ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கொழும்பு மருதானையைச் சேர்ந்த 41 வயதான கேசவன் சசிகுமார் என்ற சிறைக்கைதியே உயிரிழந்துள்ளார்.
சிறைக்கைதி உயிரிழந்தமை தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா மாவட்ட மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டு வருவதாக வவுனியா செய்தியாளர் கூர்மை செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் வவுனியா சிறைச்சாலை உட்பட இலங்கையில் உள்ள பல சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டும் சுகயீனம் காரணமாகவும் உயிரிழந்திருந்தனர்.
இவ்வாறான நிலையில் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக் கைதிகளை கடந்த வருடம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகள் அடித்து சித்திரவதைக்கு உட்படுத்தும் காணொளி வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக்க பெரேரா வேண்டுகோள் விடுத்ததுடன் , குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமூக, மதத்திற்கான மத்திய நிலையத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவித்தார்.
1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த கைதி ஒருவர் கண்ணாடி மற்றும் முட்களால் தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்தாக குறிப்பிட்ட அவர் 2011 ஆம் ஆண்டும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திலும் 20க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இரத்தினபுரி சிறைச்சாலையில் ஜீவானந்தன் எனப்படும் கைதி ஒருவர் கைகள் துண்டிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவமும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்க்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு சிறைச்சாலை பொறுப்பதிகாரிகளால் இழைக்கப்பட்டுள்ள சித்திரவதையை வெளிப்படுத்தும் காணொளி ஆதாரம் கிடைத்துள்ளது.
கைதிகளைப் பார்வையிட வரும் உறவுகள் சிறைச்சாலை அதிகாரிகளால் முறைகேடாக நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிறையில் இருந்த கைதிகள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.
இந்நிலையிலேயே ஆர்ப்பாட்டம் நடத்திய கைதிகள் மீது சிறைச்சாலை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதாக அவர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டினார்.