நிரல்
ஒக். 13 23:24

ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்படுவார? சரணடைவாரா?

(மன்னார், ஈழம் ) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு அல்லது நாளை புதன்கிழமை அதிகாலை கைது செய்யப்படலாமென இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனால் ரிஷாட் பதியுதீன் நாளை புதன்கிழமை கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணியோடு சரணடைவாரென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. குற்றப் புலனாய்வுப் பொலிஸார் அவரைக் கைது செய்யவதற்கு முன்னர் ரிஷாட் பதியுதீன் நீதிமன்றத்தில் சரணடைவாரென்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ஒக். 11 22:30

பௌத்தம் இலங்கைத் தீவுக்கு தமிழகம் ஊடாக வரவில்லையா?

(யாழ்ப்பாணம், ஈழம்) தமிழகத்தின் வைகை நதிக்கரை நாகரிகம் தொடர்பான கீழடி தொல்லியல் ஆய்வில் இந்திய தொல்லியல் துறை ஈடுபட்டபோது குறித்த வேலைத்திட்டத்தை நகர்த்துவதில் முக்கிய பங்காற்றிய தொல்லியலாளரான அமர்நாத் ராமகிருஷ்ணா புலம்பெயர் தமிழர் வலையமைப்பு ஒன்று ஒழுங்குபடுத்திய இணையவழிக் கூட்டம் ஒன்றில் சனிக்கிழமையன்று கலந்துகொண்டு விளக்கமளித்தார். தமிழகம், புலம்பெயர் சமூகம், ஈழம் ஆகிய மூன்று முனைகளில் இருந்து பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் உள்ளடங்கலான பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு வைகை நதிக்கரையில் வழக்கில் இருந்த எழுத்துமொழிக்கும் ஈழத்தில் வெளிப்பட்டிருக்கும் தொல்லியல் சான்றுகளுக்கும் இடையிலான காலம் மற்றும் உள்ளடக்கம் தொடர்பான ஒற்றுமைகளை அறிவதில் ஈடுபாடு காட்டினர்.
ஒக். 10 11:23

வரலாற்றுப் பாடநூல்களில், இலங்கை வரலாறா? சிங்கள பௌத்த வரலாறா?

(யாழ்ப்பாணம், ஈழம்) வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசம் உள்ளிட்ட இலங்கைத் தீவின் மொத்த வரலாற்றையும் வரலாற்றுப் பாடமாக அனைத்து பாடசாலைப் பிள்ளைகளும் கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் எமது கலைத்திட்டம் (பாடத்திட்டம்) வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தனித்துவத்தை அறிந்து அதைப் பாதுகாத்து, உலகின் நிலைமைகளுக்கு முகம் கொடுக்கக் கூடிய நாட்டுப்பற்றுள்ள ஆற்றல் நிறைந்த இலங்கையரை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு பாடசாலை கலைத் திட்டத்தில் கட்டாய மையப் பாடமாக 2007 ஆம் ஆண்டிலிருந்து வரலாற்றுப் பாடம் பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இலங்கைக் கல்விக் கொள்கை மறுசீரமைப்பில் விபரிக்கப்பட்டுள்ளது.
ஒக். 09 22:59

பிசிஆர் பரிசோதனைகளின்றி சீனத் தூதுக் குழுவினர் வருகை

(வவுனியா, ஈழம்) இலங்கைக்கு வருகை தந்துள்ள 26பேர் கொண்ட சீனத்தூக்குழுவுக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பிரிசோதனைகூட செய்யப்படவில்லையென எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, சீனக்குழுவுக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கியது யார் என்றும் கேள்வி தொடுத்தார். முன்னாள் சீன வெளிவிவகார அமைச்சரும் தற்போதைய கம்யூனிஸ் கட்சியின் உயர் மட்ட அதிகாரியுமான யாங் ஜீயேஷ தலைமையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள 26 பேர் கொண்ட தூதுக்குழு இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியேர் உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளனர்.
ஒக். 05 23:24

நாடாளுமன்றம் கொரோனா பரவலைக் காரணம் கூறி ஒத்திவைக்கப்படுமா?

