வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை கிளிநொச்சியில் தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுவரும் கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளதாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சர்வமதத் தலைவர்கள், அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், நிறுவனம் சார்ந்த பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் மற்றும் சர்வதேச சமூகத்திடமும், தமது உறவுகளுக்கான தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரியே இக் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கவனயீர்ப்பு போராட்டத்தைத் தொடர்ந்து, மாபெரும் பேரணி ஏ9 வீதி ஊடாக நகர்ந்து கிளிநொச்சி டிப்போச் சந்தியை அடைந்து இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளிடம் மகஐர் ஒன்று கையளிக்கப்படும் எனவும், இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் தமிழர் தாயகத்தின் வடபகுதியில் பூரண கதவடைப்புடன் கூடிய ஹர்த்தாலை அனுஷ்டித்து தமது கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முழுமையான பங்களிப்பை வழங்குமாறு கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.