இந்தோ - பசுபிக் புவிசார் அரசியல், பொருளாதாரப் போட்டி

இந்திய ரூபாவின் பயன்பாடு - அமெரிக்க டொலருக்கு எச்சரிக்கையா? இலங்கையின் காத்திருப்பு

அரசியல் விடுதலை என்ற நோக்கில் இருந்து விலகி வேறு உணர்வுகளுக்குப் பலியாகும் தமிழ்த்தரப்பு
பதிப்பு: 2023 ஏப். 22 23:52
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 27 08:19
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
#india
#us
1983 இல் ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கும் வரையும் அமெரிக்காவுடன் இணக்கமில்லாத பரம வைரியாக இருந்த இந்தியா, ஈழப் போர் தொடங்கியதும், அமெரிக்காவுடன் சுமூகமான அரசியலைப் பேண ஆரம்பித்தது. அதற்கேற்ப இந்திய வெளியுறவுக் கொள்கையை அன்று இந்திராகாந்தி வகுத்திருந்தார். அதன் பின்னரான சூழலில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு இந்திய ஆட்சியாளர்களும் அமெரிக்காவுடன் சீரான உறவைப் பேணி வந்தனர். 2016 இல் டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியின்போது நரேந்திர மோடி அமெரிக்காவுடனான உறவை மேலும் இறுக்கமாகப் பற்றிப் பிடித்தார். இருந்தாலும் ரசிய - உக்ரெயன் போர்ச் சூழலில் ஜோ பைடன் நிர்வாகத்துடன் பனிப்போர் ஏற்பட்டுள்ளதால், ரசியாவுடனான இந்திய உறவு மேலும் நெருக்கமடைந்துள்ளது.
 
ஈழத்தமிழ்த்தரப்பு தமக்குள் உள்ளக மோதல்களிலும் சிலை வைப்புப் போட்டிகளிலும் ஈடுபட்டுத் "தமிழ்த்தேசிய அரசியல் விடுதலை" (Political Emancipation) என்ற பிரதான இலக்கைத் தவறவிட்டுக் கொண்டிருக்கின்றது

உக்ரெயன் போரினால் ரசியாவின் ரூபிள் வீழ்ச்சியடைந்து பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருக்கும் சூழலில், அமெரிக்க டொலருக்கு எதிராகப் பதினெட்டு நாடுகளுடன் இணைந்து இந்திய ரூபாவில் சர்வதேச வர்த்தகத்தை மேற்கொள்ளும் ஏற்பாடுகளைப் புதுடில்லி முன்னெடுக்கிறது.

இந்திய ரூபாவை சர்வதேசச் சந்தையில் பயன்படுத்துவது குறித்துக் கடந்த ஆண்டு யூலை மாதம் இந்திய ரிசவ் வங்கி (Reserve Bank of India) ஆரம்ப முயற்சியை மேற்கொண்டது.

இந்திய மத்திய இணை நிதியமைச்சர் பகவத் காரத் நாடாளுமன்றத்தில் இதுபற்றி ஏற்கனவே அறிவித்திருந்தார். 'சர்வதேச நாணயமாக மாறுவதன் முதற்படியாக இந்தியாவின் மத்திய வங்கி - ரசியா இலங்கை உட்பட பதினெட்டு நாடுகளில் உள்ள அறுபது வங்கிகளில் இந்திய ரூபாயில் பணம் செலுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடாக வோஸ்ட்ரோ (Vostro) கணக்குகளை ஆரம்பிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

குறிப்பாக அமெரிக்க டொலர், யூரோ உட்பட அனைத்து வெளிநாட்டு நாணயங்களுக்கும் பதிலாக இந்திய ரூபாய் நாணயத்தில் வெளிநாட்டு வர்த்தகத்திற்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ள இரண்டு இந்திய வங்கிகளில் ஒன்பது சிறப்பு வோஸ்ட்ரோ கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.

"வோஸ்டோ" கணக்கு என்பது ஒரு உள்நாட்டு வங்கி வெளிநாட்டு வங்கிக்காக உள்நாட்டு வங்கியின் நாணயத்தில் வைத்திருக்கும் கணக்கு. ஏற்றுமதியை ஊக்குவித்து இறக்குமதியை எளிதாக்கும் ஒரு ஏற்பாடாகும். அதாவது சர்வதேச வர்த்தகத்தில் இந்திய ரூபாவைப் பயன்படுத்துவதற்குரிய வழிமுறை. இதனை இந்திய மத்திய வங்கி தயார்படுத்தியுள்ளது.

