நிரல்
ஜூன் 12 10:16

ஸர்க்கான் குறித்து ஜனவரியில் தகவல் வழங்கப்பட்டது-உலமா சபை

(யாழ்ப்பாணம், ஈழம்) ஸர்க்கான் தலைமையிலான தேசிய தவ்ஹித் ஜமாஅத் அமைப்பு குறித்து பல தட­வைகள் இலங்கைப் பாது­காப்பு உயர் அதிகாரிகளுக்குத் தெரி­வித்­திருந்ததாகவும் ஆனாலும் நடவடிக்கை எதுவுமே எடுக்கப்படவில்லையென்றும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி இலங்கை நாடாளுமன்றத் தெரி­வுக்­குழு முன்­னி­லையில் வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்தள்ளார். நேற்றுச் செவ்வாய்க்கிழமை அளித்த வாக்குமூலத்தில் ஸஹ்ரான், அவர் சார்ந்த குழுவின் செயற்­பா­டு­கள் எதுவுமே ஏனைய முஸ்லிம் மக்களுக்குத் தொடர்ப்பில்லாதவையெனவும் இலங்கைப் பாதுகாப்புத் தரப்புக்கு கூறியிருந்ததாக அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
ஜூன் 11 22:30

கலாசாரத்தை இழக்க முடியது- மகாநாயக்கத் தேரர்களிடம் முஸ்லிம்கள்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல. உலகில் இயங்குகின்ற இஸ்லாமிய இயக்கங்களோடு இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களுக்குத் தொடர்புகள் எதுவுமேயில்லையென அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகி முஸ்லிம் அமைச்சர்கள் கண்டி மகாநாயக்கத் தேரர்களிடம் கூறியுள்ளனர். உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற பயங்கரத் தாக்குதலின் பின்னரான சூழலில் இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக கருதப்பட்டு இலங்கைப் படையினரால் கைதாகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமெனவும் முஸ்லிம் உறுப்பினர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். கண்டியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் பதவி விலகிய ஒன்பது உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
ஜூன் 10 23:07

விகாரைகள் அமைப்பதை நிறுத்த முடியாது- மனோவிடம் பிக்குமார்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத் தமிழரின் தாயகமான வடமாகாணம் முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதால் ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பான கலந்துரையாடல் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசனின் தலைமையில் இன்று திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி பௌத்த குருமார் சிலர் செயற்படுகின்றமை தொடர்பாக பிரதேச மக்கள் அமைச்சர் மனோ கணேசனிடம் முறையிட்டுள்ளனர். கலந்துரையாடலுக்கு முன்னர் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்குச் சென்ற அமைச்சர் மனோ கணேசன், அங்கு நிலமைகளை அவதானித்தார். மனோ கணேசன் அங்கு சென்றதனால் பிக்குமார் சிலர் விசனம் தெரிவித்தனர்.
ஜூன் 10 10:43

நரேந்திர மோடி மாலைதீவுக்குச் சென்று கொழும்பு வந்ததன் பின்னணி

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் நான்கு மணி நேரப் பயணமாகக் கொழும்புக்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்லாமியவாதிகளின் பயங்கரத் தாக்குதல்களை தடுப்பதற்கு இலங்கைக்கு இந்தியா உதவியளிக்கும் என்று பகிரங்கமாகவே உறுதியளித்துள்ளர். பூகோள அரசியலில் சிக்குண்டுள்ள இலங்கையில் இஸ்லாமிய இயக்கம் ஒன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளமை அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கே அச்சுறுத்தல் என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் நரேந்திர மோடியின் கொழும்புக்கான பயணம் அமைந்துள்ளது. இலங்கைக்கு வருவதற்கு முன்னர் மாலைதீவுக்குச் சென்ற நரேந்திர மோடி, மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராகிம் முகமதுவோடு பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட ஆறு ஒப்பந்தங்கைளச் செய்துமுள்ளார்.
ஜூன் 08 23:18

தமிழரோடு முஸ்லிம்கள் மீண்டும் உறவைப் புதுப்பிக்கத் தடையா?

