ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவான

இலங்கை நீதித்துறையை விமர்சிக்க முடியுமா?

சில பிரதான தமிழ் ஊடகங்கள் அந்தப் பொறுப்பில் இருந்து விலகி நிற்கின்றன
பதிப்பு: 2020 மே 11 19:49
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 11 22:37
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீத்துறையை விமர்சிக்க ஊடக ஒழுக்க விதிகளில் இடமில்லை எனவும் இலங்கை அரசியலமைப்புக்கு அமைவாக ஊடகங்களில் நீதித்துறையை விமர்சித்தால் அது சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் ஊடகவியலாளர்கள் பலர் கருதுகின்றனர். ஆனால் நீதித்துறையை விமர்சிக்க முடியும். எந்த அடிப்படையில் என்றால்...? ஈழத் தமிழர் அரசியல் வாழ்வுரிமைகளோடு கூடிய நியாப்பாடுகளைச் சுட்டிக்காட்டி எழுதும்போது, இலங்கை நீதித்துறையை விமர்சிக்கவும், குற்றம் சாட்டவும் முடியும். நீத்துறையின் நம்பகத் தன்மை குறித்த விடயங்களையும் கேள்விக்கு உட்படுத்த முடியும்.
 
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது 2014 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவி வகித்திருந்த சிறியாணி பண்டாரநாயக்காவைப் பலாத்தகாரமாகப் நீக்கிவிட்டுத் தனக்கு விசுவசமான மொகான் பீரிஸ் என்பவரை பிரதம நீதியரசராக நியமித்திருந்தார்

அதேவேளை, நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது அந்த விவகாரம் பற்றிய செய்திகளை நீதிமன்ற விசாரணைகளின் அடிப்படையில் எழுதலாம். ஆனால் அந்த விசாரணைகள் பற்றி மேலதிகமாக எதனையும் எழுத முடியாது. அந்த வழக்கு விசாரணை பற்றி விமர்சிக்கவும் இயலாது.

இது ஊடக ஒழுக்க விதிகளில் மிகவும் முக்கியமானது. நாடாளுமன்ற விவாதங்களில் கூட உறுப்பினர்கள், நீதிமன்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வழக்குகள் பற்றி விவாதிக்கவோ, விமர்சிக்கவோ முடியாது. தீர்ப்பு வெளியான பின்னர் அது பற்றி நாடாளுமன்றத்தில் விமர்சிக்கலாம். ஆனால் அதே உறுப்பினர் அந்தத் தீர்ப்புப் பற்றி வெளி மேடைகளில் அல்லது ஊடகங்களில் விமர்சித்துக் கருத்துக் கூற முடியாது.

இதே மாதிரியான விதிமுறைகள் ஊடகவியாலர்களுக்கும் உண்டு. எனவே ஒரு சமூகத்தின் அரசியல் வாழ்வுரிமைகள் பற்றிய விடயங்களுக்கு அப்பாற்பட்ட ஏனைய வழக்குகள் மற்றும் வழக்குகளின் தீர்ப்புகளை மாத்திரம் விமர்சிக்க முடியாதென்பதை ஒவ்வொரு ஊடகவியலானும் தெரிந்திருக்க வேண்டும்.

அத்துடன் ஊடக ஒழுக்க விதிகளுக்கு அமைவான சுயதணிக்கை முறைகளையும் நீதிமன்ற வழக்கு மற்றும் தீர்ப்பு விடயங்களில் பேணப்பட வேண்டும் என்பது பற்றியும் ஊடகவியலாளர்கள் அறிந்திருக்க வேண்டும். ஆனால் இலங்கை நீதிமன்றங்கள் ஈழத் தமிழர்களின் அரசியல் வாழ்வுரிமைகளோடு சம்மந்தப்பட்ட பல விவகாரங்களில் வழங்கிய தீர்ப்புகள் பௌத்த தேசியக் கண்ணோட்டதுடன் அமைந்திருந்தன.

குறிப்பாக வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டமை, தமிழ் அரசியல் கைதிகள் விவாகாரம், போர்க்காலத்தில் தமிழர்களைக் கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்டமை போன்ற பல வழக்குகளில் இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தபோது இனப் பாகுபாட்டை வெளிப்படுத்தியிருந்தன.

