நிரல்
பெப். 05 21:41

மன்னார் கடலில் மீன்பிடித்த மீனவர்கள் மூவரைக் காணவில்லை

(மன்னார், ஈழம் ) வடமாகாணம் மன்னார் மாவட்டத்தின் ஓலைத்தொடுவாய் பகுதியில் கடந்த ஞாயிறு அதிகாலை கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று தமிழ் மீனவர்கள் ஐந்து நாட்கள் கடந்தும் கரை திரும்பாத நிலையில் உறவினர்கள் அவர்களைத் தேடி வருவருகின்றனர். யாழ்ப்பாணம் பருத்திதுறையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய அன்டன் யேசுதாசன் அன்டன் சிவதாஸன் மற்றும் யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரான செல்வராஜ் ஜெயராம் மற்றும் மன்னார் கொண்ணையன் குடியிருப்பைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞரான சந்தான் செபஸ்டியான் ஆகிய மூன்று தமிழ் மீனவர்களே கடந்த ஞாயிறு அதிகாலை கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போய்வுள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
பெப். 04 23:04

பௌத்த தேசியக் கொடியோடு கொழும்பில் சுதந்திரதின நிகழ்வு

(வவுனியா, ஈழம்) இலங்கைத் தீவின் தலைநகர் கொழும்பில் இன்று இடம்பெற்ற இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின வைபம் ஈழத் தமிழர்களைப் போரில் வெற்றிகொண்ட நிகழ்வாகவே காண்பிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் தேசியக் கொடியோடு பௌத்த சமயக் கொடியும் இராணுவத்தின் போர் வெற்றியைக் குறிக்கும் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன. கொழும்பு -07 இல் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் எனப் பலரும் பங்குபற்றியிருந்தனர்.
பெப். 03 22:58

பொலிகண்டி நோக்கி பொத்துவில் பிரதேசத்தில் நடைபவனி ஆரம்பம்

(அம்பாறை, ஈழம் ) ஈழத் தமிழர் தாயகத்தின் பொத்துவில் பிரதேசத்தில் இருந்து பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று புதன்கிழமை ஆரம்பித்துள்ளது. கிழக்கு மாகாணம் அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் ஆரம்பித்த நடைபவனிப் போராட்டம், இன்று திருக்கோவில் பிரதேசத்தில் நிறைவடைந்துள்ளது. நாளை வியாழக்கிழமை அங்கிருந்து மீண்டும் ஆரம்பித்து வவுனியா மன்னார் வழியாக யாழ்ப்பாணம் பொலி கண்டிப் பிரதேசத்தில் நிறைவடையவுள்ளது. தமிழ்த்தேசியக் கட்சிகள், பொது அமைப்புகள், சமயத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த நடைபவனிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெப். 02 22:57

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்திற்கு முஸ்லிம் மக்கள் ஆதரவு

(மட்டக்களப்பு, ஈழம் ) ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான அடக்குமுறை மற்றும் சிங்களக் குடியேற்றங்கள், புத்தர் சிலை வைத்தல் போன்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும் எதிராக பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தப் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் நடைபவனிப் போராட்டத்திற்குப் பூரண ஒத்துழைப்பை முஸ்லிம் மக்கள் வழங்க வேண்டுமென அவர் கேட்டுள்ளார். நாளை புதன்கிழமை ஆரம்பித்து எதிர்வரும் ஆறாம் திகதி சனிக்கிழமை வரை போராட்டம் நடைபெறவுள்ளது.
ஜன. 30 14:41

பள்ளிமுனை மேற்கில் இலங்கைக் கடற்படையினர் காணி அபகரிப்பு

(மன்னார், ஈழம் ) மன்னார் மாவட்டத்தில் பள்ளிமுனை மேற்கு தமிழ் மக்களின் வீடுகளையும் காணிகளையும் ஆக்கிரமித்துள்ள கடற்படையினருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குகள் நடைபெறும் நிலையில் பாதிப்படைந்த மக்களுக்கு மாற்றுக்காணிகள் வழங்க மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதிப்பகுதியில் தமிழர் தாயகப் பகுதியில் ஏற்பட்ட கடும் யுத்த நிலை காரணமாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் குடும்பங்கள் தமது இருப்பிடங்களைவிட்டு இடம்பெயர்ந்திருந்தனர்.
ஜன. 24 17:10

இன அழிப்புக்கான சர்வேதச நீதி மீண்டும் புறந்தள்ளப்படும் என்பதே கசிந்திருக்கும் ஜெனீவா முடிவு சொல்லும் செய்தி

