இந்தத் தாக்குதலில், இலங்கை விமானப்படையின் 10 விமானங்கள் முற்றாக அழிக்கப்பட்டதுடன் 6 விமானங்கள் சேதமடைந்ததாக அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், இலங்கை அரசாங்கத்துக்கு நான்காயிரம் மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தத் தாக்குதலில் கரும்புலிகள் அணியைச் சேர்ந்த 21 பேரும், இலங்கை படையினர் 14 பேரும் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் பங்கெடுத்தவர்கள் என்று, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு முன்னாள் விடுதலைப் புலிகள் கைதுசெய்யப்பட்டு, அனுராதபுர மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
விமானப்படைத் தளம் மீதான தாக்குதலுக்கு விடுதலைப் புலிகளுக்கு தகவல் வழங்கினார்கள் என்று இவர்களுக்கு எதிராக தலா 3 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
புருசோத்தமன் அரவிந்தன், ராசவல்லவன் தபோரூபன் ஆகிய இரண்டு முன்னாள் புலிப் போராளிகளும், தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டிருந்தனர்.
முதலாவது இரண்டாவது குற்றச்சாட்டுகளை அரவிந்தன் ஏற்றுக் கொண்டிருந்தார். தபோரூபன், தன் மீதான முதலாவது மூன்றாவது குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்டிருந்தார்.
இதனடிப்படையில், இரண்டு பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, அனுராதபுர மேல்நீதிமன்ற நீதிபதி மகேஸ் வீரமன் நேற்று தீர்ப்பளித்தார்.
ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும், ஒரே நேரத்தில் அனுபவிக்கக் கூடியதாக, இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், ஏற்கனவே 8 ஆண்டுகள் சிறையில் இருந்த இவர்கள் இருவரையும் விடுதலை செய்யவும் நீதிபதி பணித்துள்ளார்.