கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பின்போது இந்த விடயங்கள் பேசப்பட்டதா அல்லது செய்தியாளர் சந்திப்பில் மாத்திரம் மோடி இதனைப் பகிரங்கமாகச் சொன்னாரா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. ஆனாலும் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டிய அவசியம் குறித்து இருவரும் பேசியதாக செய்தியாளர் சந்திப்பில் மோடி கூறியுள்ளார்.
இந்திய அரசின் உதவியுடன் 46 ஆயிரம் வீடுகள் இதுவரை நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் மலையகப் பிரதேசங்களில் மேலும் 14 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படும். சூரிய சக்தி மின் திட்டத்திற்காக 100 மில்லியன் டொலர் கடனாக வழங்கப்படும் எனவும் நரேந்திரமோடி அறிவித்திருக்கிறார்.
அதேவேளை, பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்கவுள்ளதாகவும் பயங்கரவாதத்துக்கு எதிரான உதவிகளை இலங்கைக்கு இந்தியா தொடர்ச்சியாக வழங்கி வருகிறது என்ற தொனியிலும் மோடி கூறியுள்ளர்.
அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை இந்தியா பின்பற்றுகின்றது. உறுதியான, வளமான முன்னேற்றகரமான இலங்கை, இந்தியாவின் நலனுக்கு மிகவும் உகந்ததாக அமைதல் வேண்டும். அது இந்து சமுத்திரம் முழுவதற்கும் நன்மையளிக்கக்கூடிய விடயமாக இருக்க வேண்டுமென்றும் மோடி செய்தியாளர் முன்னிலையில் விபரித்திருக்கிறார்.
செய்தியாளர் சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் உடனிருந்தார். மோடி கூறிய விடயங்களை ஏற்றுக்கொண்டவராகவும் கோட்டாபய ராஜபக்ச காணப்பட்டார்.
அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் (Millennium Challenge Cooperation) (MCC) நானூறு எண்பது மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியைப் பெறுவதற்குக் கடுமையான எதிர்ப்பு வெளியிட்ட மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி, தற்போது இந்தியா வழங்கவுள்ள நானூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியைப் பெறவுள்ளது.
பௌத்த குருமாரும், கண்டி மகாநாயக்கத் தேரர்களும் அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டத்தாபனத்தின் உதவிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் இந்தியாவிடம் இருந்து இந்தக் கடனுதவிக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியல் நலன் தொடர்பாக அமெரிக்காவும் இந்தியாவும் ஒத்துழைத்துச் செயற்பட்டு வரும் நிலையில், இந்திய அரசின் இந்த உதவியை இலங்கை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகவே இந்தியச் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
கோட்டாபய இந்தியாவுக்குச் சென்றுள்ள நிலையிலேதான் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவின் தனியார் நிறுவனத்துக்கு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியிருந்த ஒப்பந்தத்தை கோட்டாபய ராஜபக்ச ரத்துச் செய்யத் தீர்மானித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ரத்துச் செய்வது தொடர்பான இத்தகவலை இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் தற்போது பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பொருளாதார ஆலோசகராகவுமுள்ள அஜித் நிவார்ட் கபிரால் தெரிவித்துள்ளதாக Bloomberg.com என்ற ஆங்கிலச் செய்தித் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க அதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தார். இதனால் இந்தியா கடும் எதிர்ப்பும் வெளியிட்டிருந்தது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை போர்க்கப்பல் நிறுத்தும் தளமாக சீனா பயன்படுத்தும் என்றும் இதனால் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் அப்போது இந்தியா எச்சரித்திருந்தது.
ஒப்பந்தத்தை ரத்துச் செய்யுமாறும் இலங்கையிடம் வலியுறுத்தியிருந்தது இந்தியா. ஆனால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய சீனா மறுத்திருந்தது. இந்த நிலையிலேயே கோட்டாபய ராஜபக்ச சென்ற 19 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார். இவ்வாறானதொரு சூழலிலேயே இந்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்யத் தீர்மானித்துள்ளதாக அஜித் நிவார்ட் கபிரால் கூறியிருக்கிறார்.
அமெரிக்க ஆதரவுடனேயே கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றியடைந்தார் என்பது வெளிப்படையான நிலையில், அமெரிக்க ஆதரவுச் சக்தியான இந்திய அரசின் அணுகுமுறைகளுக்குள் இலங்கை விரும்பியோ விரும்பாமலோ எடுபட்டுள்ளது என்பதையே கோட்டாபய ராஜபக்சவின் புதுடில்லிப் பயணம் காண்பிக்கிறது.
ஆனாலும் சீனச்சார்புக் கொள்கையுடன் செயற்பட்டு வரும் பிரதமர் மகிந்த ராஜபக்ச மாற்று வழிகளையும் ஆலோசிக்கக் கூடும். இந்தியா குடும்பம், சீனா நண்பன் என்பதே மகிந்த ராஜபக்சவின் அரசியல் சாணக்கியம்.
ஆனால் மகிந்தவின் இந்த அரசியல் சாணக்கியத்தை கோட்டாபய எந்தளவு தூரம் ஏற்பார் அல்லது புறம் தள்ளுவார் என்பதை தற்போதைக்குக் கூற முடியாது. நரேந்திரமோடியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள கோட்டாபய ராஜபக்ச, அடுத்த சில வாரங்களில் சீனாவுக்கும் பயணம் செய்கிறார்.
தவிர்க்க முடியாதவொரு சூழலில் இந்தியாவைப் பயன்படுத்தினாலும் அமெரிக்கப் பென்ரகனுடனான உறவில் இருந்து கோட்டாபய ராஜபக்சவினால் விலகி நிற்க முடியுமா என்ற கேள்விகளும் எழாமலில்லை. எனவே அண்ணன் தம்பி உறவு இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியல் போட்டிகளுக்குள் பலமடையுமா, பலமிழக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.