வடக்குக் கிழக்கு இணைந்த தாயகத்தின் சுயாட்சி முறைக்கு ஏற்ப இலங்கை நீதித்துறையின் சுயாதீனமும் அதிகாரமும் முதலில் மாற்றியமைக்கப்பட்டால், நிரந்த அரசியல் தீர்வைக் கொண்டுவர அது அடிப்படையாக அமையும். அதற்கான விமர்சனங்களை முதலில் ஆரம்பிக்க வேண்யடிது பிரதான தமிழ் ஊடகங்கள் தான்

அல்லது சிங்கள ஆட்சியாளர்களின் அழுத்தங்களினால் நீதிபதிகள் தங்கள் மனச்சாட்சியை அடகுவைத்த நிலையில் தீர்ப்புகளை வழங்கியிருக்க முடியும். ஆகவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்த வழக்குகளின் தீர்ப்புகள், மரண தன்டனை வழங்கப்பட்டிருந்த இராணுவச் சிப்பாய்க்குப் பொது மன்னிப்பு வழங்கிய விவகாரங்கள் போன்றவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தலாம்.

பொதுவாக மரபுவழி வந்த சமூகம் ஒன்றின் அரசியல் உரிமைகள் பற்றிய நீதித்துறையின் தீர்ப்புகள் தவறாக இருக்கும்போது, அந்தச் சமூகம் சார்ந்த பிரதான அச்சு மற்றும் இலத்திரனயில் ஊடகங்கள் (Mainstream Media) ஒரே நிலையில் நின்று விமர்சித்தால் அதனைச் சட்டச் சிக்கலாக நோக்க முடியாது. அவ்வாறு விமர்சிக்கின்ற ஊடகங்கள் மீது அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயங்கும்.

அப்படிச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமானால், அது அரசாங்கத்தின் நீதித்துறையின் இனப் பகுபாடு தொடர்பான சந்தேகங்களை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்திவிடும். இலங்கை நீதித்துறையின் மீது, இலங்கை மக்கள் பலருக்கு நம்பிக்கையில்லை என்று ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளரின் அறிக்கையிலும், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் சிலரின் கருத்துக்களிலும் கூட கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ் ஊடகங்கள் இலங்கை நீதித்துறை பற்றித் தாராளமாக விமர்சிக்க முடியும். ஆனால் பிரதான தமிழ் அச்சு ஊடங்கள், இலங்கை நீதித்துறை பற்றிய விடங்களில் இலங்கையின் அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு அமைவாக நின்றே செயற்படுகின்றன.

இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் நீதித்துறை என்று கூட விமர்சிப்பதற்குப் பல அச்சு ஊடகங்கள் தயங்குகின்றன. இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய நீதித்துறை பற்றி (எந்தவொரு வழக்குகளின் தீர்ப்புகளைப் பற்றியுமல்ல) இந்திய ஊடகங்கள் விமர்சித்திருந்தன. இதனால் பின்னாளில் இந்திய நீதித்துறை மறுசீரமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

எந்தவொரு வழக்குகளின் தீர்ப்புகளையும் விமர்சிக்காமல் நீதித்துறையைப் பொதுவான அடிப்படையில் உலக மாற்றங்களுக்கு ஏற்ப நீதித்துறைச் சுயாதீனம் பேணப்பட வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்து மேற்குலக மற்றும் ஐரோப்பிய ஊடங்கள் விமர்சி்க்கின்றன.

ஆனால் இலங்கையில் மாத்திரமே இலங்கை நீதித்துறை பற்றிய விமர்சனங்களை ஊடகங்கள் முன்வைக்கத் தயங்குகின்றன. இருந்தாலும் முன்னாள் நீதியரசர் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விமர்சனங்களைக் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் உள்ள ஆங்கில ஊடகம் ஒன்று எழுதி, நீதித்துறையின் நம்பகத்தன்மை பற்றிய கேள்விகளையும் அது மறைமுகமாக முன்வைத்திருந்தது.

2015 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில், சிங்கள அரசியல் தலைவர்களுக்காக நியாயம் கோரி நடத்தும் வழக்குகள் மூலம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறை நியாயமானது என்பதையே ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சர்வதேச அரங்கில் வெளிப்படுத்த முற்படுகிறார்

எனவே ஈழத் தமிழ் மக்களின் கடந்த எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தில் சிங்கள ஆட்சியாளர்கள் மாத்திரமல்ல, இலங்கை ஒற்றை ஆட்சி அரசு என்பதை நிறுவுவதில் இலங்கை நீதித்துறை எவ்வாறு செயற்பட்டிருந்தது என்ற ஆதாரங்களை முன்வைத்துத் தமிழ் அச்சு ஊடகங்கள் விமர்சனங்களை எழுத வேண்டும்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னரான சூழலிலும், அதன் பின்னரான நிலையில் இருந்து இன்று வரை கூட, இலங்கை நீதித்துறை ஒற்றை ஆட்சியை நிரூபிக்கும் நோக்கில் வழங்கிய தீர்ப்புகள் பற்றித் தமிழ் அச்சு ஊடகங்கள் வாய்திறக்கவேயில்லை. (ஒரு சில அரசியல் கட்டுரைகளைத் தவிர) குறிப்பாக ஆசிரியர் தலையங்கங்களில் (Editorials) நீதித்துறை பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை என்பது பலரின் குற்றச்சாட்டு.

