தாமரை மொட்டுச் சின்னத்திலேயே இந்தப் புதிய கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்வதற்குரிய அனைத்து மூல ஆவணங்களும் இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இதுவரை காலமும் முரண்பட்ட நிலையில் இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் தற்போது ஒரு புள்ளியில் இணைந்துள்ளன.
2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்திருந்த மைத்திரிபால சிறிசேனவையும் கட்சியின் வேறு சில மூத்த உறுப்பினர்களையும் வெளியே எடுத்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து இயங்க வைத்து, 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட வைக்கப்ட்டிருந்தார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க, இந்தியத் தூதரங்கள் மற்றும் உள்நாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து இந்த முயற்சியை அப்போது எடுத்திருந்தன. புதிய அரசியல் கலாச்சாரம் என்றும் போரின் பின்னரான நிலைமாறுகால நீதி தமிழ் மக்களுக்குக் கிடைக்கும் எனவும் அப்போது கூறப்பட்டிருந்தது. தமிழ் மக்கள் நம்பவைக்கப்பட்டார்கள்.
அவ்வாறே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று புதிய அரசாங்கமும் பதவியேற்றது. அந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய தேசிய முன்னணி வெற்றி பெற்றுப் புதிய அரசாங்கத்தை அமைத்திருந்தது.
ஆனால் மூன்று மாதத்திற்குள்ளேயே மைத்திரி- ரணில் மோதல்கள் முரண்பாடுகள் ஆரம்பித்தன. அந்த முரண்பாடுகள் நீடித்தன. 2018 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை அழைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவருக்குப் பிரதமர் பதவி வழங்கியிருந்தார்.
இதனால் 52 நாட்கள் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருந்தது. நீதிமன்றம் வரை சென்றது. பின்னர் நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றிருந்தார்.
எனினும் முரண்பாடுகள் ஓய்ந்தபாடில்லை. இதனால் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவக்கு மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்கியிருந்தது.
இதன் தொடர்ச்சியாகவே நேற்று திங்கட்கிழமை ஸ்ரீலங்கா நிதஹாஸ் பொதுஜன சந்தானய என்ற புதிய அரசியல் கூட்டணி உதயமாகியுள்ளது. எனவே எந்தக் காலகட்டத்திலும் சிங்கள அரசியல் தலைவர்கள், முரண்பாட்டிலும் உடன்பாடாகச் செயற்பட்டு சிங்கள பௌத்த தேசியவாத ஒற்றுமையை காப்பாற்றிவிடுவார்கள் என்பதற்கு இந்தப் புதிய கூட்டணியின் தோற்றம் சிறந்த உதாரணம் என்று அவதானிகள் கூறுகின்றனர்.
2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறி கூட்டு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோதே தமிழ்த் தரப்புகள் சந்தேகம் வெளியிட்டிருந்தன. ஏனெனில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதிப் போர் நடைபெற்றபோது பிரதிப் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்தவர்தான் மைத்திரிபால சிறிசேன.
ஆனால் தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு வழங்கியதுடன் மைத்திரிபால சிறிசேனவை நெல்சன் மண்டேலா என்றும் புகழாரம் சூட்டியிருந்தது.
எனவே ஈழத் தமிழர் அரசியலில் தமிழரசுக் கட்சி 1965 ஆம் ஆண்டு செய்த அதே பிழையான அரசியல் அணுகுமுறையைத் தான் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் செய்து வருகின்றதெனத் தற்போது மக்கள் பேச ஆரம்பித்து விட்டனர்.
2016 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 2 ஆம் திகதி பசில் ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி, 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பத்தாம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரு நூறு சபைகளைக் கைப்பற்றியிருந்தது.
இதனால் 2015 ஆம் ஆண்டு மாற்றம் என்று கூறி இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளினால் உருவாக்கப்பட்ட மைத்திரி- ரணில் அரசாங்கம் பலவீனமடைந்து விட்டது என்பதையும், மைத்திரிபால சிறிசேன மீண்டும் மகிந்தவின் பக்கமே சாய்வார் என்ற செய்தியும் வெளிப்பட்டிருந்தது.
தற்போது இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பயணத் தடை அமெரிக்காவின் புவிசார் அரசியலின் சுயநலமாக இருந்தாலும் அந்தப் பயணத் தடயைக் கூட ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் கண்டிக்கின்றனர்.
எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு இவர்கள் கண்டிப்பதை கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் வரவேற்றுள்ளது. இதன் பின்னரும் மாற்றம், புதிய அரசியல் காலச்சாரம் எனக் கூறியும் நெல்சன் மண்டேலா என்று சிங்கள அரசியல் தலைவர்களுக்குப் புகழாரம் சூட்டியும் தமிழரக் கட்சி, ஈழத் தமிழர்களின் அரசியலை பூச்சியமாக்கப் போகின்றதா?