பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள மாணவர்களை நிரந்தரமாக விடுவிக்க வலியுறுத்தி

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் கல்விச் செயற்பாடுகளைப் புறக்கணிப்பதாக அறிவிப்பு

பல்கலைக்கழக நிர்வாகம் இடையூறு ஏற்படுத்த முயன்றால் பல்கலைக்கழகம் முற்றாக முடக்கப்படும் என எச்சரிக்கை
பதிப்பு: 2019 மே 22 10:21
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 22 10:35
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Jaffna
#Universityofjaffna
#UOJ
#Lka
#Studentunion
#Srilanka
#Easterattacklka
#LTTE
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவபீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகியோரை அவர்களது வழக்குகளிலிருந்து நிரந்தரமாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் அனைத்துக் கல்விச் செயற்பாடுகளையும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக நேற்றுத் திங்கட்கிழமை திகதியிடப்பட்ட கடிதமொன்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் சார்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
 
குறித்த கடிதத்தில், மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவபீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகியோரை அவர்களது வழக்குகளிலிருந்து நிரந்தரமாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், மாணவர் நலன்சார்ந்த பிரச்சனைகள் தொடர்பில் பல தடவைகள் எழுத்துமூலமாக வலியுறுத்தியும் மற்றும் நேரடியாக கலந்துரையாடல்கள் மேற்கொண்டும் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாத நிலையில், மாணவர் நலன்சார்ந்த பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வுகாண வலியுறுத்தியும், 22.05.2009 முதல் கல்விச் செயற்பாடுகளைப் புறக்கணிக்கத் தீர்மானிக்கின்றோம்.

மேற்படி மாணவர் ஒன்றியத்தின் பகிஸ்கரிப்பு நடவடிக்கைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் இடையூறு ஏற்படுத்த முயன்றால், முற்றாக பல்கலைக்கழகத்தை முடக்கி மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இலங்கை இராணுவத்தினரும் இலங்கைப் பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதலில், மாணவர் ஒன்றிய அலுவலக அறையில் இருந்து, புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட மாவீரர்களின் ஒளிப்படங்கள் மீட்கப்பட்டிருந்தன.

இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இரு மாணவர்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டதுடன், யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் மருத்துவபீட மாணவனான ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக உயிர்நீத்த தியாகி திலீபனின் புகைப்படம் சிற்றுண்டிச்சாலையில் காணப்பட்ட குற்றச்சாட்டில் சிற்றுண்டிச்சாலை நடத்துனரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

கைதுசெய்யப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகியோர் இரு தடவைகள் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதும் அவர்களுக்கான பிணை மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கு மூன்றாவது தடவையாக கடந்த 16 ஆம் திகதி வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மாணவர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் பீற்றர் போல் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.