ஈழத்தமிழர்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் ஆகியவற்றை வென்றெடுக்கும் நோக்கில் இந்த பேரணி இடம்பெற்று வருகின்றது.
இலங்கை ஒற்றையாட்சி அரசின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு நோக்கிய பேரணியைத் தடுக்க இலங்கைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் பெரும் கெடுபிடிகளில் ஈடுபட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாள் ஆரம்பித்த பேரணியின்போது இலங்கைப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் சிவில் உடைகளில் நின்று தங்களைப் படம் எடுத்ததாகப் பல்கலைக்கழக மாணவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகிய பேரணி, செம்மணிப் பிரதேசத்தைச் சென்றடைந்தது. அங்கிருந்து நாவற்குழி, சாவகச்சேரி, கொடிகாமம், மிருசுவில், பளை, ஆனையிறவு, பரந்தன் ஊடாக கிளிநொச்சியை சென்றடைந்து, முதலாம் நாள் உரிமைப் பேரணி இரணைமடுவில் முடிவடைந்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாள் பேரணி காலை ஒன்பது மணிக்குப் பரந்தனில் ஆரம்பமாகி புளியம்பொக்கணை, தர்மபுரம், விசுவமடு, உடையார்கட்டு, மூங்கிலாறு ஊடாக புதுக்குடியிருப்பை சென்றடைந்தது.
அங்கிருந்து முள்ளிவாய்க்கால் முற்றத்தை சென்றடைந்தது முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் சுடர் ஏற்றி வணக்க நிகழ்வு செலுத்தப்பட்டது. முல்லைத்தீவில் இரண்டாம் நாள் பேரணி நிறைவடைந்தது.
நாளை திங்கட்கிழமை அங்கிருந்து திருகோணமலை நோக்கி பேரணி இடம்பெறுமென மாணவர்கள் தெரிவித்துள்ளனர்