தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தின் கட்டளை அதிகாரியாக 1996 ஆம் ஆண்டு செயற்பட்டு தமிழ் இளைஞர்கள் யுவதிகள் பலர் காணாமல் ஆக்கப்பட்டதற்கும் கொல்லப்பட்டமைக்கும் காரணமான மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன, கடந்த ஆண்டு யூன் மாதம் இலங்கை இராணுவத்தின் காலாட் படையின் பணிப்பாளர் நாயகமாக மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் சவேந்திர சில்வாவும் இலங்கை இராணுவத் தளபதியாகப் பதவியேற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டு அமெரிக்கர, இந்தியர போன்ற சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார்.
மகிந்த ராஜபக்சவை பதவி கவிழ்த்துவிட்டுப் புதிய அரசியல் கலாசாரம் என்ற பெயரில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மைத்திரி - ரணில் அரசாங்கம் உருவாக்கப்பட்டிருந்தது. ஈழத் தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அன்று அமோக ஆதரவு வழங்கியிருந்தது.
ஆனால் நான்கு ஆண்டுகள் சென்ற நிலையில் மைத்திரி - ரணில் அரசாங்கம் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த யூலை மாதம் கூறியிருந்தார். சட்டத்தரணி சுமந்திரனும் அவ்வாறு தெரிவித்திருந்தார்.
மைத்திரி - ரணில் அரசாங்கத்தை நம்பி இந்தியாவுடனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர்த்துக் கொண்டதாகவும் சுமந்திரன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் சென்ற நிலையில் அவருடைய நெருங்கிய சகாவான சவேந்திர சில்வா இலங்கை இராணுவத் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த நியமனத்தைக் கண்டித்துள்ளது. அதேவேளை, கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வதில் பின்னணியாகச் செயற்பட்ட கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னாவும் இந்த நியமனத்தைக் கண்டித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச மீது தமிழ் இனப்படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் ஈழத் தமிழ் மக்களினால் சர்வதேச அரங்கில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்சவை இலங்கையின் ஜனாதிபதிக் கதிரையில் அமர்த்தி அழகு பார்க்கத் துடிக்கும் அமெரிக்கா, சவேந்திர சில்வா இலங்கையின் இராணுவத் தளபதியாகப் பதவியேற்றமைக்கு கண்டனம் வெளியிட்டுள்ளமை குறித்துக் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
1984ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட சவேந்திர சில்வா, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் நண்பராகவும் உள்ளார்.
சரத் பொன்சேகா இலங்கை இராணுவத் தளபதியாக பதவி வகித்திருந்தபோதே சவேந்திர சில்வா 2009 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகப் பதவி வகித்திருந்தார்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் உதவி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் சர்வதேச அரங்கில் ஏற்பட்ட எதிர்ப்புகள் சர்ச்சைகளையடுத்து இலங்கை இராணுவத்தின் 53 ஆவது தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதி இலங்கை இராணுவத்தின் பிரதானியாக சவேந்திர சில்வா, மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர்த்தப்பட்டு இன்று இலங்கை இராணுவத் தளபதியாகப் பதவியேற்றுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவையே மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரிக்கும் என்பதன் வெளிப்பாடாகவே சவேந்திர சில்வாவின் பதவி உயர்வு அமைந்துள்ளதாகக் கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.
சவேந்திர சில்வாவிற்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய 137 பக்கங்களைக் கொண்ட ஆவணம் ஒன்று தென் ஆபிரிக்காவைத் தளமாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு வெளியிட்டிருந்தது.
இந்த ஆவணத்தில்,சவேந்திர சில்வாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அவற்றுக்கான ஆதாரங்கள் தொகுக்கப்பட்டிருந்தன.
அதேவேளை, இலங்கை ஒற்றையாட்சி அரசின் வீர விக்கிரம பதக்கம், உத்தம சேவா பதக்கம், ரண விக்கிரம பதக்கம், ரண சூர பதக்கம் ஆகிய விருதுகளை சவேந்திர சில்வா பெற்றுள்ளார்.