நிரல்
ஜன. 10 15:15

முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டம்

(யாழ்ப்பாணம், ஈழம்) யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களினால் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இடிக்கப்பட்டமைக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழக வாசலில் கூடாரம் அமைத்துச் சுழற்சி முறையில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. திட்டமிடப்பட்டு இடிக்கப்பட்ட நினைவுத் தூபி மீளவும் அமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியே தொடர் போராட்டம் இடம்பெறுகின்றது. நாளை திங்கட்கிழமை வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் முழுமையான கடையடைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் இந்த அழைப்புக்கு தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் ஆதரவு வழங்கியுள்ளன.
ஜன. 08 23:47

இந்தியாவும் 13 ஆவது திருத்தச் சட்டமும்

(வவுனியா, ஈழம்) இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு என்ற அடிப்படையில், கடல்சார் கூட்டுப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்துழைப்பு (Maritime Domain Awareness--MDA) நடவடிக்கைகளை சில நாட்களுக்குள் இலங்கை ஆரம்பிக்க வேண்டுமென்று கட்டளையிட்டிருக்கின்றார். இதனைக் கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். இனப்பிரச்சனைக்குத் தீர்வாக இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு உட்பட 13ஆவது திருத்தச் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துவதே சிறந்தது என்றும் ஜெய்சங்கர் கொழும்பில் செய்தியாளர் மாநாட்டில் கூறியிருக்கிறார்.
ஜன. 06 21:26

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கோட்டாபயவுடன் மூடிய அறைக்குள் உரையாடல்

(வவுனியா, ஈழம்) கொழும்புக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் மூடிய அறை ஒன்றுக்குள் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகக் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற இந்த சந்திப்பில் இருவரும் தனியாகவே பேசியதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன. கோட்டாபய ராஜபக்சவுடன் ஜெய்சங்கர் கலந்துரையாடினாரென ஜனாதிபதி செயலகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால் என்னென்ன விடயங்கள் பேசப்பட்டது என்பது தொடர்பாக விரிவாகக் கூறப்படவில்லை. சமகால நிலமைகள் குறித்து இருவரும் பேசியதாக அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. நாளை வியாழக்கிழமை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை ஜெய்சங்கர் சந்திக்கவுள்ளார்.
ஜன. 04 09:25

இன அழிப்பு விசாரணையைக் கோர தமிழ்க் கட்சிகள் குழு அமைக்க முடிவு

(வவுனியா, ஈழம்) சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இலங்கையைக் கொண்டு செல்ல வேண்டும். அல்லது இலங்கை மீதான ஒரு சிறப்புத் தீர்ப்பாயத்தை உருவாக்க வேண்டுமென்று ஐ.நா செயலாளர் நாயகத்தையும் ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் மற்றும் மனித உரிமைச் சபையிடம் கூட்டாகக் கோரலாமெனத் தமிழ்த்தேசியக் கட்சிகள் அழுத்தம் காரணமாக முதற்கட்ட இணக்கம் கண்டுள்ளன. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளே இவ்வாறு முடிவு செய்துள்ளன. சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இலங்கையைக் கொண்டு செல்வதற்கான அறிக்கை ஒன்றைத் தயாரிப்பதற்கும் இந்தக் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
டிச. 31 21:07

மீண்டும் மீண்டும் சுயநிர்ணய உரிமையை நிராகரிக்கும் அரசியல் யாப்பு எதற்கு?

(கிளிநொச்சி, ஈழம்) சர்வதேசச் சமவாயத்தில் கூறப்பட்டுள்ள சுயநிர்ணய உரிமை என்ற உறுப்புரையை நீக்கம் செய்து 2007 ஆம் ஆண்டு சமவாயச் சட்டம் என்ற பெயரில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் 56 ஆம் இலக்கச் சட்டமாக இணைத்த ராஜபக்ச அரசாங்கம், தற்போது அந்தச் சமவாயச் சட்டத்தை பயன்படுத்தி ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை முற்றாகவே நிராகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. மைத்திரி ரணில் அரசாங்கம் மேற்கொண்ட புதிய அரசியல் யாப்புக்கான நகல் வரைபில்கூட சமவாயத்தின் உறுப்புரைகள் அனைத்தும் சேர்க்கப்படாதவொரு நிலையில், இலங்கை ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலத்துடன் தற்போது ஆட்சியமைத்துள்ள ராஜபக்ச அரசாங்கம் உருவாக்கவுள்ள புதிய அரசியல் யாப்பில் சுயநிர்ணய உரிமை மீண்டும் மறுக்கப்படும் அபாயம் தெளிவாகவே தெரிகிறது.
டிச. 27 21:13

