செய்தி: நிரல்
நவ. 13 21:59

கோட்டாபயவின் இலங்கைக் குடியுரிமையை ரத்துச் செய்யுமாறு கோரி மீண்டும் மனுத் தாக்கல்

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் இலங்கைக் குடியுரிமையை ரத்துச் செய்யுமாறு கோரி இலங்கை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக் குடியுரிமையை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவே இன்று புதன்கிழமை மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பில் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, காமினி வியங்கொட ஆகியோரால் இந்த மேன்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இரு நாட்கள் உள்ள நிலையிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நவ. 12 22:42

ஒற்றையாட்சியின் முக்கியத்துவம் குறித்து மகாநாயக்கத் தேரர்களுக்கு விளக்கம்- பாட்டாலி சம்பிக்க ரணவக்க

(மட்டக்களப்பு, ஈழம்) ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய புதிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பதினாறாம் பக்கத்தில் இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை பாதுகாக்கும் அம்சம் இருப்பதாக அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கண்டி மகாசங்கத்தினருக்கு விளக்கமளித்துள்ளார். சஜித் பிரேமதாச விபரமான கடிதம் ஒன்றை மகாநாயக்கத் தேரர்களுக்கு எழுதியுள்ளதாக அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கூறினார். சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையின் ஒற்றையாட்சி பற்றிக் கூறப்படவில்லையென சிலர் வந்திகளைப் பரப்பியுள்ளனர்.
நவ. 12 16:10

பிரதான வேட்பாளர்களிடையே கடும்போட்டி- முடிவுகள் வெளிவருவதிலும் தாமதம் ஏற்படலாம்- ஆணைக்குழு தகவல்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் முப்பத்து ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனாலும் இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளின் இரு வேட்பாளர்களுக்கிடையேதான் கடுமையான போட்டி நிலவுகின்றது. ஜே.வி.பி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்காவுக்கு அதிகளவு வாக்குகள் செலுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அந்த வாக்குகள் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்குரிய வாக்குகளில் தாக்கத்தைச் செலுத்தலாமெனவும் கூறப்படுகின்றது. இதேவேளை, முப்பத்து ஐந்து வேட்பாளர்களில் குறைந்தது பன்னிரண்டு வேட்பாளர்கள் பிரதான வேட்பாளர்களினால் திட்டமிடப்பட்டுக் களமிறக்கப்பட்ட போலியான வேட்பாளர்கள் என்று இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
நவ. 11 22:08

தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்கவும்- தமிழ் மக்கள் பேரவையின் சுயாதீனக்குழு அறிக்கை

(யாழ்ப்பாணம், ஈழம்) பொது வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்வதில்தீவிரமாக ஈடுபட்ட தமிழ்மக்கள் பேரவையின் சுயாதீனக் குழு முயற்சி கூடாத நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் ஒப்பீட்டளவில் ஆகக் கூடுதலான தமிழ்த் தேசியக் கட்சிகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வேட்பாளருக்கு முதல் விருப்பு வாக்கையும் இரண்டாவது விருப்பு வாக்கை தந்திரோபாயமாகவும் வாக்களிக்குமாறு அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. சுயாதீனக் குழுவின் நீண்ட உரையாடல்களுக்கு பின்னரே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நவ. 11 15:50

ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த இந்திய அமைச்சர்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் வேட்;பாளர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம், மற்றும் பிரச்சார மேடைகளில் பேசப்படும் விடயங்கள் குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க, இந்தியத் தூதரகங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. பிரதான வேட்பாளர்களின் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களோடும் அவ்வப்போது சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்களின் மன நிலை எவ்வாறு இருக்கின்றது என்பதையும் இவர்கள் அறிந்து வருகின்றனர். இவ்வாறனதொரு நிலையில் இந்தியாவின் சட்டம் ஒழுங்கு, நீதி மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துள்ளார்.