செய்தி: நிரல்
ஏப். 08 17:02

ஏமாற்றப்பட்ட இளைஞர், யுவதிகள் சிலாவத்துறையில் கைது

(மன்னார், ஈழம் ) தமிழர் தாயகத்தின் வட மாகாணம் மன்னார் மாவட்டம் சிலாவத்துறைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கனடா நாட்டிற்கு செல்ல முற்பட்டார்கள் எனும் சந்தேகத்தில் 2 முஸ்லிம் யுவதிகள் 3 தமிழ் யுவதிகள் மற்றும் சிறுமியொருவர் அடங்கலாக 15 பேரையும் அவர்களுக்கு உதவி புரிந்த 4 முற்சக்கர வண்டி சாரதிகளையும் இலங்கைப் பொலிஸார் கைது செய்து மன்னார் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். மாவட்ட நீதவான் பி. சிவக்குமார் சந்தேகநபர்கள் அனைவரையும் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல உத்தரவிட்டார்.
ஏப். 07 15:52

பாரம்பரியக் காணிகளை இலங்கை இராணுவம் தொடர்ந்து அபகரிக்க முடியாது- சிவாஜிலிங்கம்

(யாழ்ப்பாணம், ஈழம்) யாழ்ப்பாணம் மிருசுவில் எழுதுமட்டுவாழ் பகுதியில் இலங்கை இராணுவம் நிலைகொண்டுள்ள தனியார் காணியை நிரந்தரமாகவே சூறையாடும் நோக்கில் கடந்த திங்கள் மேற்கொள்ளப்பட்ட நில அளவை அப்பகுதி மக்களின் எதிர்ப்பு போராட்டத்தினால் கைவிடப்பட்டதாகவும் மீண்டும் அப்பகுதியை நில அளவை செய்ய இராணுவம் முற்பட்டால் மக்கள் அதற்கும் தமது எதிர்ப்பைத் தெரிவிப்பர் என யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். தமிழர்களின் பாரம்பரியக் காணிளை இராணுவம் அபகரிக்க அனுமதிக்க முடியாதென்றும் அவர் கூறினார்.
ஏப். 06 09:06

வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஆயர் இராஜப்பு ஜோசப்பின் இறுதி நிகழ்வில் பங்குபற்றவில்லை

(மன்னார், ஈழம் ) ஆயர் இராயப்பு ஜோசப் தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத ஒருவர் என்றும் தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஆயருடைய பணிகளைத் தொடர்வோம் எனவும் கூறிச் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். சென் செபஸ்தியார் பேராலயத்தில் ஆயர் இராஜப்பு யோசப்பின் புகழுடல் அடக்கம் செய்யப்பட்ட சமாதியில் நின்று சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது. வேலன் சுவாமிகள் உள்ளிட்ட பிரமுகர்கள் இவ்வாறு சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இன அழிப்பு என்பதை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தி ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அகிம்சை வழியில் முன்னெடுத்த ஆயர் இராஜப்பு ஜோசப் நினைவாக அவருடைய உருவச் சிலை ஒன்றும் மன்னார் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஏப். 04 23:01

மன்னார் இளைஞர்கள் இருவர் இராமேஸ்வரத்தில் கைது

(மன்னார், ஈழம் ) இலங்கையில் இருந்து பாக்கு நீரிணையூடாக இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனைக் கரையைச் சென்றடைந்த இரண்டு தமிழ் இளைஞர்களை இராமேஸ்வரம் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில் இலங்கைப் பொலிஸாரும் தேசிய புலனாய்வு பிரிவினரும் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கின் அடம்பன் பகுதியில் குறித்த இளைஞர்கள் தொடர்பில் விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்துள்ளதாக அடம்பன் பொலிஸ் வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தன.
ஏப். 04 20:48

மன்னார் ஒல்லாந்தர் கோட்டையைச் சூழவுள்ள மக்களை வெளியேற்ற உத்தரவு

(மன்னார், ஈழம் ) வட மாகாணம் மன்னார் நகரில் அமைந்துள்ள ஒல்லாந்தர் கோட்டையைச் சூழவுள்ள பகுதியில் குடியிருக்கும் பொது மக்களையும் அப்பகுதியில் நிலை கொண்டுள்ள பொலிஸாரையும் வெளியேற்றி அங்கு அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலையும் அகற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கைத் தொல் பொருட்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவபாலன் குணபாலன் கூர்மைச் செய்தித்தளத்திற்கு தெரிவித்தார்.