(மன்னார், ஈழம்)
வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் அபிவிருத்தி என்ற பெயரில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களில் தமிழர் மரபுரிமைகள் புறக்கணிக்கப்பட்டு, சிங்கள மரபுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அத்துடன் சிங்கள மொழியில் வைக்கப்பட்ட பெயர்கள் அப்படியே தமிழ் மொழியிலும் எழுதப்படுகின்றன. குறிப்பாக, வீடமைப்புத் துறை அமைச்சர் சஜித் பிரேமதாச மேற்கொண்டுவரும் வீடமைப்புத் திட்டங்களில் சிங்கள மரபுரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு செல்வநகர் பிரதேசத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தில் பௌத்த சிங்கள மரபுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுத் தமிழர் மரபுரிமைகள் வீடமைப்புத் திட்டத்தில் முற்றாகவே புறக்கணிக்கப்பட்டிருந்தன.