சர்வதேசப் புலனாய்ப்பு பிரிவினரும் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்புக்கு வரவுள்ளதாகவும் கூறிய அவர், இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு பேசியதன்படி வெளிநாடுகளின் படைத்துறைப் புலனாய்வு நிபுணர்கள் கொழும்புக்கு வருகைதரவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, அமெரிக்கப் புலனாய்வுத் துறை நிபுணர்களோடு சேர்ந்து இந்தியப் புலனாய்வு உயர் அதிகாரிகளும் கொழும்புக்கு வரவுள்ளதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் இந்தியப் புலனாய்வு உயர் அதிகாரிகள் வரவுள்ளமை தொடர்பாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ ஊடகங்களுக்கு எதுவுமே கூறவில்லை.
இதேவேளை, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் உயர்மட்ட அரசியல்வாதிகள் சிலரும் கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படும் வேறு சில முஸ்லிம் உயர்மட்ட அரசியல்வாதிகளும் இலங்கைப் புலனாய்வுத் துறையினரால் பல மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
இந்தக் குண்டுவெடிப்பில் 290 பேர் கொல்லப்பட்டும், ஐநூறுபேர் காயமடைந்துமுள்ளனர். சந்தேகத்தின் பேரில் 52 பேர் இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.