மக்களின் எந்தவொரு போராட்டத்தையும் நிராகரிக்கவோ புறக்கணிக்கவோ முடியாது என்ற கருத்து வடக்கக் கிழக்குச் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகளிடம் உண்டு. ஆனால். தற்போதைய நெருக்கடிக்கான சிங்கள மக்களின் போராட்டத்தில் பங்குபற்றாமல் வெளியில் நின்று ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற கருத்துக்களே அதிகமாகவுள்ளன.
முப்பது ஆண்டுகால போரிலும் அதன் பின்னரான பன்னிரெண்டு வருடங்களிலும் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைளகள் ஏராளம். நிரந்தர அரசியல் தீர்வுக்கு முன்னர் போரின் பக்கவிளைவுகளுக்குக்கூட உரிய தீர்வுகள் பெறப்படாவொரு சூழலில், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ஈழத்தமிழர்கள் மேலும் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் இந்தப் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் முப்பது ஆண்டுகால போரும் அதன் பின்னர் வடக்குக் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவ மயமாக்கல், சிங்களக் குடியேற்றங்கள், போன்ற இனரீதியான செயற்பாடுகளே காரணம் என்பதை சிங்கள அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகமே.
எரிபொருட்களுக்கான விலை அதிகரிப்புகள் கட்டுப்பாடின்றி நாளுக்கு நாள் வாரத்துக்கு வாரம் ஏறிச் செல்லும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது அத்தியாவசியப் பொருட்கள், மருந்தப் பொருட்களின் விலைகளும் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகின்றன.
ஆகவே இதற்கு எதிராகப் போராடுகின்ற சிங்கள மக்கள், இன ரீதியாக வகுக்கப்பட்ட அரசியல், பொருளாதார திட்டங்களே இதற்குக் காரணம் என்றும் ஆகவே இலங்கை அரச கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்து தமிழ், முஸ்லிம் மக்களும் சம உரிமையோடு வாழும் சூழலை உருவாக்கினால் மாத்திரமே, பெர்ருளாதார வளர்ச்சியும், அரசியல் ஸ்ரத்தன்மையும் ஏற்படும் நம்பிக்கையை முதலில் வெளிப்படுத்த வேண்டும்.
1947 ஆம் ஆண்டு இன ரீதியான அரசியல். பொருளாதாரத் திட்டங்கள் வகுக்கப்பட்ட காலத்தில் இருந்தே சிங்கள ஆட்சியாளர்கள் அனைவரிடமும் ஊழல் மோசடி. ஆதிகாரத் துஸ்பிரயோகம் இருந்தது என்ற குற்றச்சாட்டுக்களும் உண்டு.
ஆகவே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குரிய மூல காரணத்தை அங்கிருந்துதான் நோக்க வேண்டும். வெறுமனே இது ராஜபக்ச குடும்பத்துக்குரிய பிரச்சினை மாத்திரமல்ல. 1983 ஆம் ஆண்டில் இருந்து போர் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் ஊழல்மோசடி, அதிகாரத்துஸ்பிரயோகம் இருந்ததாக சிங்கள சமூகவலைத்தளங்களில் பதிவுகள் காணப்படுகின்றன.
சொந்த மக்களையே கொலை செய்ய அனுமதித்து விட்டு அதன் பின்னரான சூழலில் ஊழல்மோசடிக்கும், அதிகாரத் துஸ்பிரயோகத்துக்கும் இடமளித்துவிட்டோமென சிங்கள சமூகவலைத்தளங்களில் பதிவுகள் காணப்படுகின்றன.
ஆகவே இதன் பின்னணியிலேயே பொருளாதார நெருக்கடிக்கான சிங்கள மக்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு என்பதை ஈழத்தமிழர்கள் மனதார வழங்கியுள்ளனர். ஆனால் கோட்டாவுக்கு எதிரான போராட்டங்களில் நேரடியாகப் பங்குகொள்ள முடியாது என்ற கருத்து ஈழத்தமிழர்கள் மத்தியில் அதிகமாகவே காணப்படுகின்றது.
சிங்கள மக்களின் போராட்டம் தொடர்பாகத் தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் அந்தப் போராட்டம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டம் தொடர்பாகவும் கூர்மைச் செய்தித் தளத்திற்குக் கருத்து வெளியிட்ட யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டாளர் ரட்னம் தயாபரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இவர்களின் கருத்துக்கள் வெவ்வேறுபட்ட கோணங்களில் அமைந்தாலும் சிங்கள மக்களின் போராட்டத்தில் உள்ள நியாயத் தன்மையையும் இந்த நெருக்கடிக்குக் காரணமான அடிப்படை மூலங்களைச் சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற சிந்தனைகளும் வெளிப்பட்டன.
ஊழல் மோசடி. அதிகாரத்துஸ்பிரயோகத்துக்கான அடிப்படை மூல காரணம் எது என்பதைப் புரிந்துகொள்ளாமல், இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள 20 ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்து மீண்டும் 19 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவருவதும், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்குப் பாரப்படுத்துவதும் உரிய தீர்வல்ல.
இந்த மாற்றங்களுடன் சேர்ந்து. ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான உரிய அதிகாரகப் பங்கீட்டையும் முன்வைக்க வேண்டும். ஆனால் அதற்குச் சிங்கள அரசியல் கட்சித் தலைவர்கள் தயாராக இருக்கின்றனரா என்பதே கேள்வியாகும்.
தென் பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கலந்துரையாடல்களில் குறித்து யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், ஈ.பி,ஆர.எல்.எப் தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச் சந்திரன், யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாடடானர் மூத்த ஊடகவியலாளர் இட்னம் தயாபரன் ஆகியோர் கூர்மைச் செய்தித் தளத்திற்குக் கருத்து வெளியிட்டுள்ளனர்.