ஏ9 வீதியில் தாண்டிக்குளம் விவசாய பண்ணைக்கு முன்பாக சட்டவிரோதமான முறையில் வர்த்தக நிலையமொன்று அமைக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சோளம் விற்பனையில் ஈடுபட்டிருந்த சிங்களவர்கள் அதற்குள் உணவுப்பொருட்கள் மற்றும் தேனீர் என்பன விற்பனை செய்யப்பட்டு வருவதாக பிரதேச வர்த்தகர்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினர்.
எனினும் இந்த சட்டவிரோத வியாபார நடவடிக்கை குறித்து வவுனியா நகரசபை இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வவுனியா மாவட்டம் உட்பட அனைத்து இடங்களிலும் வர்த்தக நிலையங்கள் அமைப்பதற்கு அனுமதி பெறப்படவேண்டும் என்பதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் இவ்வாறு கடை அமைத்துள்ளமை தொடர்பாக வவுனியா நகரசபை நடவடிக்கை எடுத்துள்ளதா எனவும் வணிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வவுனியாவில் நகரசபையின் அசமந்தப் போக்கினால் சட்டத்திற்கு புறம்பான வகையில் வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்ட நிலையில் அவற்றை அகற்றுவதற்கு பெரும் முயற்சிகளை இளைஞர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இவ்வாறு சட்டவிரோதமாக வர்த்தக நிலையத்தை அமைப்பது மாத்திரமின்றி அதனுள் அனுமதி பெறாது சுகாதார சீர்கேடான முறையில் உணவுப்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பிலும் நகரசபை கவனம் செலுத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் உட்பட வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.