(வவுனியா, ஈழம்) கோவிட் 19 எனப்படும் கொரேனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் இலங்கை அரசின் நாடாளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை கூடுகின்றது. நாளை நாடாளுமன்றம் கூடியதும் அவசர நிலைமைகளினால் சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன பிறிதொரு தினத்துக்குச் சபையை ஒத்தி வைக்கலாமெனக் கூறப்படுகின்றது. அவ்வாறு ஒத்தவைக்கப்பட்ட பின்னர். வர்த்தமானி அறிவித்தல் மூலம் நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 14 நாட்களுக்கு ஒத்திவைப்பாரென அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன.
ஒக். 05 21:42

கொட்டகலையில் இராணுவ முகாம்- பெயர்க்கல் நாட்டப்பட்டது

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் தீவிரமாக இடம்பெற்ற காலத்தில் கொட்டகலை பகுதியில் இராணுவ முகாம் ஒன்றை அமைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அங்கு 581 ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்படுவதற்கான பெயர்க் கல் நாட்டப்பட்டுள்ளது. மலையகத் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் கொட்டகலைப் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள முகாமில் சுமார் 300 இராணுவத்தினர் தங்கவுள்ளதாகவும் இதனால் சுற்றுப்பறங்களில் உள்ள குடும்பங்களை வேறு இடத்திற்குச் செல்லுமாறும் இராணுவம் கூறியுள்ளது.
ஒக். 02 23:38

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும்- மகிந்த தேசப்பிரிய

(வவுனியா, ஈழம்) மாகாண சபைகளுக்கான தேர்தல்களை இந்த ஆண்டு நடத்த வேண்டுமென இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 19ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாக சென்ற யூன் மாதம் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த வேண்டி ஏற்பட்டதால் மாகாண சபைகளுக்குரிய தேர்தல்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதென்றும் மகிந்த தேசப்பிரிய கூறினார். மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டிய அவசியம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு எடுத்துக் கூறியுள்ளதாகவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
ஒக். 01 21:19

புலனாய்வுப் பொலிஸார் கண்காணிப்பதாக முறைப்பாடு

(வவுனியா, ஈழம்) போரின் போது இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்டடவர்கள் தொடர்பாகப் போராட்டம் நடத்தி வரும் உறவினர்கள், நண்பர்கள் இலங்கைப் புலனாய்வுத் துறையினரால் கண்காணிக்கப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது. தமிழர் தாயகமான வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்ட வலிந்துகாணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். நீதிகோரி முல்லைத்தீவில் போராட்டம் ஒன்றை நடத்தியதால் நேற்று முன்தினம் இரவு 8.45க்கு தனது வீட்டுக்கு வந்த புலனாய்வுத்துறை அதிகாரிகள் தமது போராட்டம் தொடர்பான தகவல்களைத் தன்னிடம் இருந்து பெற்றதாக மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
செப். 28 21:43

அடக்குமுறைக்கு எதிராக தாயகப் பிரதேசங்களில் கடையடைப்புப் போராட்டம்

(மட்டக்களப்பு, ஈழம் ) ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை ஒற்றையாட்சி அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்து இன்று திங்கட்கிழமை வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இடம்பெற்ற முழுமையான கடையடைப்புப் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. பத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து நடத்திய போராட்டத்தின்போது பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் செயழிந்தன. வர்த்தக நிலையங்கள், சந்தைகள் அனைத்தும் மூடப்படிருந்தன. இலங்கை இராணுவத்தின் எச்சரிக்கைகளுக்கு மத்தியில் போராட்டம் இடம்பெற்றது. வர்த்தக நிலையங்களைத் திறக்குமாறு இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்தபோதும், உரிமையாளர்கள் எவரும் அதற்குச் செவிசாய்க்கவில்லை.
செப். 27 20:58

13ஆவது திருத்தச் சட்டத்தையே புறக்கணித்த மகிந்த

இலங்கை ஒற்றையாட்சி அரசின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் மிலிந்தகொட உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் சிங்கள அரசியல் பிரதிநிதிகள் கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். இந்திய- இலங்கை நாடுகளின் உச்சி மாநாடு நேற்று முன்தினம் சனிக்கிழமை காணொளி மூலமாக நடைபெற்றது. இதன்போதே நரேந்திரமோடி பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்தியதாக இந்திய மத்திய வெளியுறவு அமைச்சக இந்தியப் பெருங்கடல் பிரிவு இணைச் செயலரளர் அமித் நரங் புதுடில்லியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.