குறைந்தபட்சம் இறுதிக்கட்ட இன அழிப்பு போர் வரையான காலப்பகுதியில இறந்தவர்களின் பெயர்களைச் சேகரிப்பதன் மூலமாவது அவர்களிற்கு மரியாதை செலுத்த வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2009 ஆம் ஆண்டு போரின் போது ஏற்பட்ட உயிரிழப்புக்களை கணக்கிடுவதற்கு இந்த எண்ணிக்கை முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் மிக முக்கியமான நினைவுகூர்தலுக்கு இது அவசியமானது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் உள்நாட்டு இனஅழிப்புப் போர் நிறைவடைந்து ஒரு தசாப்தத்தின் பின்னரும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை என்னவென்பது எவருக்கும் தெரியாது எனக் குறிப்பிட்டுள்ள அமைப்புக்கள் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையும் தெரியாத நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளன.
படுகொலை செய்யப்பட்டவர்களின் இறுதி எண்ணிக்கையைக் கணிப்பிடுவதற்கு புள்ளிவிபர அணுகுமுறையைப் பயன்படுத்துவதே இதன் நோக்கம் என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 19 ஆம் திகதிகளில் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு இந்த முறை பயன்படுத்தப்பட்டது எனவும் இரு சர்வதேச அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன.
உலகெங்கிலும் உள்ள தமிழர்களை படுகொலை செய்யப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை உறுதிசெய்வதற்காக அவர்களது குடும்பத்தவர்கள் உறவினர்கள் மற்றும் அயலவர்களுடன் உரையாடுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என மனித உரிமைகள் தரவுகள் ஆய்வுக்குழுவின் தலைவர் பட்ரிக் போல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பல அமைப்புகள் ஏற்கனவே இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன என்று குறிப்பிட்டுள்ள அவர் பெயர்களைப் பதிவு செய்வதன் மூலம் ஏற்கனவே காணப்படுகின்ற தகவல்களைப் பதிவு செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார்.