர், ஜப்பானிய தூதுவர், இந்தியா உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோருடனேயே சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் சமகால அரசியல் நெருக்கடிகள், எதிர்கால பொருளாதார அபிவிருத்தி மற்றும் இலங்கைக்குக் கடன் வழங்குவது தொடர்பான செயற்திட்டங்கள் பற்றி ரணில் விக்கிரமசிங்க விளக்கம் அளித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
குறிப்பிட்ட தூதுவர்களுடன் ரணில் விக்கிரமசிங்க பேசிய விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் விரிவாக எதுவும் கூறப்படவில்லை.
கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் இச் சந்திப்புக்கு அழைக்கப்படவில்லை.
இலங்கைக்கு வழங்கிய கடன்களில் சுமார் இருபத்து இரண்டு பில்லியன்களை இலங்கை மீளச் செலுத்த வேண்டுமென சீனா கோரியுள்ள நிலையில், கடன் மறுசீரமைப்புத் தொடர்பாகச் சாதகமான முடிவுகள் இதுவரை எட்டப்படவில்லை.
சர்வதேச நாணய நிதியம் தொடர்ச்சியாக சீனா இந்திய ஆகிய கடன் வழங்கும் நாடுகளுடன் பேசி வருகின்றது. இந்த நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டுத் தூதுவர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார்.