இலங்கை இராணுவப் புலனாய்வாளர்கள் சிலரும் சிவில் உடையில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்காணித்ததாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிங்கள மாணவர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
சுமார் ஒன்றரை மணிநேரமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் வவுனியா, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் இருந்து பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கைதிகளின் உறவினர்கள். பல்கலைக்கழக சிங்கள, தமிழ் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
அருட் தந்தை சத்திவேல், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். முடிவில் மைத்திரி- ரணில் அரசாங்கத்தைக் கண்டித்து அவர்கள் உரையாற்றினர்.
அனுராதபுரத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமையினால் போராட்டங்கள் தொடரும் என இலங்கைப் பொலிஸார் கருதுவதாக அருட்தந்தை சத்திவேல் கூறினார்.
கடந்த மூன்றாம் திகதி இலங்கை நீதியமைச்சர் தலதா அத்துக்கோரல, இலங்கைச் சட்டமா அதிபர் ஆகியோருடன் பேச்சு நடத்திய தமிழரசுக் கட்சி உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன், கைதிகளை விடுதலை செய்யும் விடயத்தில் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், அரசியல் கைதிகள் என்று எவருமே இல்லையென இலங்கையின் நீதியமைச்சர் தலதா அத்துக்கோரல தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை கன்டியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஒரு சிலரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
நுாற்றி ஏழு தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதன் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் எனவும் அருட்தந்தை சத்திவேல் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.