ஜன. 06 15:26
(மன்னார், ஈழம் )
வடமாகாணம் மன்னார் மாவட்டத்திலுள்ள வங்காலைப் பிரதேசத்தில் 1985 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை மேரி பஸ்ரியன் மற்றும் அவரோடு சேர்த்துப் படுகொலை செய்யப்பட்ட சிறுவர்கள், பொது மக்கள் ஆகியோரை நினைவுகூரும் நாள் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. இன்று காலை ஏழு மணியளவில் வங்காலைப் புனித ஆனாள் தேவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள அமரர் மேரி பஸ்ரியன் அடிகளாரின் சிலைக்கு முன்பாக இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. பெருமளவு மக்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்ணாண்டோ, மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உட்பட அருட்தந்தையர்கள் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.