2004 ஆம் ஆண்டு சுனாமிப் பேரலையினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு வடக்குக் கிழக்கில் நிவாரணங்களை வழங்க அமைக்கப்பட்ட பொதுக் கட்டமைப்புத் தொடர்பாக இலங்கை உயர் நீதிமன்றத்தில் சிங்களக் கடும் போக்காளர்களினால் பல மனுக்கள் தாக்கல் செய்ய்ப்பட்டிருந்தன. அது பற்றிய பரிசீலனைகள் கூட எந்தக் கண்ணோட்டத்தில் இடம்பெற்றது என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில், சிங்கள அரசியல் தலைவர்களுக்காக நியாயம் கோரி நடத்தும் வழக்குகள் மூலம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறை நியாயமானது என்பதையே ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சர்வதேச அரங்கில் வெளிப்படுத்த முற்படுகிறார். தமிழ் இனப்படுகொலை பற்றிய விசாரணைகளை இலங்கை ஒற்றையாட்சி நீதித்துறைக் கட்டமைப்புக்குள் நடத்த முடியும் என்ற செய்திiயும் அவர் வெளிப்படுத்துகிறார்.

ஆனால் தமிழ் அச்சு ஊடகங்கள் அது பற்றிய விமர்சனங்களை முன்வைக்காமல் அமைதிகாக்கின்றன. சர்வதேச அரசியல் அங்கீகாரத்துக்கான ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டமைக்குப் பூகோள அரசியல் உள்ளிட்ட பல காரணங்கள் இருந்தன. எனினும் 2009 ஆம் ஆண்டு மே மாததிற்குப் பின்னரான சூழலில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறையின் உள்ளகச் செயற்பாடுகளின் போக்கை அவதானிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் ஊடகங்களுக்கு உண்டு. அவ்வாறான பொறுப்புகள், விமர்சனங்களை நீதித்துறையை அவமதித்தல் என்ற குற்றச்சாட்டுக்குள் உள்ளடக்க முடியாது.

போர்க்குற்றம், மனித உரிமை மீறல் என்று குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை இராணுவத் தளபதிகள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் இராஜதந்திரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். வேறு சிலர் மீண்டும் இராணுவத்துக்குள்ளேயே உயர் பதவிகளை வகிக்கின்றனர். ஏனெனில் சர்வதேசக் குற்றச்சாட்டுகள் அனைத்துமே இலங்கை நீதித்துறையினால் ஏற்கப்படாது என்ற நம்பிக்கையோடும் இது எமது நீதித்துறை என்ற உணர்வுகளோடும் இந்தப் பதவிகள் வழங்கப்பட்டிருக்கலாம்

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்து 1972 ஆம் ஆண்டு இறைமையும் தன்னாதிக்கமும் உள்ள நாடாக இலங்கை அரசு உருவானபோது, ஸ்ரீமாவோ பண்டாரநாய்க்காவின் அரசாங்கத்தினால் முதலாம் குடியரசு அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது. அந்த யாப்பில் நீதித்துறையின் சுயாதீனம் குறித்த கேள்விகள் அப்போதே முன்வைக்கப்பட்டிந்தன.

அதாவது நீதிபதிகள் நியமனத்தில் எழுதப்படாத அரசியல் தலையீடுகள் பற்றிய கேள்விகள்தான் அவை. இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பை 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்த்தன அரசாங்கம் உருவாக்கியருந்தது. நிறைவேற்று அதிகாரம் நீதித்துறையில் தலையிட முடியாத நிலைமை இருந்தது. ஆனாலும் வலுவேறாக்கம் அங்கே முழுமையாக இல்லை.

உதாரணமாக மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது 2014 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதியரசராகப் பதவி வகித்திருந்த சிறியாணி பண்டாரநாயக்காவைப் பலாத்தகாரமாகப் நீக்கிவிட்டுத் தனக்கு விசுவசமான மொகான் பீரிஸ் என்பவரை பிரதம நீதியரசராக நியமித்திருந்தார்.

