பூகோள அரசியல் சார்ந்த இராணுவ நகர்வுகள்

பாக்கிஸ்தான் கடற்பரப்பில் இடம்பெறவுள்ள கூட்டுப் பயிற்சியில் இலங்கைக் கடற்படையும் பங்கேற்பு

அமெரிக்கா கலந்துகொள்ளவில்லை - இந்தியா அவதானிப்பு
பதிப்பு: 2019 பெப். 03 22:59
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: பெப். 04 19:05
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Pakistan
#Srilanka
#America
#SrilankaNavy
#Amaan
நாற்பத்து நான்கு நாடுகளின் கடற்படையினர் பங்குபற்றும் அமான் 2019 என்ற பெயரிலான மிகப்பெரிய கூட்டுப் பயிற்சி எதிர்வரும் எட்டாம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சியில், இலங்கைக் கடற்படையும் பங்குகொள்ளவுள்ளது. கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக சயுரால என்ற இலங்கைக் கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் இருந்து நேற்று சனிக்கிழமை பாகிஸ்தான் நோக்கிப் பயணமாகியுள்ளது. எதிர்வரும் 6ஆம் திகதி பாகிஸ்தான் - கராச்சி துறைமுகத்தை அந்தக் கப்பல் சென்றடையும் என இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது. இந்தக் கப்பலில் 28 அதிகாரிகள், 142 மாலுமிகள் உட்பட 170 இலங்கை கடற்படை அதிகாரிகள் சென்றுள்ளனா். இந்தக் கூட்டுப் பயிற்சியில் இந்தியக் கடற்படை பங்குகொள்ளவில்லை.
 
அவுஸ்திரேலியா, கனடா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், கட்டார், ரஷ்யா, சீனா, ஜேர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மலேசியா, மாலைதீவு உள்ளிட்ட 44 நாடுகளின் கடற்படை இந்தக் கூட்டுப் பயிற்சியில் இணையவுள்ளது.

அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்துடன் இந்தியாவின் நரேந்திரமோடி அரசு தற்போது உருவாகியுள்ள அரசியல் இராணுவ உறவுகளின் பின்னணியில் இந்தியா பெற்றிருக்கும் கடல் சுதந்திரத்தினால் சீனா அச்சமடைந்துள்ளது.

தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு விசுவாசமாகச் செயற்படும் ஜப்பான் இந்தக் கூட்டுப் பயிற்சியில் இணைந்துள்ளது.

இதனால் பாகிஸ்தான் - கராச்சி துறைமுகத்தில் இடம்பெறும் இந்தக் கூட்டுப் பயிற்சி தொடர்பாக இந்தியா பெரியளவில் கரிசனை கொள்ளவில்லையென அவதானிகள் கூறுகின்றனர்.

ஆனாலும் பாகிஸ்தான், அரசியல் மற்றும் இராணுவ ரீதியாக எதிரி நாடு என்பதால், கராச்சியில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டுப் பயிற்சி தொடர்பாக இந்தியா உன்னிப்பாக அவதானிக்கும் எனக் கூறப்படுகின்றது.

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், தமது கவனத்தைக் கூடுதலாகச் செலுத்தி வரும் அமெரிக்கா, ஈழத் தமிழர்களின் வடக்கு - கிழக்கு தாயகத்தில் குறிப்பாக திருகோணமலைத் துறைமுகத்தை இலக்கு வைத்து தமது படைத் தளங்களை அங்கு அமைத்து வருகின்றது.

முல்லைத்தீவு - திருகோணமலை உள்ளிட்ட கிழக்கு கடற்பகுதியில் எண்ணெய்வள ஆய்வு ஒன்றை செய்து வருகின்றது. கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி எண்ணெய்வள ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இந்தியாவின் நரேந்திரமோடி அரசும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது. சீனாவின் இலங்கை மீதான ஆதிக்கமே திருகோணமலைத் துறைமுகத்தில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்துவதாக கூறப்படுகின்றது.

