இதன்போது கண்காணிப்புக்காகச் சென்றவர்களில் ஏழு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூர்மையின் முல்லைத்தீவு செய்தியாளர் தெரிவித்தார்.
நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி தொழில் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்துக்கு கடற்தொழிலாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதற்கமைய, கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகள் மற்றும் வட்டுவாகல், நீராவிப்பிட்டி, கிச்சிராபுரம் மீனவ சங்கங்களைச் சேர்ந்தவர்கள் நந்திக்கடலின் மேற்கு பகுதியான வற்றாப்பளை தொடக்கம் கேப்பாபுலவுக்கு இடைப்பட்ட செம்மன் மோட்டைப்பகுதியில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பிடிப்பதற்காக சென்றபோது அங்கிருந்த மீனவர்களுக்கும் சென்ற அதிகாரிகள் மற்றும் கடற்தொழிலாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
செம்மன் மோட்டை பகுதி மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளை பார்வையிட விடாமல் மறுத்துள்ளதுடன் ஒன்று திரண்டு அங்கு சென்ற மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மீது பொல்லுகளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து மேலதிகமாக சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்வரப்பட்டதாக முல்லைத்தீவு செய்தியாளர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது மீனவ சங்கங்களைச் சேர்ந்த ஏழு அங்கத்தவர்கள் அடிகாயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக முல்லைத்தீவு செய்தியாளர் குறிப்பிட்டார்.