எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை அதிபர்கள், ஆசிரியர்கள் இணைந்து முன்னெடுக்கவுள்ள இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரையும் ஒன்றிணையுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் ஆகியோர் கூட்டிணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.
முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் போராட்டம் தொடர்பாக அறிக்கை ஒன்றினையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால்களும், கடையடைப்புக்களும் காலத்தின் தேவை கருதி நடைபெறுகின்றன. அவற்றுக்குத் தீர்வு கிடைக்க வேண்டும் என எமது ஆதங்கங்களையும், அநீதிகளையும் உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றோம்.
அதன் ஒரு செயற்பாடாக கடந்த மாதம் 25 ஆம் திகதி நடைபெற்ற வடமாகாணம் தழுவிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் நாம் முழுமையாக பங்குகொண்டோம். அவ்வாறே அடக்குமுறைகளுக்கும், அநீதிகளுக்கும் எதிரான போராட்டங்களுக்கு நாம் பூரண ஆதரவையும் வழங்கி வருகின்றோம்.
அதேபோன்று குறைந்த வேதனங்களோடு பணியாற்றுகின்ற அதிபர்கள், ஆசிரியர்கள் தமது வேதனங்கள் அதிகரிக்கப்படவேண்டும் எனவும், அவசியமற்ற சுமைகள் நீக்கப்படவேண்டும் எனவும், மத்திய அரசு கல்விக்காக ஒதுக்கும் நிதி போதுமானதாக இல்லை எனவும் பல போராட்டங்களை முன்னெடுத்தும் எந்தப் பயனும் இல்லை.
எதிர்வரும் புதன்கிழமை (13) ஆசிரியர்கள், அதிபர்களின் சம்பளத்தை உயர்த்துதல், ஆசிரியர்கள் மீது செலுத்தப்படும் தேவையற்ற நெருக்கீடுகளை அகற்றுதல், மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்காக 6 வீதம் ஒதுக்குதல் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை மாணவர்களும், பெற்றோரும் புரிந்து கொள்ளும் விதத்தில் அதிபர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலைக்குச் சென்று காலை 8 மணிமுதல் 8.30 மணிவரை கைகளில் கறுப்புப் பட்டி அணிந்து பாடசாலை நுழைவாயில் அமைதியாக ஒன்றுகூடி தமது கவனயீர்ப்பை வெளிப்படுத்தி, அன்றைய நாள் முழுவதும் கறுப்புப் பட்டியுடன் கடமையில் ஈடுபடுவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது. இக்கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அனைத்துத் தொழிற்சங்கங்களையும் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.