சர்வதேசச் சந்தையில் அமெரிக்க டொலர் ஆதிக்கத்தில் இருந்து விடுபட விரும்பும் நாடுகளைக் கூட்டுச் சேர்க்கும் ரசிய - இந்திய அரசுகளின் முயற்சி தற்போது சாதகமாகியுள்ளன. இந்திய ரூபாய் பரிவர்த்தனை மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மேற்கொள்ளப்பட்டால், இந்தியாவிற்குக் கூடுதல் லாபம் கிடைக்கும். அந்த லாபம் ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கும்.

ரூபாய் - ரூபிள் வர்த்தகத்திற்கான வழிமுறையை எளிதாக்க இந்திய மத்திய வங்கி ஒப்புக் கொண்டுள்ளது என்றும் மேலும் சில தனியார் இந்திய வங்கிகளும் ஆர்வம் காட்டி வருவதாகவும் இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் (Federation of Indian Export Organizations- FIEO) தலைவர் ஏ.சக்திவேல் கூறியுள்ளார்.

கடந்த நிதியாண்டில் ரசியாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி சுமார் மூன்று தசம் முன்று பில்லியன் டொலர்கள் என்றும் இப் புதிய வர்த்தகம் நடைமுறைக்கு வந்தால் அந்த ஏற்றுமதி ஐந்து பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து ரசியாவை தனிமைப்படுத்தும் நோக்கில் ஸ்விஃப்ட் வங்கி (Swift Bank) நடைமுறைகளில் இருந்து ரசியாவின் பிரதான வங்கிகள் நீக்கப்பட்டன. இதனால் ரசியாவின் அதிகாரப்பூர்வ நாணயமான ரூபிள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

(ஸ்விஃப்ட் வங்கி என்பது சர்வதேச பணப் பரிமாற்றங்களை விரைவாகவும், எளிதாகவும் மேற்கொள்ளும் நிதிசார்ந்த வலைதளமாகும். (Worldwide Interbank Financial Telecommunication - Swift) 1973 ஆம் ஆண்டில் பெல்ஜியத்தில் நிறுவப்பட்டது. இந்த வங்கியில் நூற்நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் பதினோராயிரம் வங்கிகள் தனியார் நிறுவனங்கள் இணைந்திருக்கின்றன)

அமெரிக்க டொலருக்கு நிகரான ரசிய ரூபிள் மதிப்பு, எண்பதில் இருந்து நூற்றுப் பத்தொன்பதாக வீழ்ச்சியடைந்தது. ஒரு வாரத்தில் ஏறத்தாழ இருபத்தொன்பது வீத சரிவை ரசிய ரூபிள் சந்தித்தது.

ஈழத்தமிழர் விவகாரம் உள்ளிட்ட இலங்கைத்தீவின் உள்ளக அரசியல் - பொருளாதார ரீதியில் சிந்தித்து, வல்லரசுகளின் புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிகளுக்குள் சிக்குப்படாமல் சிங்களத் தேசியத்தைக் காப்பாற்ற விளைகிறார் ரணில்

அணு ஆயுதங்களைத் தயாராக்கும்படி புட்டின் உத்தரவிட்டதில் இருந்து ரசியா ரூபிள் வீழ்ச்சியடைந்தது. இப் பின்னணியிலேயே அமெரிக்க டொலருக்கு எதிரான போரை புட்டின் ஆரம்பித்திருப்பதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. கடந்த வருடம் யூலை மாதம் ஆரம்பித்த இந்த முயற்சி தற்போது கைகூடும் நிலைக்கு எட்டியுள்ளது.

தற்போது இந்திய ரூபாய் மூலம் வெளிநாட்டு வர்த்தகம் குறித்த வழிகாட்டுதல்களை மேற்கொள்ள ரசியாவின் மிகப்பெரிய வங்கியான ஷெபர் வங்கி (Sberbank - Sberbank Rossii PAO) மற்றும் இரண்டாவது பெரிய வங்கியான விரிபி (VTB Bank is a Russian majority state-owned bank VTB) வங்கி ஆகியவை இந்திய மத்திய வங்கியின் வோஸ்ட்ரோ கணக்குகளை ஆரம்பிப்பதற்கான ஒப்புதல் வழங்கியுள்ளன.

காஸ்புறொம் (Gazprombank) என்ற ரசியாவின் மிகப் பெரிய தனியார் வங்கி ஒன்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பரிவர்த்தனைகளை இந்திய ரூபாயில் மேற்கொள்வதற்குரிய எற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.

