செய்தி: நிரல்
பெப். 18 16:19

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டுக்கரைக் குளத்தை மீட்குமாறு கோரிக்கை

(மன்னார், ஈழம்) தமிழர் தாயகமான வடமாகாணம் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டுக்கரைக்குளம் மேய்ச்சல் நிலத்தை மீட்பதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி கோரிக்கை விடுத்துள்ளார். முருங்கன் கட்டுக்கரைக்குளத்தின் உட்பகுதியில் உள்ள புல் அறுத்தான் கண்டல், கருக்காக்குளம், கட்டைக்காடு ஆகிய நானாட்டான் பகுதி மக்களின் கால்நடை மேய்ச்சல் நிலங்களே இவ்விதம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீட்டுத்தருமாறு அவர் தெரிவித்துள்ளார்.
பெப். 17 10:11

முஸ்லிம் மாணவர்களுக்காகப் புத்தளத்தில் அமைக்கப்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்திற்கு மாற்றம்

(வவுனியா, ஈழம்) தமிழர் தாயகமான வட மாகாணத்தில் வாழும் தமிழ்பேசும் முஸ்லிம் மாணவர்களுக்காகப் புத்தளத்தில் ஆரம்பிக்கப்பட்டு வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் நிர்வாகிக்கப்பட்ட ஆறு பாடசாலைகளும் அதன் ஆளனியினரும் வட மேல் மாகாண கல்வித் திணைக்களத்திற்கு முற்றாக் கையளிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வித் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். மேற்படி பாடசாலைகளைப் புத்தளத்தில் புதிதாக அமைத்து அதனை சுமார் 15 வருடங்களுக்கு மேலாகப் பராமரித்ததிற்கு வட மாகாண கல்வி திணைக்களத்தினால் பல கோடி ரூபா பணம் செலவிடப்பட்டதாக அந்த உயர் அதிகாரி கூர்மைச் செய்தித் தளத்திற்குச் சுட்டிக்காட்டினார்.
பெப். 16 17:51

மனோ கணேசனிடம் இலங்கைப் பொலிஸார் வாக்குமூலம்

(மன்னார், ஈழம்) வடக்குக் கிழக்கில் இடம்பெற்ற நடைபவனிப் பேரணியில் கலந்துகொண்டதால் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார், விசாரணை நடத்தியதாக மனோ கணேசன் கூறினார். சுமார் ஒரு மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் நேற்றுத் திங்கட்கிழமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
பெப். 13 21:55

அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள்- விமல் வீரவன்ச தலைமையில் 12 கட்சிகள் சந்திப்பு

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டுமென கூட்டணிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறியதால் ஏற்பட்ட முரண்பாடுகள் நீடித்துச் செல்வதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
பெப். 12 09:37

மன்னார் மாந்தை வடக்கில் புதிய பிரதேச செயலகம்

(மன்னார், ஈழம்) தமிழ் மக்களின் பூர்விகப் பகுதியான வடமாகாணம் மன்னார் மாவட்டத்தில் மாந்தை வடக்கு எனும் புதிய பிரதேசச் செயலகப் பிரிவை உருவாக்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரம், மாந்தை மேற்கு, நானாட்டான், மடு, முசலி எனும் ஐந்து பிரதேசச் செயலகப் பிரிவுகள் இயங்கி வரும் நிலையில் மாந்தை வடக்கு எனும் ஆறாவது புதிய செயலகப் பிரிவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பான நடவடிக்கைகளே துரித கதியில் முன்னெடுக்கப்படுவதாக மாவட்டச் செயலக அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
பெப். 10 19:03

விமல் வீரவன்ச மகிந்த ராஜபக்சவை தலைமைப் பதவியில் இருந்து மாற்ற வேண்டுமென்கிறார்

(யாழ்ப்பாணம், ஈழம்) சிறிலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் எதுவும் இல்லையென அமைச்சர் டொன்ஸ்ரன் பெர்ணான்டோ தெரிவித்தார். சிறிலங்கா பொது ஜனப் பெரமுனக் கட்சியில் அங்கம் வகிக்கும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியோடு கருத்து வேறுபாடுகள் இல்லை எனவும் விமல் வீரவன்ச கூறிய தனிப்பட்ட கருத்துக்கள் அரசாங்கத்துக்குள் பிரச்சனைகளை உருவாக்கவில்லையெனவும் அமைச்சர் டொன்ஸ்ரன் கூறினார்.
பெப். 08 22:56

