சர்வதேச மனித உரிமைகள் தினத்தில்

காணிகளுக்கான உரிமைப்பத்திரங்கள் மற்றும் இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளைக் கோரி மூதூரில் போராட்டம்

எங்கே 90 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதென மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி?
பதிப்பு: 2018 டிச. 10 14:32
புலம்: திருகோணமலை, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 10 15:26
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக மறுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி தமிழ் மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று இலங்கை இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறும் தமக்காக காணி உரிமைப் பத்திரங்களை வழங்குமாறும் வலியுறுத்தி கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மூதூர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது. மூதூரிலுள்ள சம்பூர் - கங்குவேலி படுகாடு காணிகளுக்கான ஆவணங்களை வழங்குமாறு வலியுறுத்தி மூதூர் பிரதேச செயலகத்தின் முன்னால் இன்று காலை ஜனநாயக மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பொது மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
 
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது திருகோணமலையில் இலங்கை இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழர்களது காணிகள் அனைத்தையும் உடனடியாக பொதுமக்களிடம் கையளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மக்களுடைய காணிகளுக்கான ஆவணங்களை வழங்காது இழுத்தடிப்பு செய்யப்படுவதை உடனடியாக நிறுத்தி துரிதமாக காணி ஆவணங்களை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

வன பரிபாலன திணைக்களம் தமது காணிகளுக்குள் எல்லைக் கல் நாட்டி தமது காணிகளில் விவசாயம் செய்வதற்கு தடையேற்படுத்தி வருவதாகவும் இந்த செயற்பாட்டை உடனடியாக நிறுத்துமாறும் இதன்போது மக்கள் சுட்டிக்காட்டினர்.

காணி உறுதி வழங்குவதற்கான காணிக்கச்சேரி கடந்த 5 ஆண்டுகளாக நடத்தப்பட்ட போதும் உறுதிகளை வழங்குவதில் திட்டமிட்டு இழுத்தடிப்பு செய்யப்படுவதாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

90 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தற்போதைய அரசாங்கம் தெரிவிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து காணி விடுப்புக்கோரி பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபடுகின்றமையானது காணிகள் விடுவிக்கப்படவில்லை என்பதனையே காட்டுகின்றது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தமிழ் மக்களது பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் என தேர்தல் காலத்தில் சூளுரைத்து தமிழ் மக்களது வாக்குகளால் ஆட்சியமைத்த மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் தற்போது அவர்களிடையே ஏற்பட்டுள்ள அதிகார மோகத்தினால் பிளவுண்டு காணப்படுகின்றது.

இதனால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் அநீதியே இழைக்கப்படுகின்றது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலையினால் தமிழ் மக்களது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை காணிப்பிரச்சனை அரசியல் கைதிகளின் விடுதலை என்பன போன்றன மூடிமறைக்கப்படுவதுடன் இதற்கான தீர்வு என்பது கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தமது அதிகாரங்களை அறிவைப் பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குகின்ற தமிழ் மக்களது வாக்குகளால் ஆட்சிக்கு வந்த தமிழ் புத்திஜீவிகள் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பிலும் ஆட்சி அதிகாரங்கள் மற்றும் கல்வி அறிவைப் பயன்படுத்தி விடுதலையைப் பெற்றுக்கொடுக்க முயற்சிக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமகன் ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினார்.