முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற போராட்டத்தில் பலர் கலந்துகொண்டனர். முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக ஒன்று கூடிய மக்கள், அங்கிருந்து பேரணியாக வட்டுவாகல் பாலத்தை நோக்கிச் சென்றனர்.
அங்கு ஒன்று கூடிய போராட்டக்காரர்கள், இலங்கை அரசாங்கத்தைக் கண்டித்து ஆவேசமாகக் கோசம் எழுப்பினர்.
சுலோக அட்டைகளையும், பதாதைகளையும் தமது கைகளில் ஏந்தியிருந்த மக்கள் அமைதியான முறையில் தமது கோரிக்கையை முன்வைத்தனர். சர்வதேச சமூகம் பொறுக் கூற வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
வட்டுவாகலில் வைத்து இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே எனவும் உண்மையைக் கண்டறிய சர்வதேச விசாரணையே அவசியமெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோசம் எழுப்பினர்.
நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் ஓயாதென்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டனர்.
பெருமளவு இலங்கைப் பொலிஸாரும், இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரும் தங்களைக் கண்காணித்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் பலர் தெரிவித்தனர்.