அடுத்த வருடத்துக்கான முழுமையான வரவுசெலவுத்திட்டம் முதல் வருடத்தின் இறுதிக் காலாண்டில் முன்வைக்கப்பட்டு அது தொடர்பான விவாதங்கள் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படுவது வழமை.
எனினும் இலங்கையில் கடந்த 50 நாட்களாக நிலவிய அதிகாரப் போட்டியினால் அரசியல் நடவடிக்கைகள் உட்பட அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்திருந்தன.
இதனால் வரவு செலவுத்திட்டம் தொடர்பான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
இவ்வாறான நிலையில் தான் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பிரதமர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்றிருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்தே வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தற்போது கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
இலங்கையில் பிரதமர் நியமனம் இடம்பெற்றதையடுத்து மீண்டும் புதிய அமைச்சரவை உருவாக்கம் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த மைத்திரி - ரணில் கூட்டரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மங்கள சமரவீரவிற்கு அதே அமைச்சுப் பதவி வழங்கப்படுமா அல்லது இலங்கையின் முன்னாள் நிதியமைச்சராக இருந்து பிணைமுறி மோசடிக் குற்றச்சாட்டினால் பதவி விலக்கப்பட்ட ரவி கருணாநாயக்கவிற்கு மீண்டும் நிதியமைச்சர் பதவி வழங்கப்படுமா என்பது தொடர்பில் பாரிய எதிர்பார்ப்பு காணப்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.