மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் நாவற்குளத்திற்குச் செல்லும் பிரதான சந்தியில் உள்ள தனியாரின் காணியில் கடந்த பல வருடங்களாக முகாமிட்டு தங்கியிருந்த இலங்கை இராணுவத்தினர் பின்னர் அண்மையில் அங்கிருந்து வெளியற்றப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த காணியில் அப்பகுதியில் உள்ள இராணுவ முகாம் மற்றும் இராணுவ காவலரண்களில் உள்ள இராணுவத்தினரது கழிவுப் பொருட்கள் எடுத்துவரப்பட்டு எரியூட்டப்படுவதாக பிரதேச மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு தெரிவித்தனர்.
குறிப்பாக இராணுவத்தினர் பயன்படுத்திய உடைகள், தலைக்கவசங்கள், குறிப்பேடுகள், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இதன்போது எடுத்துவரப்பட்டு எரிக்கப்படுவதாகவும் இதனால் அயலில் உள்ள தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் கூர்மை செய்தித் தளத்திற்கு சுட்டிக்காட்டினர்.
இந்த நடவடிக்கையை இராணுவம் தொடர்ந்து மேற்கொள்ள இடமளிக்காது விரைவாக நடவடிக்கை எடுப்பதுடன் மக்கள் குடியிருப்பை பாதுகாக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போன்ற இராணுவத்தினரின் செயற்பாடு கடந்த காலங்களில் கிளிநொச்சியிலும் மேற்கொள்ளப்பட்டது. அதாவது இராணுவத்தினரின் கழிவுப் பொருட்கள் மக்கள் குடியிருப்புக்களுக்கு அண்மையில் கொட்டப்பட்டதுடன் அக் கழிவுகளை உண்ட கால்நடைகள் உயிரிழந்ததுடன் பிரதேச மக்கள் நோய்வாய்ப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.