கொழும்பு-07இல் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த அவர், இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை கடுமையாக விமர்சித்தார்.
இலங்கையின் வடபகுதியில் மாத்திரமல்ல ஏனைய மாகாணங்களிலும் நுண்கடன் திட்டத்தால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வட மாகாணத்திற்கு மாத்திரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
எனினும் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில் நுண்கடன் திட்டத்தால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு முறையான திட்டங்கள் எதுவும் இல்லை என தினேஸ் குணவர்த்தன சுட்டிக்காட்டினார்.
ஆகவே மக்களை அரசாங்கம் ஏமாற்றுகின்றது. நடப்பு ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் பற்றாக்குறை கூடுதலாகவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவித் திட்டங்களும் உரிய முறையில் கிடைக்கவில்லை.
அந்த நிதி மீண்டும் கிடைக்கும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர முன்னர் கூறியிருந்தார். ஆனால் சர்வதேச நாயண நிதியத்தின் நிதியுதவி கிடைத்தமை பற்றிய எந்தவொரு தகவலும் வரவு செலவுத் திட்டத்தில் இல்லை என்றும் தினேஸ் குணவர்த்தன கூறியுள்ளார்.
அதேவேளை, நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கனவு மாளிகை என ஜே.வி.பி. குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.