ஆனால் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம, 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஈழப் போர் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான சூழலில், போரினால் ஏற்பட்ட பக்க விளைவுகளுக்குக் கூட இதுவரை தீர்வை முன்வைக்கவில்லை.
இந்த நிலையில் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரம் உயர்த்தும் கோரிக்கைகளை ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான கண்ணோட்டத்தோடு ஒப்பிட்டு இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் தட்டிக் கழிக்கின்றது.
அத்துடன் தமிழ்- முஸ்லிம் உறவை கிழக்கு மாகாணத்தில் மேலும் சிதைப்பதற்கு ஏற்ற முறையிலும் இந்த விவகாரத்தை சிங்கள ஆட்சியாளர்கள் கையாண்டு வருகின்றனர்.
இவ்வாறானதொரு நிலையிலேதான், இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலின் பின்னரான சூழலில், இலங்கைத் தீவில் இருந்து முஸ்லிம்களை முற்றாக ஓரம்கட்டுவதற்காக தமிழ் மக்களை முஸ்லிம் மக்களோடு மோதவிடும் சூழ்சி ஒன்றை இலங்கை அரச இயந்திரத்தின் ஆதரவோடு பௌத்த குருமார் வகுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதன் பரீட்சார்த்த நகர்வுதான் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரும் போராட்டங்கள். இதற்கு ஆதரவாகப் போர்க்காலத்தில் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்கியவரும், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பிரதியமைச்சராகப் பதவி வகித்தவருமான கருணா எனப்படும் விநாயகமூத்தி முரளிதரனும், கடந்த ஒக்ரேபர் மாதம் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் போது மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து மகிந்த தலைமையிலான அரசாங்கத்தில் பிரதியமைச்சர் பதவி வகித்திருந்த வியாழேந்திரன் ஆகியோரும் செயற்படுகின்றனர்.
ஆகவே இந்தப் போராட்டம் எந்தளவு தூரம் நியாயமானதாக இருக்கும் என்ற கேள்விகள் தமிழ் மக்கள் மத்தியில் எழாமலில்லை. கிழக்கில் கிஸ்புல்லாஹ், அமீர் அலி போன்ற ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுக்காக சாதாரண முஸ்லிம் மக்கள் அனைவரையுமே ஒட்டுமொத்த எதிரியாகப் பார்ப்பது, தமிழர்களின் அரசியல் விடுதலைப் பயணத்துக்கு ஆரோக்கியமானதல்ல.
எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் விடுதலைப் போராட்டம் ஒன்றைத் தொடர்ச்சியாக நடத்தி வரும் தமிழச் சமூகம், இதனை பட்டறிவின் ஊடகச் சிந்நதிக்கத் தலைப்பட வேண்டும்.
பௌத்த பேரினவாதம் முஸ்லிம் மக்களை நேரடியாகத் தாக்கினால் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் மற்றைய சமூகம் ஒன்றை இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் ஒதுக்குகின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் சர்வதேச மட்டத்தில் எழுந்துவிடும். அது ஜெனீவா வரை போய்ச் சேரும் நிலையும் ஏற்படலாம்.
ஆகவே அவ்வாறான குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்கவே பௌத்த- இந்து உறவு என்று கூறிக் கொண்டு தமிழ் மக்களை முஸ்லிம் மக்களுக்கு எதிராகத் தூண்டி விடுகின்ற அணுகுமுறை ஒன்றை பௌத்த குருமார் ஊடாக சிங்கள ஆட்சியாளர்கள் கையாளுகின்றனர்.
2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில். தமிழ் மக்களுக்கான தலைமை தாங்களே என்று, தங்களைத் தாங்களே மார்தட்டிக் கொள்ளும் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலவீனமே கிழக்கில் இன்று ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு முழுமையான காரணம் என்ற கருத்துக்களும் உண்டு.
இவ்வாறன சூழலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் அமைதிகாப்பது ஆரோக்கியமானதல்ல. சரியான நிலைப்பாட்டை தமிழ் மக்களிடம் சொல்ல வேண்டும். இல்லையேல் கிஸ்புல்லாஹ், ரிஷரட் பதியுதீன் போன்ற ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் அதிருப்பதியடைந்துள்ள தமிழ் மக்கள் விரும்பியோ விரும்பாமலோ கருணா போன்ற சிங்கள பௌத்த பேரினவாதிகளோடு கூட்டுச் சேர்ந்துள்ள சில்லறைகளின் அரசியல் அரவனைப்புக்குள் சென்றுவிடும் அபாயம் உள்ளது. இதற்குப் பக்கபலமாக இந்துத்துவா அமைப்பும் உள்ளது.
எனவே, தமிழ் மொழியிலான காட்சி ஊடகங்களும், பிரதான தமிழ் மொழி நாளேடுகளும், வார இதழ்களும் சிங்களப் பேரினவாதத்தின் பிரித்தாளும் தந்திரோபாயங்களை புடம்போட்டுக் காண்பிக்க வேண்டும். மேய்ப்பன் இல்லாத மந்தைகளாக தமிழர்கள் மாறும் நிலைக்கு இட்டுச் செல்லக் கூடாது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்துத்தவ அமைப்புத் தான், மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் சைவத் தமிழ் மக்களையும் கிறிஸ்தவத் தமிழ் மக்களையும் மோதவிட்டு, பௌத்த பேரினவாதத்திற்குத் தீனி போட்டுக் கொடுத்தது என்பதை மந்துவிடவும் முடியாது.
எனவே தமிழ்த் தேசியக் கோட்பாட்டைச் சிதைக்கவும். ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பிரதான அரசியல் சிந்தனையில் இருந்து திசை திருப்பவும் கையாளப்படும் இந்தப் பிரித்தாளும் தந்திரோபாயங்களை இனம் கண்டு. இந்துத்துவா போன்ற அமைப்புகளைச் செயலிழக்கச் செய்ய வேண்டுமென சமுக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனார்.
திருகோணமலை கன்னியாவில் ஈழத் தமிழர்களின் பாரம்பரியக் காணிகள், பிள்ளையார் ஆலயம் இருந்த இடங்கள் அழிக்கப்பட்டு, அடையாளங்களை மாற்றி, அங்கு பௌத்த விகாரை கட்டுவதற்கு அல்லது பௌத்த சமய அடையாளத்தோடு சேர்ந்து சைவத் தமிழ் பாரம்பரியங்களை இந்து என்ற அடையாளங்களோடு பேணலாம் என்ற திட்டங்கள் வகுக்கப்படுவதன் பின்னணியிலும் இந்துத்துவா அமைப்பு இருப்பதாகவே சந்தேகிக்கப்படுகின்றது.