ஆகவே சர்வதேச வர்த்தகத்தில் இந்திய ரூபாவைப் பயன்படுத்துவது என்ற ரசியாவின் முடிவு உக்ரெய்ன் போரினால் வீழ்ச்சியடைந்திருக்கும் தமது நாணயத்தை மீளவும் புதுப்பிக்கும் நோக்கம் மாத்திரமல்ல, தங்கள் மீது தடை விதித்துவிட்டுத் தங்களிடம் பல வர்த்தகங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு (European Union - EU) சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பதும் பிரதான நோக்கமும் உள்ளடங்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அதிக எரிவாயுவை வழங்கிக் கொண்டிருந்த நாடு ரசியா. மொத்த எரிவாயு தேவையில் நாற்பது வீதத்துக்கு மேல் ரசியாவை, மாத்திரமே ஐரோப்பிய ஒன்றியம் நம்பியிருந்தது. ரசியாவின் எண்ணெய், எரிவாயு ஏற்றுமதிக்கு தடை விதிக்க அமெரிக்கா வலியுறுத்திய போது பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மறுத்துவிட்டன.

ரசியாவைக் கைவிட்டால் எரிவாயுக்குச் சிக்கல் ஏற்பட்டுப் பொருளாதாரத்தின் மூலம் இழக்கப்படும் ஆபத்து நேரிடலாம் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கருதின. இதனை ரசியாவும் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளது. இச் சூழலை இந்தியாவும் நன்கு பயன்படுத்திக் கொண்டு அடுத்த கட்ட சர்வதேச பொருளாதார லாபங்களைப் பெறும் முயற்சியை நுட்பமாகக் கையாண்டு வருகின்றது.

இந்தியாவை நம்புவதால் ரசியாவுக்கும் இந்த வர்த்தகத்தில் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் இதனால் அமெரிக்க டொலரை எதிர்க்க விரும்புகின்ற மேலும் பல நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து இந்திய ரூபாவைப் பயன்படுத்த ரசியா ஆரம்பித்துள்ளது.

தனது நாணயத்தை மாத்திரம் பயன்படுத்திக் கூடுதல் வர்த்தகச் செயற்பாட்டில் ஈடுபட்டு வல்லரசுக்கான அங்கீகாரத்தைச் சீனா நெருங்கிவிட்டது. கடந்த ஒரு வருடமாக இடம்பெறும் போரினால் பாதிப்புகள் ஏற்பட்டாலும் ரசியா நிமிந்து நிற்பதற்குப் பின்னால் சீனா மூல காரணியாகவுள்ளது. இக் காரண காரியத்துடன் இந்திய ரூபா பயன்பாடும் ரசிய ஆதரவுடன் உலகில் அறிமுகமாகிறது.

இப் பின்புலத்திலேதான், இந்திய ரூபாயில் இருதரப்பு வர்த்தகம் மேற்கொள்ள இலங்கை அரச வங்கி ஒன்றும் இந்திய மத்திய வங்கியில் வோஸ்ட்ரோ கணக்கைக் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்துள்ளது.

வோஸ்ட்ரோ கணக்கைத் திறப்பதன் மூலம் இலங்கையிலுள்ள ஒருவர் பத்தாயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்திய ரூபாயை வைத்திருக்க முடியும் என அறிவிக்கப்பட்டுமிருந்தது. இந்திய - இலங்கை மக்கள் தமக்கிடையே சர்வதேச கொடுக்கல் - வாங்கல்களின் போது, இந்திய ரூபாவைப் பயன்படுத்த முடியும் எனவும் இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஆனால் இந்திய - இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்துக்கு மாத்திரமே இந்திய ரூபாவைப் பயன்படுத்த முடியுமெனப் பொருளியல்துறைப் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் கூறுகிறார். ஏனெனில் சீனாவுடனான வர்த்தகத்தில் இந்திய ரூபாவைப் பயன்படுத்த முடியாது என்று அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

ஆனால் டொலருக்குப் பதிலாக இந்திய ரூபாயில் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபடுவது தொடர்பாக தெற்காசிய நாடுகளுடன் இந்திய மத்திய வங்கி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்றும் மலேசிய அரசுடன் சென்ற வாரம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்றும் இந்திய மத்திய வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

டொலருக்குப் பதிலாக ரூபாயில் வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. இந்தக் கட்டமைப்பு வரும் ஆண்டுகளில் அதிக முக்கியத்துவம் பெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எனினும் அமெரிக்காவினால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ரசியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா வர்த்தகத்தில் ஈடுபடுவதும் சிக்கல் நிறைந்ததாக இருக்கும் சூழலில், இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்து ஆளுநர் சக்திகாந்த தாஸ் நம்பிக்கை வெளியிட்டிருப்பது இந்தோ - பசுபிக் பிராந்திய அரசியலில் பெரும் தாக்கத்தைச் செலுத்தக்கூடிய ஆபத்துக்கள் உண்டு.