மன்னார் கரையோர பிரதேசங்களில் கனிய வளங்கள் அபகரிப்பு- அவுஸ்திரேலிய நிறுவனம் மீது குற்றச்சாட்டு

(மன்னார், ஈழம் ) வடமாகாணம் தமிழர் தாயகப் பகுதியான மன்னார் மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் அவுஸ்திரேலிய நிறுவனமொன்று எவ்வித அனுமதியுமின்றி கடந்த நான்கு வருடங்களாக இல்மைனைட் மற்றும் டைட்டானியம் ஆகிய கனியவளம் தொடர்பாக மேற்கொண்ட இரகசிய அகழ்வாராய்ச்சி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதால் இலங்கை ஒற்றையாட்சி அரசு மறைமுகமாக அனுமதி வழங்கி, ஈழத்தமிழர்களுக்குச் சொந்தமான வளங்களை இரகசியமாக விற்பனை செய்வதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கனியவள அபகரிப்புத் தொடர்பாக மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் ஜூட் கொன்சால் குலாஸ் மக்கள் சார்பில் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தகவல் வழங்கியுள்ளார்.
பெப். 07 22:32

சுயநிர்ணய உரிமையைக் கோரி சிவில் சமூக அமைப்பு பொலிகண்டியில் பிரகடனம்

(யாழ்ப்பாணம், ஈழம்) ஈழத்தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு மற்றும் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றம்;, புத்தர் சிலை வைத்தல் உள்ளிட்ட அடக்கு முறைக்கு எதிராக நடத்தப்பட்ட நடைபவனிப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பொலிகண்டிப் பிரதேசத்தில் முடிவடைந்தது. கிழக்கு மாகாணத்தில் உள்ள பொத்துவில் பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை இந்தப் நடைபவனிப் பேரணி ஆரம்பித்தது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரை என்று பெயரிடப்பட்டு, ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை ஒற்றையாட்சி அரசின் கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலான அடக்குமுறைகள் வெளிப்படுத்தப்பட்டன.
பெப். 05 21:41

மன்னார் கடலில் மீன்பிடித்த மீனவர்கள் மூவரைக் காணவில்லை

(மன்னார், ஈழம் ) வடமாகாணம் மன்னார் மாவட்டத்தின் ஓலைத்தொடுவாய் பகுதியில் கடந்த ஞாயிறு அதிகாலை கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று தமிழ் மீனவர்கள் ஐந்து நாட்கள் கடந்தும் கரை திரும்பாத நிலையில் உறவினர்கள் அவர்களைத் தேடி வருவருகின்றனர். யாழ்ப்பாணம் பருத்திதுறையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய அன்டன் யேசுதாசன் அன்டன் சிவதாஸன் மற்றும் யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரான செல்வராஜ் ஜெயராம் மற்றும் மன்னார் கொண்ணையன் குடியிருப்பைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞரான சந்தான் செபஸ்டியான் ஆகிய மூன்று தமிழ் மீனவர்களே கடந்த ஞாயிறு அதிகாலை கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போய்வுள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
பெப். 04 23:04

பௌத்த தேசியக் கொடியோடு கொழும்பில் சுதந்திரதின நிகழ்வு

(வவுனியா, ஈழம்) இலங்கைத் தீவின் தலைநகர் கொழும்பில் இன்று இடம்பெற்ற இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின வைபம் ஈழத் தமிழர்களைப் போரில் வெற்றிகொண்ட நிகழ்வாகவே காண்பிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் தேசியக் கொடியோடு பௌத்த சமயக் கொடியும் இராணுவத்தின் போர் வெற்றியைக் குறிக்கும் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன. கொழும்பு -07 இல் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் எனப் பலரும் பங்குபற்றியிருந்தனர்.