தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த காலத்தில் நிலைகொண்டிருந்த
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மாமுனை கடற்கரையை அண்மித்த பகுதியில் ஆயுதங்கிடங்கு - அகழ்வு ஆரம்பம்
பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிப்பு
பதிப்பு: 2019 பெப். 18 12:59
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு:
பெப். 18 14:45
நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த காலத்தில் நிலைகொண்டிருந்த யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனை கடற்கரையை அண்மித்த பகுதியில் பாரிய ஆயுதங்கிடங்கு காணப்படுவதாக பளை பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்ததாக தெரிவித்து அப்பகுதி இலங்கைப் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் அங்கு பாரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை காலை முதல் இயந்திரங்களின் உதவியுடன் ஆயுதங்களைத் தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூர்மையின் யாழ்ப்பாண செய்தியாளர் குறிப்பிட்டார்.
கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த குறித்த பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு உள்ளதாக பளை பொலிஸாருக்கு இரகசியத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக தேடுதல் நடத்தப்பட்டுள்ளதுடன் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு பகுதி அடையாங்காணப்பட்டுள்ளது.
தொடர்ந்து பலத்த பாதுகாப்பின் மத்தியில் கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி குழிதோண்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை எவ்வித ஆயுதங்களும் மீட்கப்படவில்லை என யாழ்ப்பாண செய்தியாளர் குறிப்பிட்டார்.
எனினும் தொடர்ந்தும் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.