ஆனால் திருகோணமலையில் படைத் தளம் அமைக்க அமெரிக்காவுக்கு அனுமதி வழங்கப்படவில்லையென இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது.

ஜே.வி.பி உறுப்பினர் பிமல் ரட்னாநாயக்க கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் திருகோணமலையில் அமெரிக்கா படைத் தளம் ஒன்றை அமைப்பது குறித்து எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல மறுப்புத் தெரிவித்திருந்தார்.

ஆனால் அமெரிக்காவின் எண்ணெய்வள ஆய்வு பற்றி இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவிக்கவில்லை. இங்கு வேடிக்கை என்னவென்றால், சீன அரசுக்குச் சொந்தமான நவீன கப்பல் ஒன்றையே அமெரிக்கா வாடகைக்குப் பெற்று, ஈழத் தமிழர்களின் முல்லைத்தீவு - திருகோணமலை கடற்பரப்பில் எண்ணெய்வள ஆய்வைச் செய்கின்றது.

அதேவேளை, 2010 ஆம் ஆண்டு மாசி மாதம் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இந்திய கடற்படை நடாத்திய கூட்டு கடற்படைப் பயிற்சியில் ஆசியாவின் சகல நாடுகளும் பங்கெடுத்திருந்தன.

சர்வதேச கடற்பரப்பில் எல்லா நாட்டுக் கப்பல்களும் சர்வதேசச் சட்டங்களை ஏற்று பிரயாணம் செய்து வருகின்றது. ஆகவே தென்சீனக் கடற்பரப்பிலும் அனைத்து நாட்டுக் கப்பல்களும் பிரயாணம் செய்கின்ற சுதந்திரம் அவசியம் என்பது இந்தியாவின் சமீபகால எதிர்பார்ப்பாகும்.

சர்வதேச கடற் சட்டங்களை ஏற்று அனைத்து நாடுகளினதும் சுதந்திரமான கடற்பயணம் அமைய வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பமாகும்.

ஆகவே தென்சீனக் கடற்பரப்பின் சுதந்திரத்திற்குத் தேவையான விலையைக் கொடுக்க இந்தியா தயாரகவுள்ளது என்பதையே சமகால அரசியல் நகர்வுகள் கோடிட்டுக் காட்டுகின்றன.

அதேவேளை, தென்சீனக் கடற் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த சீனா முழு ஏற்பாடும் செய்துள்ளது. ஆனால் இதற்குத் தடையாக இந்தியா இருப்பதை சீனா விரும்பவில்லை.

இதற்காக இந்தியாவின் கொல்லைப் புறமாகக் கருதப்படும் மியன்மார், நேபாளம், இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் வர்த்தகம், மூலப்பொருள் உட்பட ஏனைய விடயங்களிலும் இருதரப்பு உறவுகளைச் சீனா உருவாக்கி இந்தியாவை அச்சுறுத்தி வருகின்றது.

இதன் காரணமாகவே தென்சீன கடற்பரப்பில் இந்தியாவின் பிரசன்னத்தை ஜப்பான் வரவேற்று வருகின்றது.

ஆனாலும் அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கத்துடன் இந்தியாவின் நரேந்திரமோடி அரசு தற்போது உருவாகியுள்ள அரசியல் இராணுவ உறவுகளின் பின்னணியில் இந்தியா பெற்றிருக்கும் கடல் சுதந்திரத்தினால் சீனா அச்சமடைந்துள்ளது.

இதனால் சீனா இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் அந்த அச்சத்தைப் போக்க முயற்சிக்கின்றது. இவ்வாறானதொரு நிலையில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அந்தக் கூட்டுப் பயிற்சியில் ஜப்பான் பங்கேற்கின்றமை இந்தியாவுக்கு உற்சாகமானதொன்றாகவே அமையலாம்.