இதேவேளை, துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர்கள் கொல்லப்பட்ட பொலிஸார் ஒருவரின் கையைத் துண்டித்துள்ளதாக முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தக் கொலையின் பின்னணியில் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் இருப்பதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
தனிப்பட்ட பகைமையின் காரணமாகவே இந்தப் படுகொலை இடம்பெற்றிருக்கலாம் என பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
அதேவேளை, இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழு ஒன்று மட்டக்களப்புக்குச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸாரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கல்முனை நீலாவணையைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் தினேஸ் மற்றும் காலியைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
வவுணதீவு வலையிறவுப் பாலத்திற்கு அருகில் இருக்கும் பொலிஸ் வீதிச் சோதனைச் சாவடிக்கு வழமைபோல் நேற்று வியாழக்கிழமை இரவு இருவரும் கடமைக்குச் சென்றுள்ள நிலையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.