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொரோனா

(வவுனியா, ஈழம்) கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே உரிய அதிகாரிகள் மற்றும் தமிழ்க் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தும் முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படவில்லையெனவும் இந்த அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் கொரோனா தொற்றுக்கு இலக்காகலாமெனக் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரும் அறிக்கை ஒன்றின் மூலம் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் எந்தவொரு தமிழ்க் கட்சி உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்கவேயில்லையென உறவினர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
டிச. 22 20:55

ஜெனீவா 30/1 தீர்மானத்திற்கு மீண்டும் சாயம் பூச முற்படும் அரசசார்பற்ற நிறுவனங்கள்

(மட்டக்களப்பு, ஈழம் ) கொழும்பை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் மாற்றுக்கொள்கை மையம் (Centre for Policy Alternatives-CPA) மற்றும் தேசிய சமாதானப் பேரவை (National Peace Council-NPC) போன்ற சில தன்னார்வ நிறுவனங்கள் சர்வதேச சக்திகளோடு சேர்ந்து 2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்து மைத்திரி - ரணில் அரசாங்கத்தை அமைப்பதற்குப் பாடுபட்டிருந்தன என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. சிங்கள அரசியல்வாதிகள் பலர் அவ்வாறு குற்றம் சுமத்தியுமிருந்தனர். இந்த அமைப்புகள் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கும் இலங்கை அரசாங்கம் அதற்கு இணை அணுசரனை வழங்குவதற்கும் (co-sponsorship) ஆதரவளித்தவை என்பதும் தெரிந்ததே.
டிச. 20 00:26

தமிழ் பேசும் மக்களின் திருகோணமலை தற்காலிகமாகத் தப்பியது

(யாழ்ப்பாணம், ஈழம்) வடக்குக் கிழக்கு தாயகப் பிரதேசத்தின் திருகோணமலை நகரை கொழும்பு நகரின் உப நகரமாக மாற்றுவது உட்பட இலங்கைத் தீவின் அபிவிருத்தித் திட்டங்களை மையமாகக் கொண்ட அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation -MCC) இலங்கையோடு செய்யவிருந்த ஒப்பந்தத்தைக் கடந்தவாரம் ரத்துச் செய்துள்ளது. 480 மில்லியன் டொலர் நிதி உதவிக்கான இந்த ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவது தொடர்பாக 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையோடு இணக்கம் ஏற்பட்டிருந்தது. ஆனால் கோட்டாபய ராஜபக்ச 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடும் ஏற்பாட்டில் காலதாமதம் ஏற்பட்டது.
டிச. 16 17:20

ஜெனீவாவை நோக்கிய தமிழர் தரப்பின் "கண்மூடிப் பூனை" அரசியல்

(யாழ்ப்பாணம், ஈழம்) சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இயங்கும் ஐ.நா. மனித உரிமைச் சபையில், ஒபாமாவின் காலத்து அமெரிக்க அரசினால், மேற்குலகின் இதர பத்து நாடுகளின் அனுசரணையுடன், மைத்திரி-ரணில் அரசாங்கத்துடன் இணைந்த வகையில் மொத்தம் பன்னிரண்டு நாடுகளால் 2015 ஒக்ரோபரில் முன்வைக்கப்பட்டதே முப்பது/ஒன்று (30/1) என்ற தீர்மானம். சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானம் அமெரிக்காவும் இலங்கையும் கருத்தொருமித்த கட்டமைப்பு (consensual framework) என்று அழைக்கப்பட்டது. இரண்டு வருடங்களுக்குள் சாதித்திருக்கவேண்டியவற்றை மைத்திரி-ரணில் அரசு செய்துமுடிக்கத் தவறியதால் 2017 ஆம் ஆண்டு மார்ச்சில் ஒரு முறையும் (34/1), 2019 மார்ச்சில் ஒரு முறையுமாக (40/1) ஏற்கனவே இரு முறை ரொல்-ஓவர் (roll-over) முறையில் இது நீடிக்கப்பட்டிருந்தது.
டிச. 14 21:51

ஜெனீவா மனித உரிமைச் சபை அமர்வுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த ஏற்பாடு

(வவுனியா, ஈழம்) ஜெனீவா மனித உரிமைச் சபை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கூடுவதற்கு முன்னர் இலங்கைத் தீவில் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து மாகாணங்களுக்குமான தேர்தலை நடத்த ராஜபக்ச அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று திங்கட்கிழமை கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய யோசனையை முன்வைத்துள்ளார்.