ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி அனைத்து சபைகளையும் கைப்பற்றும் என்ற காரணத்தினால் ரணில் விக்கிரமசிங்க தலைமயிலான ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலை ஒத்திவைக்க முற்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கே ஆதரவளிப்தால், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தி அடைந்துள்ளதாக தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால், தமிழர் நலன் மற்றும் நடைபெறவுள்ள தேர்தல்களை மையமாகக் கொண்டு ஐக்கியதேசியக் கட்சியுடன் மாத்திரமே இணைந்து செயற்பட முடியும் என சம்பந்தன் கூறியதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலக வேண்டும் என டிலான் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அதேவேளை, அரசாங்கம் அமைத்துள்ள விசேட நீதிமன்றங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் அவரது அரசாங்கதில் பதவி வகித்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கில் செயற்படும் என கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே விசேட நீதிமன்றங்களை அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டது என்றும் இது நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் சதி எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்திரா வன்னியாராட்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளித்த பதவித்திர வன்னியாரட்சி, கூட்டு எதிர்க்கட்சியின் மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருவதால், அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை பிற்போட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
விசேட நீதிமன்றங்களை அமைத்து விசாரனை என்ற போர்வையில் கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் பலரை சிறையில் அடைத்து இழந்துபோன மக்கள் செல்வாக்கை அதிகரிப்பதற்காகவே குறுக்குவழிகளை அரசாங்கம் கையாள்வதாகவும் அவர் கூறினார்.