போர்க்கால குற்றத்தை மூடி மறைக்க இராணுவத்திற்கான முன்னுரிமை

தமிழ் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் பிரதான எதிரியான இராணுவ அதிகாரிக்குப் பதவி உயர்வு

வழக்கு யாழ் மேல் நீதிமன்றத்தில் இருந்து கொழும்புக்கு மாற்றப்படலாம் என சந்தேகம்
பதிப்பு: 2018 ஜூன் 16 15:23
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 18 00:07
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தின் கட்டளை அதிகாரியாக செயற்பட்டு தமிழ் இளைஞர்கள் யுவதிகள் பலர் காணாமல் ஆக்கப்பட்டதற்கும் கொல்லப்பட்டமைக்கும் காரணமான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன, இலங்கை இராணுவத்தின் காலாட் படையின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். 1996ஆம் ஆண்டு யாழ் நாவற்குழி முகாமின் பொறுப்பதிகாரியாக இவர் பதவி வகித்தபோது தமிழ் இளைஞர்கள் 24 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். அது தொடர்பான வழக்கில் இவர் முதலாவது எதிரியாக யாழ் மேல் நீதிமன்றத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
 
இந்த நிலையில், இலங்கை முப்படைகளின் தளபதியான இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த நியமனத்திற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

இலங்கைப் படையினரின் சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன, காலாட்படையின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலாட்படையின் பணிப்பாளர் நாயகத்தின் பணியகத்தில் இவர் தனது பணியை ஆம்பித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தமிழர் தாயகத்தில் போர் நடைபெற்றபோது, பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்திருந்த இலங்கையின் தற்போதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன நெருங்கிய தொடர்பை பேணிவந்தார்.

இதன் காரணத்தினால் கடந்த மூன்று ஆண்டுகளில் பதவி உயர்வுகளைப் பெற்று இறுதியாக பூநகரியில் உள்ள 66 ஆவது டிவிசன் கட்டளை அதிகாரியகவும், மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன பணியாற்றி தற்போது இலங்கையின் காலாட்படையின் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

துமிந்த கெப்பிட்டிவலன்ன, தற்போது அமைச்சராகவுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் நெருங்கிய நண்பராகவும் உள்ளார்.

யாழ் நாவற்குழியில் இவரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 12 இளைஞர்களின் உறவினர்கள், 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த 12 பேரில் ஒன்பது பேர் ஏற்கனவே 2002ஆம் ஆண்டு யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

ஆனால், அந்த மனுக்களின் விசாரணைகளை யாழ்ப்பாணத்தில் நடத்தக் கூடாதென, அப்போது யாழ் மாவட்டத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, 2003ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை அடுத்து, அந்த வழக்கு அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டது.

இதனால் வேறொரு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை இன்னுமொரு நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாதென கூறி, 2017 ஆம் ஆண்டு தாக்கல் செய்த 12 பேரில் ஒன்பது பேரின் மனுக்களை நீதிபதி எம். இளம்செழியன் தள்ளுபடி செய்தார். ஏனைய மூன்றுபேரின் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

இந்த வழக்கின் முதலாவது எதிரியாக துமிந்த கெப்பிட்டிவலன்ன, இரண்டாவது எதிரியாக இராணுவத் தளபதி, மூன்றாவது எதிரியாக சட்ட மா அதிபர் ஆகியேர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி யாழ் மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றபோது. இலங்கை சட்டமா அதிபர் திணைக்கள மூத்த சட்டத்தரணிகள் இவர்கள் சாரபில் முன்னிலையாகியிந்தனர்.

இந்த நிலையில், மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன காலாட் படையின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டதனால், அந்த வழக்கு விசாரணையும் நிறுத்தப்படலாம் அல்லது கொழும்புக்கு இடமாற்றப்படலாம் என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி கொழும்பு கல்கிஸையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையில் மறை முகமாக உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாஜ ராஜபக்ச முன்வைத்தார்.

இதனால் துமிந்த கெப்பிட்டிவலன்ன வெளிநாடு சென்றிருந்தார். பின்னர் 2015 ஆம் ஆண்டு மைத்திரி ரணில் அரசாங்கம் ஆட்சியமைத்ததும் இலங்கைக்குத் திரும்பிய இவர், மீண்டும் இராணுவ சேவையில் இணைந்து கொண்டார்.

இலங்கை இராணுவத் தலைமையகத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளராக 2015 ஆம் ஆண்டு பதவி வகித்தார். 2017ஆம் ஆண்டு மே மாதம் மேஜர் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டார்.

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை யுத்தத்தில் இவருடைய பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

இதேவேளை, போர்குற்றச் செயல்களில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்தின் அதிகாரிகளுக்கான பதவி உயர்வுகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை நாடாளுமன்ற விவாதம் ஒன்றில் விசனம் வெளியிட்டிருந்தார்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்கள் வாக்களித்ததால், மஹிந்த ராஜபக்சவை விட இரண்டு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன, இன்று தமிழர் தாயகப் பிரதேசங்களில் இராணுவ செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குவதாக வடமாகாண சபை உறுப்பினா்கள் பலரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இறுதிப் போரில் ஈடுபட்டு போர்க்குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட இலங்கைப் படை உயர் அதிகாரிகள் பலருக்கு ஏற்கனவே பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. வேறு சிலர் பதவி உயர்வு பெற்று வெளிநாடுகளிலும் பணியாற்றுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.