செய்தி: நிரல்
ஜூலை 30 00:03

வேலை வாய்ப்புகள் வழங்கப்படுமென கோட்டாபய கூறியது சட்டத்திற்கு முரண்- ஜே.வி.பி

(வவுனியா, ஈழம்) தேர்தல் முடிவடைந்த பின்னர் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுமென ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தேர்தல் பிரச்சாரத்தில் கூறியமை தேர்தல் விதிகளை மீறும் செயல் என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா குற்றம் சுமத்தியுள்ளார். அரச நிறுவனங்கள், திணைக்களங்களில் வேலை வாய்ப்பு என்பது ஆண்டுதோறும் அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டியது. அதனை அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி நடவடிக்கைகளுக்கான வேலைத்திட்டமாகக் கருத முடியாது என்று அனுரகுமார திஸாநாயக்கா கூறியுள்ளார். தேர்தல் முடிவடைந்ததும் அரச நிறுவனங்களில் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுமென இன்று புதன்கிழமை களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியிருந்தார்.
ஜூலை 27 23:43

தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு உடன்படிக்கை இல்லை- சஜித் அணி மறுப்பு

(வவுனியா, ஈழம்) தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு எந்தவிதமான உடன்படிக்கைகளும் செய்யப்படவில்லையென சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரான முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கூட்சியோடும் ஸ்ரீலங்காப் பொதுஜன பொரமுனக் கட்சி ஆகியவற்றுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு நெருங்கிய தொடர்புள்ளதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்சவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சந்தித்துப் பேசியதாகவும் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கூறினார்.
ஜூலை 17 21:38

19ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய கோட்டாபாய முயற்சி

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரச நிறுவனங்களைச் சுயாதீனமாகச் செயற்பட வைப்பதற்கான 19ஆவது திருத்தச்சட்டத்தை ரத்துச்செய்து அனைத்து நிறுவனங்களையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முற்படுவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. 19ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டுமென பிரதமர் மகிந்த ராஜபக்ச கொழும்பில் செய்தியாளர்களிடம் வெளிப்படையாகக் கூறினாலும் அந்தத் தித்தச் சட்டத்தை ரத்துச் செய்வதற்கான இரகசிய ஏற்பாடுகள் இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது. குறிப்பாக பொலிஸ் சேவை, தேர்தல் ஆணைக்குழு, நீதிச் சேவை ஆகியவற்றை நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கொண்டுவருவது குறித்து தனக்குச் சாதகமான மூத்த வழக்கறிஞர்களோடு கோட்டாபய ராஜபக்ச தொடர்ச்சியாக ஆலோசனை செய்கிறார்.
ஜூலை 15 23:15

சமூக மாற்றத்தை முன்னிலைப்படுத்திய பத்மா சோமகாந்தன்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத்தமிழ் இலக்கிய முற்போக்கு எழுத்துலக முன்னோடிகளில் ஒருவரான எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் இயற்கை எய்தியமை, பேரிழப்பாகுமென கொழும்புத் தமிழ்ச் சங்கம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்போக்கு எழுத்துலகில் பல விருதுகளைப் பெற்று ஈழத்துப் பெண்களுக்குப் பெருமை சேர்த்தவர் பத்மா சோமகாந்தன் என்று சங்கத்தின் தலைவர் ஆ,குகமூர்த்தி வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் 1934ஆம் ஆண்டு பிறந்த இவர், யாழ் நல்லூர் சாதனா பாடசாலை, யாழ் மங்கையற்கரசி வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராக நீண்டகாலம் பணியாற்றியிருந்தார். பின்னர் யாழ் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் இவர் பணியாற்றியிருந்தார்.
ஜூலை 11 22:28

மீண்டும் கொரோனா அச்சுறுத்தல், ஒரேநாளில் 300 பேருக்கு தொற்று உறுதி

(வவுனியா, ஈழம்) இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாகத் திடீரென அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்ற வியாழக்கிழமை 87 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக 196 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது.
ஜூலை 06 22:47