இந்த நியமனத்தின் மூலம் மாகாணங்களின் நிதி தொடர்பான சட்டமூலம் ஒன்றை ரத்துச் செய்து மற்றுமொரு புதிய சட்டமூலத்தை உருவாக்குவதற்கான உயர் நீதிமன்றத்தின் அங்கீகாரம் உள்ளிட்ட பல மனுக்களை மகிந்த ராஜபக்ச தனக்கு ஏற்றவாறு மாற்றியமைத்திருந்தார். எனவே அரசியல் செல்வாக்குகள் அவ்வப்போது நீதித்துறையில் தலைகாட்டியிருந்தன என்பதற்கு இந்த விவகாரங்கள் உள்ளிட்ட பல தகவல்களைக் கூற முடியும்.

2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமான சுயாதீன நீதிச் சேவையில் கூட நிறைவேற்று அதிகாரத்தின் செல்வாக்குப் பிரயோகிப்படக் கூடிய தன்மைகள் இருப்பதாகவே மனித உரிமைச் சட்டத்தரணிகள் கூறுகின்றனர். கொழும்பை மையமாகக் கொண்ட தமது ஆட்சி அதிகாரத்துக்குள்ளேயே ஜனநாயகத்துக்கு முரணாக நீத்துறைச் செயற்பாடுகளில் செல்வாக்குகளைப் பிரயோகிக்கக் கூடிய நிலைமை இருக்கின்றது என்றால், தேசிய விடுதலை வேண்டிப் போராடி வருகின்ற ஈழத் தமிழ் மக்களின் அரசியல் வாழ்வுரிமைகளோடு இலங்கை நீதித்துறை எந்தளவு தூரம் ஒத்துழைத்துச் செல்லும் என்ற கேள்விகள் எழுவதும் இயல்பானது.

ஜெனீவா மனித உரிமைச் சபை, சர்வசே மன்னி;ப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளினாலும் போர்க்குற்றம், மனித உரிமை மீறல் என்று குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை இராணுவத் தளபதிகள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் இராஜதந்திரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். வேறு சிலர் மீண்டும் இராணுவத்துக்குள்ளேயே உயர் பதவிகளை வகிக்கின்றனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதித்துறையின் உள்ளகச் செயற்பாடுகளின் போக்கை அவதானிக்க வேண்டிய பொறுப்பு தமிழ் ஊடகங்களுக்கு உண்டு. அவ்வாறான பொறுப்புகள், விமர்சனங்களை நீதித்துறையை அவமதித்தல் என்ற குற்றச்சாட்டு அல்லது சட்டச் சிக்கலுக்குள் உள்ளடக்க முடியாது

ஏனெனில் சர்வதேசக் குற்றச்சாட்டுகள் அனைத்துமே இலங்கை நீதித்துறையினால் ஏற்கப்படாது என்ற நம்பிக்கையோடும் இது எமது நீதித்துறை என்ற உணர்வுகளோடும் இந்தப் பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. பௌத்த தேசியச் சிந்தனையில் இவ்வாறு பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றமை நியாயமானதாக இருக்கலாம்.

எனவே தமிழ்த் தேசியச் சிந்தனையின்படி இலங்கை நீதித்துறை பற்றிய விமர்சனங்களை முன்வைக் வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ் அச்சு ஊடகங்களுக்கு உண்டு என்றால், அதில் மாற்றுக் கருத்திருக்காது.

வடக்குக் கிழக்கு இணைந்த தாயகத்தின் சுயாட்சி முறைக்கு ஏற்ப இலங்கை நீதித்துறையின் சுயாதீனமும் அதிகாரமும் முதலில் மாற்றியமைக்கப்பட்டால், நிரந்த அரசியல் தீர்வைக் கொண்டுவர அது அடிப்படையாக அமையும். அதற்கான விமர்சனங்களை முதலில் ஆரம்பிக்க வேண்யடிது பிரதான தமிழ் ஊடகங்கள் தான்.

ஆனால் சில பிரதான அச்சு ஊடகங்களின் பின்னால் உள்ள அரசியல் அல்லது பணபலம் அல்லது வியாபார நோக்கிலான பார்வைகள் எந்தளவு தூரம் இலங்கை நீதித்துறையை விமர்சிக்க இடம்கொடுக்கும் என்பதும் கேள்வியே. எனினும் மரபு வழிப் போரில் ஈடுபட்ட இயக்கம் ஒன்று அழிக்கப்பட்ட பின்னரான சூழலில் மூத்த மற்றும் அனுபவமுள்ள தமிழ் ஊடகவியலாளர்கள், இது பற்றிச் சிந்திக்க வேண்டிய காலகட்டமிது.