இந்தக் கப்பல்கள் இன்று சனிக்கிழமை முதல் ஏழாம் திகதி வரை இலங்கை கடற்பரப்பில் தரித்து நிற்கும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த இரு கப்பல்களும் இலங்கையின் காலி, திருகோணமலைப் பிரதேசங்களில் உள்ள இலங்கைக் கடற்படைத் தளத்திற்கும் பயணம் செய்யவுள்ளது.
ஒரு வாரகாலம் இலங்கைக் கடற்பரப்பில் தரித்து நிற்கவுள்ள இரண்டு இந்தியக் கப்பல்களும் இலங்கையின் கரையோர ரோந்துக் கப்பல்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடவுள்ளன.
அத்துடன் கரையோரப் பாதுகாப்பு ஆய்வு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும் எனவும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத் தகவல்கள் கூறுகின்றன.
இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகம் அனைத்து நாடுகளினதும் கப்பல்கள் வந்துசெல்லக் கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) கடந்த ஓகஸ்ட் மாதம் கொழும்பில் கூறியிருந்தார்.
அதனையடுத்து ஜப்பான் உதவியின் கீழ் பதினொரு மில்லியன் டொலருக்கும் அதிகமான பெறுமதியுடைய இரண்டு ரோந்து சேவைக் கப்பல்கள் இலங்கை கடல் பாதுகாப்பு திணைக்களத்திடம் செப்ரெம்பர் 13 ஆம் திகதி கையளிக்கப்பட்டிருந்தன.
ஜப்பான் கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கிக் கப்பல் உள்ளிட்ட இரண்டு போர்க்கப்பல்கள் செப்டெம்பர் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்தன.
அதேவேளை, திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய அமெரிக்காவின் ஆய்வு நடவடிக்கைகள் கடந்த செப்டெம்பா் இரண்டாம் திகதி ஆரம்பமாகியுள்ளன.
இந்த எண்ணெய்வள ஆய்வுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக கூர்மைச் செய்தித் தளத்தில் ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.