வவுனியா குருமன்காட்டுப் பிரசேத்தில் புதிய இராணுவச் சோதனைச்சாவடி

(வவுனியா, ஈழம்) வடமாகாணம் வவனியா மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம்முள்ள வவுனியா குருமன்காட்டுப் பிரதேசத்தில் புதிதாக இராணுவச் சோதனைச்சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனமடைந்துள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகமள்ள இந்தப் பிரதேசத்தில் இராணுவச் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதால் அன்றாடத் தேவைகளுக்காகச் சென்றுவரும் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறு இராணுவச் சோதனைசச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதால் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் முறையிட்டுள்ளனர்.
ஜூலை 03 22:28

சிங்கள மக்களின் வாக்குகளினால் ஆட்சியமைப்போம்- மகிந்த

(வவுனியா, ஈழம்) வடக்குக் கிழக்கு மக்களின் வாக்குகள் இன்றி சிங்கள மக்களினால் ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்ய முடியுமென பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். காலி பத்தேகம பிரதேசத்தல் நேற்றுப் புதன்கிழமை மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத் தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு அரசாங்கத்தை அமைத்தால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காண முடியுமென்றும் கூறினார். சென்ற புதன்கிழமை தமிழ் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பிரதம ஆசிரியர்கள் ஆகியோரைச் சந்தித்த மகிந்த ராஜபக்ச, தமிழ் மக்களின் ஆதரவுடன் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி ஆட்சியமைக்கும் என்று கூறியிருந்தார்.
ஜூன் 29 22:33

ஜனாதிபதி இராணுவ ஆட்சி நடத்துவதாக ஐக்கியதேசியக் கட்சி குற்றச்சாட்டு

(வவுனியா, ஈழம்) ஜனாதிபதியாகப் பதவியேற்ற கடந்த ஏழு மாதங்களிலேயே இலங்கையில் இராணுவ ஆட்சியை கோட்டாபய ராஜபக்ச உருவாக்கியுள்ளதாக ஐக்கியதேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலிதரங்கே பண்டார குற்றம் சுமத்தியுள்ளார். இந்த இராணுவ ஆட்சி தொடர்பாகத் தங்போது மக்களுக்கு விளக்கமளித்து வருவதாகவும் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் அவதானித்து வருவதாகவும் அவர் கூறினார். கொழும்பில் உள்ள கட்சித் தலைமையகத்தல் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், சுயாதீனமாகச் செயற்பட வேண்டிய இலங்கைச் சுயாதீன ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஜூன் 24 22:16

நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க இந்தியா தவிர்ந்த தெற்காசிய நாடுகளின் பிரதிநிதிகள் வருவர்

(வவுனியா, ஈழம்) நடைபெறவுள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிப்பதற்காக சர்வதேசக் கண்காணிப்பாளர்களை வரவழைப்பது தொடர்பாக இலங்கைச் சுயாதீனதட் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான இலங்கைச் சுகாதார அமைச்சின் அறிவறுத்தல்களுக்கு அமைவாக சர்வதேசக் கண்காணிப்பாளர்களை வரவழைப்பதென ஏற்கனவே திர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வரவில்லையென்பதால் இந்தியா தவிர்ந்த ஏனைய தெற்காசிய நாடுகளில் இருந்து கண்காணிப்பாளர்களை வரவழைப்பது குறித்து Nணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஆலோசித்துள்ளார்.
ஜூன் 23 22:07

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் பணம் அச்சிட உத்திரவிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டா?

(வவுனியா, ஈழம்) இலங்கைக்குக் கிடைத்த நிதியுதவிகள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரிய பதில் வழங்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. நாடாளுமன்றம் மூன்று மாதங்களுக்கு மேலாகக் கூட்டப்படாத நிலையில். கிடைத்த நிதியுதவிகளின் அளவுகளுக்கு ஏற்ப எவ்வாறு பணம் அச்சிடப்பட்டது என்பது குறித்து ஏற்கனவே எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசாங்கம் உரிய பதில் வழங்கவில்லை என்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்களான சுஜீவ சேனசிங்க, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.