நிரல்
ஜன. 29 22:33

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய மார்ச் மாதம் கலைப்பார்- அமைச்சர் தினேஸ்

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை நாடாளுமன்றத்தை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி கலைத்துப் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவாரென வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை காலிப் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார். பலமான நாடாளுமன்றம் ஒன்று அவசிமயமாகும். 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றமே தற்போதும் உள்ளது. இதன் காரணத்தால் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியினால் பலமான அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை. எனவே ஏப்பிரல் மாதம் அறுதிப் பொரும்பான்மையுள்ள நாடாளுமன்றத்தை அமைக்கவுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.
ஜன. 28 23:06

சுதந்திர தினத்தைப் பகிஸ்கரிக்கவும்- காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர் சங்கம்

(கிளிநொச்சி, ஈழம்) எதிர்வரும் பெப்ரவரி மாதம் நான்காம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசின் எழுபத்து இரண்டாவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை பகிஸ்கரிக்குமாறு இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இறுதிப் போரில் இலங்கைப் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகள, கணவன்மார்; தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி அரசு இதுவரை கவனம் செலுத்தவில்லை. இந்த நிலையில் புதிதாகப் பதவியேற்றுள்ள கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்தி அரசாங்கம் சுதந்திர தினத்தைக் கொண்டத் தயார்படுத்தி வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
ஜன. 27 22:02

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல்- மக்கள் மத்தியில் குழப்பம்

(மட்டக்களப்பு, ஈழம் ) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மட்டக்களப்பு ஊடக மையத்தைச் சேர்ந்த சில ஊடகவியலாளர்கள் மரண அச்சுறுத்தல்களை எதிர்நோகியுள்ளனர். அலுவலகத்திற்குள் வீசப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்தில் மரண அச்சுறுத்தல் எனக் கூறப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை அனைத்துத் தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்படும் உயிர் அச்சுறுத்தலாகவே கருதுவதாகவும் ஒன்றியம் இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜன. 27 13:02

கிளிநொச்சி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விகாரைக் கோபுரத்தில் கலசம் வைக்கும் நிகழ்வு

(கிளிநொச்சி, ஈழம்) வடமாகாணம் கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட வளாகத்தில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு அதன் கோபுரத்தில் பௌத்த கலசம் வைக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை 6.15க்கு இடம்பெற்றுள்ளது. அனைத்து சமயங்களுக்கும் சம அளவிலான உயரத்தைக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் அமைப்பதற்கு ஒரு ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் பௌத்த விகாரை மிகப் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. சிங்கள மாணவர்களின் எற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கொழும்பில் இருந்து சென்ற பௌத்த குருமாரும் கலந்துகொண்டனர்.
ஜன. 26 21:52

தாயகப் பிரதேசத்தில் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம் உருவாகியது

வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுக்கும் நோக்கில் தமிழ் மக்கள் அபிவிருத்தி மேம்பாட்டு மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரியார், யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆகியோரின் தலைமையில் குறித்த மன்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கதீற்றல் விதியில் உள்ள யாழ் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் துறைசார்ந்த பேராசிரியர்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், பொருளியலாளர்கள், கல்வியாளர்கள், தொழில்சார் நிபுணர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
ஜன. 25 23:30

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரே வரவுசெலவுத் திட்டம்

(வவுனியா, ஈழம்) 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இதுவரை சமர்ப்பிக்கப்பட்வில்லை. கடந்த ஆண்டின் இறுதியில் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டிய வரவு செலவுத் திட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலாவது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசியல் காரணங்களின் அடிப்படையில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாலம் இழுத்தடிக்கப்படுவதாக உள்ள்கத் தகவல்கள் கூறுகின்றன. மாச் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்பிரல் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் கூடுதல் பெரும்பான்மை அரசாங்கத்தை அமைத்து வரவு செலவத் திட்டத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமென் ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ச கூறியுள்ளதாகக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜன. 24 22:30

யாழ் மாநகர சபைக்கான இணைப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ அதிகாரியை நியமிக்க முடிவு

(யாழ்ப்பாணம், ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் வடமாகாண ஆளுநராகப் புதிதாகப் பதவியேற்றுள்ள பி.எம்.எஸ் சார்ளஸ், யாழ் மாநாகர சபையின் இணைப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற கேணல் தரத்தில் உள்ள இலங்கை இராணுவ அதிகாரியொருவரை நியமிக்கவுள்ளதாக குற்றச்சாட்டுக்ள் எழுந்துள்ளன. யாழ்.மாநகர சபை நிர்வாக நடைமுறைகளில் குறிப்பிட்ட சில விடயங்களுக்கு மாத்திரமே ஆளுநரின் அனுமதி பெறப்பட வேண்டும். ஆனால் ஆளுநகருக்கான இணைப்பு அதிகரியாக ஓய்வு பெற்ற இராணுவ உயர் அதிகாரி நியமிக்கப்படுவதன் மூலம், மாநகர சபைக்குரிய அற்ப சொற்ப அதிகாரங்களையும் கொழும்பு நிர்வாகம் பறித்தெடுக்கும் சதித் திட்டமென யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
ஜன. 23 23:17

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல்

(மட்டக்களப்பு, ஈழம் ) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்புப் பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ஊடக அமையத்தின் அலுவலகத்துக்குள் வீசப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்திலேயே இவ்வாறு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளது. ஊடகச் சந்திப்பு ஒன்றை நடத்துவதற்காக இன்று பிற்பகல் 2.30க்கு ஊடக அமையத்தை திறந்தபோது மரண அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன. எச்சரிக்கை என்ற தலைப்பில் காணப்பட்ட அந்தத் துண்டுப் பிரசுரத்தில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
ஜன. 23 16:31

முல்லைத்தீவில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்க இலங்கை இராணுவம் குவிப்பு- மக்கள் விசனம்

(முல்லைத்தீவு, ஈழம் ) வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் பல்வேறு குற்றச் செயல்களைத் தூண்டிவிடப்பட்டு அதன் மூலம் இலங்கைப் படையினரைத் தொடர்ந்தும் அங்கு தங்கவைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுக்க இலங்கைப் படையினர் முல்லைத்தீவில் குறித்த சில பிரதேசங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்ட விரோத மணல் அகழ்வைத் தடுப்பது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
ஜன. 22 18:58

கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

(மட்டக்களப்பு, ஈழம் ) தமிழ் பேசும் மக்களின் கிழக்கு மாகாணம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவு முதலாம் அரையாண்டில் கற்கும் செங்கலடி பிரதேச மாணவன் சிவகுமார் பிரவின் சிரேஷ்ட மாணவர்களால் இன்று புதன்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ளார். தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார். பல்கலைகழக கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவர்கள் வன்முறையற்ற மாணவர் அமைப்பு என பகிடிவதையை இல்லாது ஒழிக்கும் ஒர் அமைப்பை உருவாக்கி செயற்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை பகல் வன்முறையற்ற மாணவர் அமைப்பை ஆரம்பித்த முதலாம் ஆண்டு மாணவர் இருவர் மீது இரண்டாம் ஆண்டு மாணவர் குழு ஒன்று தாக்குதல் நடத்தியிருந்தது.