புவிசார் அரசியல் - பொருளாதார உத்திகளை வேறொரு வகிபாகத்தில் அமெரிக்கா கையாள முற்படுமாக இருந்தால், இலங்கை, நேபாளம் போன்ற சிறிய நாடுகள் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய சந்தர்ப்பங்களை மறுப்பதற்கில்லை. ஏற்கனவே பாகிஸ்தான் அமெரிக்கா பக்கம் நிற்கிறது

இருந்தாலும் இந்த ஆபத்துக்களை இல்லாமல் செய்து ஏற்றுமதி - இறக்குமதி தொடர்பான பணப் பரிவர்த்தனையை ரூபாயிலேயே மேற்கொள்வதற்கான கட்டமைப்புகளை இந்திய மத்திய வங்கி மேலும் விரிவுபடுத்தியும் வருகின்றது.

இந்த முயற்சி தற்போது கைகூடியுள்ளதாகவே இந்திய ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் நம்புகின்றனர். இதன் மூலம் இந்திய ரூபாய் சர்வதேச நாணயமாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் இந்தியாவுக்கு உண்டு.

ஆனால் அமெரிக்க டொலருக்கு எதிராகச் சர்வதேச வர்த்தகத்தில் தமது நாணயங்களைப் பயன்படுத்திய ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன், லிபியத் தலைவர் கடாபி ஆகியோர் அதிகளவு லாபத்தைப் பெற்றிருந்தாலும் இறுதியில் அவர்கள் இல்லாமல் போன வரலாறுகளும் உலகின் கண்முன்னே தெரிகின்றன.

அணுசக்தி ஆயுதங்கள் இருப்பதாகக் கூறியே ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்திருந்தது. ஆனால் அது பொய்க் குற்றச்சாட்டு என்றும் தாக்குதலுக்கான உண்மைக் காரணமும் பின்னர் பகிரங்கமாகியது.

இச் சூழலில், இந்திய ரூபாவைப் பயன்படுத்துவது என்ற ரசிய - இந்திய கூட்டு முயற்சி தற்போது வெற்றியளித்து வருவது போன்ற தோற்றப்பாட்டைக் காண்பித்தாலும், அது எந்தளவு காலத்துக்கு நீடித்துச் செல்லும் என்ற கேள்விகளும் விஞ்சியுள்ளன.

அதேநேரம் ஈராக், லிபியா ஆகிய சிறிய நாடுகளைத் தாக்கியது போன்று ரசிய - இந்தியக் கூட்டையும் அதற்கு ஆதரவு வழங்கும் நாடுகளையும் அமெரிக்கா இலகுவில் தாக்கிவிடவும் முடியாது.

ஆனால் புவிசார் அரசியல் - பொருளாதார உத்திகளை வேறொரு வகிபாகத்தில் அமெரிக்கா கையாள முற்படுமாக இருந்தால், இலங்கை, நேபாளம் போன்ற சிறிய நாடுகள் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய சந்தர்ப்பங்களை மறுப்பதற்கில்லை. ஏற்கனவே பாகிஸ்தான் அமெரிக்கா பக்கம் நிற்கிறது.

அத்துடன் சீன - இந்திய பகைமை என்பது இலகுவில் உடன்பாட்டுக்கு வரக்கூடியதுமல்ல. இருந்தாலும் வட இந்திய பாதுகாப்புக் கருதி ரசியா மூலம் சீனாவுடன் இந்தியா முரண்பாட்டில் உடன்பாட்டுக்கு வரக்கூடிய வாய்ப்புகளும் உண்டு.

ஆனாலும் இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகத்தை மேற்கொள்ள சீனா உடன்படாது. எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாகப் பிரித்தானியா இருந்தபோது, சர்வதேச வர்த்தகச் செயற்பாடுகளில் யூரோ நாணயத்தைப் பயன்படுத்தாமல் தமது பவுன்ஸ் நாணயத்தில் மாத்திரம் பிரித்தானியா ஈடுபட்ட உத்தியைச் சீனவும் கையாளக்கூடும்.

அதாவது தெற்காசியப் பிராந்தியத்தில் சீனா, தனது நாணயத்தில் மாத்திரம் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டுக் கொண்டு இந்திய ரூபாவில் ஏனைய நாடுகள் வர்த்தகத்தில் ஈடுபடுவதை அனுமதிக்க விரும்பக்கூடும்.