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் முஸ்லிம் மக்களையும் முஸ்லிம் அரசியல்வாதிகளையும் ஈழத் தமிழ் மக்களுடன் இணையவிடாது தடுக்கும் முயற்சிகளில் சிங்கள பௌத்த பேரினவாதம் தீவிரமாகச் செயற்படுவதை கொழும்பில் நடக்கும் அரசியல் நகர்வுகள் எடுத்துக் காண்பிக்கின்றன. அத்துரலியே ரத்தன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மறைமுகமாகவும் கூட்டாகவும் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்பது பேர் பதவி விலகியதாக மகிந்த தரப்பு உறுப்பினர் விமல் வீரவன்ச கூறியிருந்தார். இந்த நிலையில மகிந்த ராஜபக்சவை அமைச்சுப் பதவியில் இருந்து விலகிய முஸ்லிம் உறுப்பினர்கள் ஒன்பது பேரும் இன்று சனிக்கிழமை சந்தித்துள்ளனர்.
ஜூன் 08 20:39

மைத்திரிக்கு முன்பாக இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரிய மக்கள்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் இல்லாதொழிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் சென்றுலிட்ட நிலையிலும் தமிழ் இனப்படுகொலை குறித்த சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற விசாரணைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லையென்பதைச் சுட்டிக்காட்டி முல்லைத்தீவில் இன்று சனிக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முல்லைத்தீவுக்கு வந்தபோது எதிர்ப்பு வெளியிட்டு நடத்திய கவனயீர்ப்புப் போராட்டத்தின்போதே சர்வதேச நீதிகோரி மக்கள் கோசமெழுப்பினர். போரின் போதும் அதன் பின்னரான சூழலிலும் இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், எண்ணூற்றி 24 நாட்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜூன் 07 22:48

வாக்கு மூலங்கள் தவறுகளை வெளிப்படுத்துவதாக மைத்திரி சீற்றம்

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களை, இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் விசாரணைக்கு அனுமதிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்துள்ளது. அந்தத் தெரிவுக்குழுவின் இரண்டாம் கட்ட விசாணை நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இரண்டு கட்ட விசாணைகளிலும் தற்போது பதவியில் இருக்கும் இலங்கை இராணுவப் புலனாய்வாளர்கள், பாதூகாப்பு உயர் அதிகாரிகள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் வாக்கு மூலங்களை வழங்கியுள்ளனர். மேலும் பல புலனாய்வாளர்கள் வாக்கு மூலமளிக்கவுள்ளனர்.
ஜூன் 06 22:34

மகாநாயக்கத் தேரர்களின் கோரிக்கையை நிராகரிக்கும் முஸ்லிம்கள்

(யாழ்ப்பாணம், ஈழம்) மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளுமாறு பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்குப் பௌத்த மகாநாயக்கத் தேரர்கள் விடுத்துள்ள அழைப்பை பரிசீலனை செய்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றக் கட்டடத்தில் இன்று வியாழக்கிழமை அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களோடும் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படாத உறுப்பினர்கள் மாத்திரமே அமைச்சுப் பொறுப்பை ஏற்க வேண்டுமென மகாநாயக்கத் தேரர்கள் கூறியமை தொடர்பாக ஆராயப்பட்டதென்றும் விரைவில் மகாநாயக்கத் தேரர்களைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஜூன் 06 00:07

முஸ்லிம் உறுப்பினர்களுக்கு மகாநாயகத் தேரர்கள் அழைப்பு!

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் மக்களும் முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளிட்ட அமைச்சர்கள், முஸ்லிம் அதிகாரிகள் ஆகியோர் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் நான்கு நாட்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தினால் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தமது பதவிகளில் இருந்து சென்ற திங்கட்கிழமை விலக நேரிட்டது. ஆனாலும் தற்போது பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்க வேண்டுமென கண்டி மகாநாயக்கத் தேரர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் கேட்டுள்ளதாக அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன.
ஜூன் 05 12:27

தியாகி பொன் சிவகுமாரனின் 45 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் அனுட்டிப்பு

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத்தமிழ் மக்களது விடுதலைக்காக முதன்முதலில் நஞ்சருந்தி வீரச்சாவடைந்த தியாகி பொன் சிவகுமாரனின் 45 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் உரும்பிராய் பொதுச்சந்தைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள அவரது நினைவுச் சிலைக்கு முன்பாக முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து உரும்பிராய் வேம்படி மயானத்தில் உள்ள நினைவுத் தூபியிலும் அஞ்சலி வணக்கம் இடம்பெற்றது. நினைவேந்தலின் போது முதலில் அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஈகைச்சுடரை தியாகி பொன் சிவகுமாரனின் சகோதரி ஏற்றிவைத்த பின்னர் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.