சீனாவுக்கு எதிரான அமெரிக்கா, இந்தியா. ஜப்பான் ஆகிய நாடுகளின் பூகோள அரசியல்

இந்துமா சமுத்திரத்தின் பாதுகாப்பு, பயன்பாடுகள் தொடர்பான ஆதிக்கம் யாருக்கு? ஆராய கொழும்பில் சர்வதேச மாநாடு

திருகோணமலைத் துறைமுகம், வடக்கு கிழக்கு கடல் பிரதேசங்கள் அமெரிக்காவிடம்
பதிப்பு: 2018 ஒக். 07 12:58
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 08 10:38
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஈழத் தமிழர்களின் திருகோணமலைத்துறைமுகம், வடக்கு- கிழக்குக் கடற் பிரதேசங்களை பிரதானமாகக் கருதி, இலங்கை இந்தியாவை மையமாகக் கொண்ட இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு மற்றும் பயன்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக இலங்கையின் தலைநகர் கொழும்பில் சர்வதேச மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது. எதிர்வரும் 11ஆம் 12ஆம் திகதிளில் இடம்பெறவுள்ள மாநாட்டில், இந்தியா, சீனா, ஜப்பான் அமெரிக்க, தென்ஆபிரிக்கா போன்ற நாடுகளின் பிரதான இராஜதந்திரிகள் கலந்துகொள்ளவர். இந்தியப் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண், ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணைச் செயலாளர் எலிஸ் ஜீ. வெல்ஸ், சீன வெளிவிவகார அமைச்சின் எல்லைத் திணைக்களம் மற்றும் சமுத்திர விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் ஹீ ஷியான்லியாங் ஆகியோர் கலந்துகொள்ளவர்.
 
தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் அனில் சூக்லால் மற்றும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் சிறப்புத் தூதுவர் பீற்றர் தொம்சன் ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்குகொள்ளவுள்ளனர்.

ஜப்பான் சார்பில் கொழும்பில் உள்ள தூதரக உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளவார்கள். இந்த மாநாட்டுக்கான ஏற்பாட்டை இலங்கை அரசு செய்துள்ளதாக ஊடகங்களுக்கு கூறப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவின் இராணுவத் தேவைக்குப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என இலங்கைப் பிரதமர் ரணில் செய்துள்ள சத்தியத்தை அமெரிக்கா. இந்தியா. ஜப்பான் போன்ற நாடுகள் நம்புவதாக இல்லை. இந்த நிலையில் கொழும்பில் நடைபெறவுள்ள இரண்டு நாள் சர்வதேச மாநாடு குழப்பமடையலாம். அல்லது முரண்பாட்டில் ஓர் உடன்பாடாக நிறைவடையலாம் என்பது அவதானிகளின் பார்வை.

ஆனால், அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் அழுத்தங்களினால் இந்த மாநட்டை இலங்கை அரசு ஏற்பாடு செய்ததாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் அதுவும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னரான நிலையில் இவ்வாறான மாநாடு ஒன்றை நடத்த இந்த நாடுகளுக்கு வசதி ஏற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

மாநாட்டின் நோக்கம், இந்து மா சமுத்திரத்தின் பாதுகாப்பு என்று கூறினாலும் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா முழுமையாக தனது இராணுவத் தேவைக்கு பயன்படுத்தவுள்ளது என அமெரிக்கா, ஜப்பான் இந்தியா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

ஜப்பான்
இந்து மா சமுத்திரத்து சமுத்திரம் அடங்கலாக ஆசிய- பசுபிக் கடல் (Indo-Pacific) பிராந்தியங்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் அமரிக்கா, இந்தியா. ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் இணைந்து கூட்டுப் பயிற்சி (Malabar exercise) நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 2015 ஆம் ஆண்டில் இருந்து இவ்வாறான கூட்டுப் பயிற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. அதேவேளை, இலங்கையின் அம்பாந்தோட்டைத்துறை முகத்தை சீனா தனது இராணுவத் தேவைக்குப் பயன்படுத்தும் என அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் (Mike Pence) கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நியூயோர்க்கில் கூறியிருந்தார். ஹட்சன் நிறுவனத்தில் இடம்பெற்ற வெளியுறவுக் கொள்ளை தொடர்பான விளக்கவுரை ஒன்றை அவர் நிகழ்த்தியிருந்தார். அமெரிக்காவின் கொள்கை வகுப்பாளர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். ஆகவே மைக் பென்ஸ் இவ்வாறு கூறியுள்ள நிலையில் எதிர்வரும் 11, 12ஆம் திகதிகளில் கொழும்பில் இந்து மா சமுத்திரத்தின் பாதுகாப்பு, பயன்பாடுகள் தொடர்பான மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இரண்டு நாள் மாநாட்டில் இந்து சமுத்திரத்தில் சர்வதேச சட்டத்தைப் பலப்படுத்தல், கடல்சார் சட்டம் பற்றிய ஐக்கிய நாடுகள் சாசனம், இந்து சமுத்திரத்தின் பொருளாதாரம், நவீன அரசுகளின் புதிய வளர்ச்சி மாற்றங்கள், அபிவிருத்தியை மையமாகக் கொண்டு சமுத்திரங்களை பலப்படுத்தல், போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல், கடல்வள மாசுபாடு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்படும் என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சு கூறியுள்ளது.

அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் போர்க் கப்பல்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் கொழும்புத் துறைமுகத்துக்கும் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகமான திருகோணமலைத் துறைமுகத்துக்கும் வந்து சென்றிருந்தன.

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) பாதுகாப்புத் துறை அமைச்சர் இட்சுனோரி ஒனேடேரா (Itsunori Onodera) ஆகியோர் இருவார இடைவெளியில் கொழும்புக்கு வந்து சென்றிருந்தனர்.

அம்பாந்தோட்டைத்துறை முகம் அனைத்து நாடுகளின் பயன்பாட்டுக்கும் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனேடேரா, கொழும்பில் கட்டளை பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் கொழும்பில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. அதேவேளை, சீனக் கடற்படையின் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் கடந்த வியாழக்கிழமை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.

இந்தியாவும் ஜப்பானும் சீனாவின் பிராந்திய நகர்வுகளுக்கு எதிரான அல்லது அந்த நகர்வுகளை அவதானித்து மாற்று வழிகளை ஏற்படுத்தக் கூடிய பாதுகாப்புக் கருத்தரங்கு ஒன்றை கடந்த ஆண்டு மே மாதம் நடத்தியிருந்தது.

அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையில் சீனாவின் செயற்பாடுகளை கண்காணி்ப்பதற்கும் அல்லது தடுக்கும் நோக்கிலும் செயற்பட்டு வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், சீனாவின் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.

இரண்டாயிரத்து 333 ஹெக்டயர் கடல் பிரதேசத்தை மண்ணால் நிரப்பி செய்யப்பட்டு வரும் கொழும்பு போட் சிற்றித் திட்டம் குறித்து, ஜப்பான் இலங்கை அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக தனியான சட்டமூலம் ஒன்றை இலங்கை அரசியலமைப்பில் இணைப்பதற்கு இலங்கை அரசு உடன்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்திலும் சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு போட் சிற்றிப் பிரதேசத்தை தனியான பகுதியாகக் காண்பித்தே புதிய சட்ட மூலம் ஒன்று வரையப்படுகின்றது. ஆகவே சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் இந்து மா சமுத்திரத்தின் பாதுகாப்புக் குறித்த எதிர்காலம், எ்வ்வாறு அமையும் என்பது தொடர்பாகவும் இந்த மாநாட்டில் கேள்விகள் எழுப்பப்பட்டலாம் என கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

இரண்டு நாள் சா்வதேச மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்களை இலங்கையில் அடுத்து ஆட்சிக்கு வரவுள்ள அரசாங்கம் எதுவாக இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதான நிலைப்பாடு.

இறுதிப் போருக்கு உதவியளித்த அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் தமக்கிடையேயான அரசியல், பொருளாதார போட்டிகளின் மத்தியிலும் இலங்கை மீதான சீனாவின் செயற்பாடுகள் குறித்து ஒரே புள்ளியில் நின்று கவனம் செலுத்துகின்றன.

அதற்காக வடக்கு- கிழக்குத் தமிழர் தாயகப் பிரதேசத்தில் உள்ள கடற் பகுதிகள் மற்றும் திருகோணமலைத் துறைமுகம் ஆகியவற்றையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டுள்ளன.