ஏனெனில் சீன - ரசிய உறவு என்பது ஆழமானது. இந்த உறவுதான் இந்தியாவுக்கும் பாதுகாப்பானது. இந்தப் பாதுகாப்புக்குள் இலங்கையும் இணையுமா இல்லையா என்பதைத் தற்போது அனுமானிக்க முடியாது.

ஏனெனில் இந்தியாவைக் கடந்து அமெரிக்க – சீன அரசுகளுடன் சமாந்தரமான - நேரடியான உறவைப் பேண வேண்டும் என்பதே சிங்கள ஆட்சியாளர்களின் நீண்டகால விருப்பம்.

1983 இல் என்ன காரணத்துக்காக அமெரிக்காவுடன் இந்தியா கூட்டாளி நாடாக மாறியதோ, அதேபோன்றதொரு காரண காரிய பின்புலத்தில் 2023 ஆம் ஆண்டில் ரணில் அமெரிக்காவை நெருங்க முனைகிறார்.

இந்திய ரூபாவைச் சா்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்தும் இந்திய - ரசிய வியூகம், டொலருக்கு ஆபத்து என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

ஐரோப்பிய ஒன்றியம் யூரோ நாணயத்தைப் பயன்படுத்துவதும் அமெரிக்க டொலருக்குத் தொடர்ச்சியான விழ்ச்சிதான். இருந்தாலும் வேறு வகையான அணுகுமுறைகள் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான உறவை அமெரிக்காவினால் பேண முடிகிறது.

ஆனால் அதேபோன்று தெற்காசிய நாடுகளுடன் அமெரிக்காவுக்கு வேறு வழியிலான அணுகுமுறைகளைப் பின்பற்றுவது கடினம்.

இக் காரணங்களினால் அமெரிக்க - இந்திய உறவும், ரசிய இந்திய உறவும். சீன, இந்திய உறவும் எதிர்காலத்தில் பல பரிமாணங்களில் முரண்பாடான ஒழுங்கற்ற அரசியல் (Paradoxically Irregular Politics) தன்மையை உருவாக்கலாம்.

1983 இல் என்ன காரணத்துக்காக அமெரிக்காவுடன் இந்தியா கூட்டாளி நாடாக மாறியதோ, அதேபோன்றதொரு காரண காரிய பின்புலத்தில் தற்போது ரணில் அமெரிக்காவை நெருங்க முனைகிறார்

அந்த ஒழுங்கற்ற அரசியல் தன்மைக்குள் இலங்கை நிலையை தக்கவைப்பதில், ரணிலின் பார்வை அமெரிக்காவை நோக்கியதாகவே நீளுகிறது. சீனாவை நோக்கிய நம்பிக்கையும் ரணிலுக்கு உண்டு.

அதேநேரம் இந்திய ரூபாய்களை சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்தி இலங்கைத்தீவின் தற்போதைய டொலர் நெருக்கடியைக் குறைக்கும் நுட்பங்களையும் மிகச் சாதுரியமாக டில்லியை ரணில் கையாளுகின்றார்.

அதாவது ஈழத்தமிழர் விவகாரம் உள்ளிட்ட இலங்கைத்தீவின் உள்ளக அரசியல் - பொருளாதார ரீதியில் சிந்தித்து, வல்லரசுகளின் புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிகளுக்குள் சிக்குப்படாமல் சிங்களத் தேசியத்தைக் காப்பாற்ற விளைகிறார்.

இப் பின்னணியில் சிங்களவர்களைக் கையாளக்கூடிய அளவுக்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் வழிகாட்டல் தலைமைக்குரிய (Guiding Leadership) அரசியல் வகிபாகம் இல்லை என்பது அமெரிக்க இந்திய அரசுகளுக்குப் புரியாததல்ல. ஏன் சீனாவுக்கும் அது தெரியும்.

இந்த இடத்தில் ஈழத்தமிழ்த்தரப்பு தமக்குள் உள்ளக மோதல்களிலும் சிலை வைப்புப் போட்டிகளிலும் ஈடுபட்டுத் "தமிழ்த்தேசிய அரசியல் விடுதலை" (Political Emancipation) என்ற பிரதான இலக்கைத் தவறவிட்டுக் கொண்டிருக்கின்றது.

வெவ்வேறு உணர்வுகளுக்குள் மிகவும் இலாவகமாக எடுபட்டுத் தம்மை அறியாமலேயே தமிழ்ச் சமூகம் இலகுவாகப் பலியாகிக் கொண்டிருக்கிறது.