பிரதமர் ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட முயற்சிக்கும்படி, இலங்கை தமிழ்ச் சமூகத்திடமும் அதன் மூத்த மதிப்புக்குரிய தலைவர் சம்பந்தனிடமும் தான் வலியுறுத்துவதாக அந்த ரூவிற்றர் பதவில் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு மஹிந்த ராஜபக்சவோடு இணைந்து பயணித்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் திர்வு கிட்டும். அந்த முயற்சிக்கு உதவி தேவைப்பட்டால் அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு செய்யத்தயார் என்றும் சுப்பிரமணியள் சுவாமி தெரிவித்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம 12ஆம் திகதி புதுடில்லியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் மஹிந்த ராஜபக்ச உரையாற்றச் சென்றிருந்தார். அதற்கான அழைப்பை சுப்பிரமணியன் சுவாமி இலங்கையின் அம்பாந்தோட்டைக்குச் சென்று விடுத்திருந்தார்.
அழைப்பை ஏற்று மஹிந்த ராஜபக்ச புதுடில்லிக்குச் சென்றிருந்தபோது, இலங்கையின் அடுத்த ஜனாதிபதி என்றும் சு்ப்பிரமணியன் சுவாமி வெளிப்படையாகக் கூறியிருந்தார்.
அத்துடன் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியையும் மஹிந்த ராஜபக்ச தனது மகன் நாமல் ராஜபக்சவுடன் சென்று சந்தித்திருந்தார்.
இந்த நிலையில் மஹிந்த ராஜபக்சவுடன் ஒத்துழைத்துச் செயற்படுமாறு சுப்பிரமணியன் சுவாமி சம்பந்தனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவுக்கு எதிரான போட்டியில், இந்திய அரசாங்கம் திருகோணமலை சீனன்குடாவில் உள்ள எண்ணெய்க்குதங்களை பொறுப்பேற்றுள்ளது.
அத்துடன் முல்லைத்தீவில் இருந்து திருணேமலை உள்ளிட்ட கிழக்கு கடற்பரப்பில் எண்ணெய்வள ஆய்வை அமெர்க்கா கடந்த செப்ரெம்பர் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பித்துள்ளது. இதற்கு நரேந்திரமோடி அரசு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுமுள்ளது.
அதேவேளை, கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையையும் இந்தியா பெற்றுக் கொள்ளவுள்ளது. (இந்த விடயம் குறித்தே மைத்திரிக்கும் ரணிலுக்கு இறுதியாக இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மோதலும் ஏற்பட்டிருந்தது)
அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் இந்திய அரசு பொறுப்பேற்றுள்ளது.
ஆகவே அமெரிக்கா, ஜப்பான், இந்தியா என்ற நாடுகளின் இந்து மா சமுத்திரம் தொடர்பான பூகோள அரசியல் வியுகங்களுக்குள் இலங்கை முழுமையாக சிக்கியுள்ள நிலையிலேதான் மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த மாற்றத்தில் சீன அரசின் தலையீடு இல்லை என்று ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் சர்வதேச் செய்தியாளர்களிடம் ஏற்கனவே கூறியுள்ளார். ஆனாலும் இந்த மாற்றத்தை சீன அரசு தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் என தமிழ் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம் நிர்வாகம் முழுமையாக வெளியேறியுள்ள நிலையிலேதான் ராஜபக்ச அமெரிக்காவுடன் ஒத்துழைத்துச் செயற்படும் நகர்வு ஒன்றை இலகுவாகக் கையாண்டார்.
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவுடனும் பசில் ராஜபக்ச இந்தியாவுடனும் மஹிந்த ராஜபக்ச சீனாவுடனும் தமது நகர்வுகளை மூன்று வகையான அணுகுமுறையில் செயற்படுத்தி வருகின்றனர்.
ஜெனீவா மனித உரிமைச் சபையின் பேர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மிறல் குற்றச்சாட்டுக்கள் போன்றவற்றில் இருந்து வெளியேற வேண்டும் என்பதுதான் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் விருப்பமும்.
அதற்கேற்ப கோட்டாபய ராஜபக்ச மூலமாக அமெரிக்காவோடு ஏற்படுத்தியுள்ள உறவு முறையை சிங்கள பௌத்த தேசியவாதம் நிச்சயமாக வரவேற்கும்.
அந்த அடிப்படையில் இலங்கையில் மக்கள் செல்வாக்குள்ள சிங்கள அரசியல் தலைவர்களை அதுவும் ஈழத் தமிழா் விடயத்தில் கடும் போக்குடன் செயற்படும் சிங்கள அரசியல் தலைவர்களையே இந்திய மத்திய அரசும் ஆதரிக்கும். (காங்கிரஸாகவும் இருக்கலாம், பா.ஜா.க.வாகவும் இருக்கலாம்)
இந்த இடத்திலேதான் மறைமுகமான மற்றும் நேரடியான தலையீடுகள் மூலம் மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் மக்கள் செல்வாக்குள்ள அரசியல் தலைவர்களை உள்ளடக்கிய அரசாங்கத்தையே சர்வதேச நாடுகள் ஆதரிக்க வேண்டும் என கோட்டாபய ராஜபக்ச சென்ற சனிக்கிழமை கொழும்பில் செய்தியரள்களிடம் கூறியிருந்தார்.
அதேவேளை, சீனாவுடன் செய்யப்பட்ட உடன்படிக்கையினால் இலங்கை தனது சொந்தத் துறைமுகத்தின் மீதான இறைமையை இழந்துவிட்டதாக அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் சீனாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கை குறித்தே ஜேம்ஸ் மட்டிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
(மைத்திரி- ரணில் அரசாங்கத்திலேதான் அந்த உடன்படிக்கை செய்யப்பட்டிருந்தது. ஆகவே ரணில் மீதே அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் குற்றம் சுமத்துகின்றார் என்று கருத முடியும்)
அமெரிக்காவின் சமாதானத்திற்கான நிலையத்தில் உரையாற்றுகையிலேயே ஜேம்ஸ் மட்டிஸ் இவ்வாறு கூறியிருந்தார்.
ஆகவே சென்ற வெள்ளிக்கிழமை முதல் மாற்றமடைந்துள்ள மைத்திரி- மஹிந்த அரசாங்கத்தை அமெரிக்கா ஆதரிக்கும் என்ற தகவலையே அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் வெளிப்படுத்திய இந்தக் கருத்து கோடிட்டுக் காண்பிக்கின்றது.
இதேவேளை, இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகம் அனைத்து நாடுகளினதும் கப்பல்கள் வந்துசெல்லக் கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) கடந்த ஓகஸ்ட் மாதம் கொழும்பில் கூறியிருந்தார்.
அதேவேளை, இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் திடீரென நேற்று புதன்கிழமை மாலை கொழும்புக்குச் சென்றுள்ளார்.
அலய்னா இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தனது நியமனப்பத்திரத்தைக் கையளித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போருக்கு இந்திய அரசு சகல வழிகளிலும் உதவி செய்திருந்ததாக கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் காலியில் 2013 ஆம் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாடு ஒன்றில் பகிரங்கமாகவே கூறியிருந்தார்.
அமெரிக்கா, ஜப்பான், சீனா போன்ற சர்வதேச நாடுகள் தமது அரசியல், பொருளாதார வேறுபாடுகளுக்கு மத்தியிலும், இறுதிப் போரில் இலங்கை அரசுக்கு உதவியளித்திருந்தன.
இதனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் இந்த நாடுகளுக்கு இலங்கை மீது ஆதிக்கம் செலுத்த வசதியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.