அதேவேளை, மாகாணசபைத் தேர்தல்கள் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட வேண்டிய நிலையில் எவ்வாறு ஜனாதிபதித் தேர்தலுக்குரிய ஏற்பாடுகளை செய்வது என்பது குறித்தும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
இது சட்டப் பிரச்சினை என்றும் இது தொடர்பாகவும் உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறிவதுடன், அரசியல் கட்சிகளின் தலைவர்களோடும் கலந்துரையாட வேண்டும் எனவும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளதாக அறிய முடிகின்றது.
இதேவேளை, நான்கு வருடங்களும் ஆறு மாதங்களும் முடிவுறாத நிலையில் மைத்திரிபால சிறிசேன எவ்வாறு நாடாளுமன்றத்தைக் கலைத்தார் என ஐக்கியதேசியக் கட்சி உடனடியாகவே கேள்வி எழுப்பியுள்ளது.
ஆனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை யாப்பு விதிகளுக்கு அமைவானதுதான் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
எனினும் அரசியல் யாப்பின் 70 ஆவது சரத்தில் உறுப்புரையின் முதலாவது பந்தியில் ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 19 ஆவது திருத்தச் சட்டத்தை மைத்திரிபால சிறிசேன மீறியுள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உயர் நீதிமன்றத்தின் கருத்தை அறிய முற்படுகின்றமை மைத்திரி - மஹிந்த ஆகியோரின் நடவடிக்கைகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆனாலும் இலங்கை நீதித்துறையின் சுயாதீனத் தன்மை தொடர்பாக பிரதான அரசியல் கட்சிகளின் சட்டத்தரணிகளே கேள்விக்கு உட்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டால் தேர்தல் நடத்தப்படும் திகதியை அரசியல் கட்சித் தலைவர்களுடன் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரே கலந்துரையாடி தீர்மானிக்க வேண்டும்.
ஆனால் மைத்திரிபால சிறிசேன, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி தேர்தல் நடைபெறும் என அரச வர்த்தமானியில் அறிவித்துள்ளமை குறித்தும் கொழும்பில் பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனினும் ஜனாதிபதி தொடர்ந்தும் அதிகாரத்துடன் செயற்படுவதால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் தேர்தல் நடைபெறும் திகதியை ஜனாதிபதி தீர்மானிக்க முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறுகின்றது.