குறிப்பாக திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் சென்ற செப்ரெம்பர் மாதம் இரண்டாம் திகதி அமெரிக்க நிறுவனம் ஒன்றினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கான ஒப்பந்தம் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி இலங்கை அரசுடன் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே இலங்கை மீதான சகலவிதமான அழுத்தங்கள் மற்றும் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகக் கடற் பிரதேசங்கள் துறைமுகங்கள் என அனைத்து வளங்ளையும் பயன்படுத்தக்கூடிய அதிகாரத்தை எடுத்துக் கொண்ட சூழலில் இந்த சா்வதேச மாநாடு நடைபெறுகின்றது.

ஆனால், இந்த அரசியல் நகர்வுகளை தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமல்ல தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் எவருமே அக்கறையுடன் கூர்ந்து கவனிக்கவில்லை என அவதானிகள் கூறுகின்றனர்.

ஆனால் இந்த இரண்டு நாள் சா்வதேச மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்களை இலங்கையில் அடுத்து ஆட்சிக்கு வரவுள்ள அரசாங்கம் எதுவாக இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதான நிலைப்பாடு என உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, இந்தியாவும் ஜப்பானும் சீனாவின் பிராந்திய நகர்வுகளுக்கு எதிரான அல்லது அந்த நகர்வுகளை அவதானித்து மாற்று வழிகளை ஏற்படுத்தக் கூடிய பாதுகாப்புக் கருத்தரங்கு ஒன்றை கடந்த ஆண்டு மே மாதம் நடத்தியிருந்தது.

இதன் பின்னணியிலேதான் கடந்த ஓகஸ்ட் மாதம் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனேடேரா புதுடில்லிக்குச் சென்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமனைச் சந்தித்திருந்தார்.

அதன் பின்னரே அவர் கொழும்புக்கும் வருகை தந்திருந்தார். குறிப்பாக திருகோணமலைத் துறைமுகம் நரேந்திர மோடி அரசின் ஒத்துழைப்புடன் அமெரிக்காவிடம் கையளிப்பதற்கு ஜப்பான்- இந்திய உறவும் ஓர் காரணமாகும் என அரசியல் ஆய்வுகள் கூறுகின்றன.

திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவின் நரேந்திர மோடி அரசு அமெரிக்காவுக்குத் தாரை வார்த்துள்ளது என கூர்மை செய்தித்த தளத்தில் செய்திக் கட்டுரை ஒன்றும் கடந்த செப்ரெம்பர் மாதம் பிரசுரமாகியிருந்தது.

இலங்கையின் அம்பாந்தோட்டைத்துறை முகத்தை சீனா தனது இரணுவத் தேவைக்குப் பயன்படுத்தும் என அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் (Mike Pence) நியூயோர்க்கில் கூறியிருந்தார்.

ஹட்சன் நிறுவனத்தில் இடம்பெற்ற வெளியுறவுக் கொள்ளை தொடர்பான விளக்கவுரை ஒன்றை அவர் நிகழ்த்தியிருந்தார். அமெரிக்காவின் கொள்கை வகுப்பாளர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்தியா ஜப்பான்
இந்தியா ஜப்பான் ஆகிய இரு நாடுகளும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தமது பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பாக ஆராய்ந்துள்ளன. (Strengthen defence cooperation) கடந்த ஆண்டு மே மாதம் இந்தப் பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பான கூட்டம் ஜப்பானில் நடைபெற்றது. இந்திய ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் பங்குபற்றியிருந்தனர்.

ஆனால், சீனாவின் இராணுவத் தேவைக்கு அம்பாந்தோட்டைத் துறைமுகம் பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது என இலங்கையின் பிரதமர் ரணில் வி்க்கிரமசிங்க. கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் சத்தியம் செய்திருந்தார்.

சீனாவில் உள்ள இலங்கைக்கான தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் ரணிலைப் போன்று சத்தியம் செய்திருந்தார். அதாவது சீனாவின் இராணுவத் தேவைக்கு அம்பாந்தோட்டையைப் பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது என்று அவர் உறுதியளித்திருந்தார்.

ஆனாலும் அமெரிக்கா. இந்தியா. ஜப்பான் போன்ற நாடுகள் இந்த சத்தியங்களை நம்புவதாக இல்லை. இந்த நிலையில் கொழும்பில் நடைபெறவுள்ள இரண்டு நாள் சர்வதேச மாநாடு குழப்பமடையலாம். அல்லது முரண்பாட்டில் ஓர் உடன்பாடாக நிறைவடையலாம் என்பது அவதானிகளின் பார்வை.