புவிசார் அரசியலில் அமெரிக்க-இந்திய கேந்திர இராணுவ நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்க முன்வராவிடின் சர்வதேச போர்க்குற்ற தண்டனைகள் ஒவ்வொன்றாக மேற்குலக நாடுகளால் இலங்கைக்கெதிராக முடுக்கப்படும். அதேவேளை முன்னாள் விடுதலைப்புலிகள் மீதும் இந்தியா, மற்றும் மேற்குலகில் தண்டனைகளும் தடைகளும் இறுக்கப்படும். இன அழிப்பு என்ற குற்றத்தை மேற்குலகோ இந்தியாவோ வலியுறுத்தப்போவதில்லை. வல்லாதிக்க நலன்களுக்கு முண்டுகொடுக்கும் மனநிலையில் மட்டுமே ஈழத்தமிழர் இருந்தால் இன அழிப்பு மீதான சர்வதேச விசாரணைக்கான வாய்ப்பே எதிர்காலத்தில் இல்லாது போகும். இலங்கை அரசு தனது தந்திரோபாய நகர்வுகளை ஆரம்பித்துள்ளது. அதேவேளை 2009 காலகட்டத்தைப் போன்ற ஒரு பாரிய பொறுப்பு புலம்பெயர் ஈழத்தமிழர்களிடம் மீண்டும் சென்றிருக்கிறது.
ஜன. 20 21:53

நடந்ததென்ன? யாருடைய தவறு? விளக்குகிறார் சுரேஷ்

(வவுனியா, ஈழம்) எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை குறித்த விவகாரங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கட்சிகள் கடந்த ஒரு மாதமாகக் கலந்துரையாடி ஆவணம் ஒன்றைத் தயாரித்திருந்தன. இந்த ஆவணத்தில் கையொப்பமிடுகின்ற சர்ச்சைகள் மற்றும் தேசியம், சுயநிர்ணய உரிமை போன்ற விடயங்களைச் சில கட்சிகள் கையாண்ட விடயம் தொடர்பாகப் பல்வேறு குற்றச்சாட்டுக்களும் நிலவுகின்றன. இவ்வாறானதொரு நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் நாளேட்டின் இனி - இது இரகசியம் அல்ல என்ற பத்தியில், முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஜன. 20 17:15

குருந்தூர் மலையில் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் புத்தர்சிலை வைத்தார் அமைச்சர் விதுர

(முல்லைத்தீவு, ஈழம் ) தமிழர் தாயகப் பகுதிகளில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் சிங்கள மயமாக்கல் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக தமிழ்த்தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில், தமிழர் தாயகமான வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குருந்தூர் மலைப் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புடன் கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் கொழும்பில் இருந்து சென்று புத்தர் சிலையை அமைத்துள்ளதாகவும் பௌத்த அகழ்வு ஆராய்ச்சிப் பணிகள் அங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அமைச்சர்கள் வருவதற்காகக் குறித்த பகுதியில் உள்ள வீதிகள் அவசர அவசரமாக சீரமைக்கப்பட்டதென்றும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஜன. 16 11:17

இன அழிப்பை உள்ளடக்கி சர்வதேசப் பொறுப்புக்கூறலை தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து கோருகின்றன

(யாழ்ப்பாணம், ஈழம்) நீண்ட இழுபறிக்கும் பலத்த அழுத்தங்களுக்கும் மத்தியில் தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் மூன்று தேர்தற் கட்சி அணிகளும் ஒருங்கிணைந்து இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்புக் குற்றம், போர்க்குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கெதிரான குற்றங்களை ஐ.நா.வின் உச்சபட்சப் பொறுப்புக்கூறல் மற்றும் விசாரணைப் பொறிமுறைகளுக்குள் விரைந்து செலுத்துமாறு ஒரு கூட்டு வேண்டுகோளை சனிக்கிழமையன்று விடுத்துள்ளன. இன அழிப்புக்கான சர்வதேச நீதியை வேண்டிநிற்கும் கோரிக்கையில் சம்பந்தனும் கஜேந்திரகுமாரும் விக்னேஸ்வரனும் இணைந்து கையொப்பமிட்டுள்ளமை ஒரு முக்கிய மைல்கல்லாக நோக்கப்படும் அளவுக்கு இந்தக் கூட்டு முயற்சிக்குப் பின்னால் ஆழமான தமிழ்த்தேசியச் சக்திகள் பல முனைகளில் இருந்தும் தீவிரமாகக் களமிறங்கிச் செயற்பட்டுள்ளன.
ஜன. 15 21:38

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறவும் தயாரென ரெலோ எச்சரிக்கை

(மன்னார், ஈழம் ) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ இயக்கம் வெளியேறித் தனித்துச் செயற்படவும் தயாராக இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளன. கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடியும் என்ற எச்சரிக்கையை அதன் தலைவர் இரா. சம்பந்தனுக்குக் கடிதத்தின் மூலம் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமீபகாலச் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்தவொரு நிலையிலேயே, ரெலோ இயக்கம் இந்த முடிவுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிருப்தி பல காலமாக நீடித்திருந்தது எனவும், ஆனாலும் ஒரு சில தினங்களுக்கு முன்னரே எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதென்றும் கூறப்படுகின்றது.